ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலில் இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு உலக அங்கீகாரமிக்க கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதி வாழ்க்கை வாழ்ந்துவரும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று சென்னையில் வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் போது இந்திய மண்ணை நம்பி தஞ்சம் புகுந்த வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் அனுமதி அட்டைகள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலைமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு சென்ற போது, அவரது வழிகாட்டுதலின் கீழ், இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும்வகையில் வரலாற்றில் முதல்தடவையாக சர்வதேச அங்கீகாரமிக்க கடவுச்சீட்டுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
உலகில் வேறெங்கிலும் இதற்குமுன்னர் இலங்கை அரசால் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதனூடாக உலகின் எப்பகுதிக்கும் செல்லும் தகுதியை இந்தியவாழ் இலங்கை அகதிகள் இன்று முதல் பெற்றுக்கொள்கின்றனர்.