அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (22) மனுத்தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார இந்த மனுவை, ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் ஊடாக தாக்கல் செய்துள்ளார். மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி,
“தேர்தல்கள் நடக்கவிருக்கும் இந்த காலப்பிரிவில், எதிர்க்கட்சியின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவாலே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமாகும். யுத்தமொன்று இல்லாத தேர்தல் காலத்திலேயே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளனர்.
சட்டத்தில் பயங்கரவாதத்துக்கான வரைவிலக்கணம்,பயங்கரவாதி யார்? என்பது குறித்தான வரைவிலக்கணம் எதுவும் இந்த சட்ட மூலத்தில் குறிப்பிடப்படவில்லை. எந்தவொரு நபரையும் கைது செய்யலாம்.அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கும், இந்நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவுமே தேர்தலை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் இதை மேற்கொள்கின்றனர். இதனாலையே இந்நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க இச்சட்ட மூலத்திற்கு எதிராக மனுவை தாக்கல் செய்துள்ளோம் என்றார்.
ஜனநாகத்தையும், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் அடக்குமுறைக்குட்படுத்தவே தேர்தல் வருடமொன்றில் இந்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தையும், இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தையும் அரசாங்கம் கொண்டு வருவதாக பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றஞ்சாட்டினார்.
மனு தாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் மன்றில் ஆஜராகியிருந்தார்.