கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் குறித்த மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொண்டனர்.

எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது.

அநேகமான பிரதேசத்தில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து நகரங்களில் நடந்து கொண்டமை காணக் கூடியதாய் இருந்தது.

எவ்வாறாயினும் சில பிரதேசங்களில் பொது மக்களின் நடவடிக்கைகள் சுகாதார ஆலோசனைகளுக்கு எதிராக இருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது மக்கள் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக மருந்தகங்களில் திரண்டு இருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.

ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்ட போதும் பதுளை மாவட்டத்தின் வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ஆகிய பிரதேசங்களில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டிருந்தார்.

பண்டாரவளை நகரில் கொரோனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் குறித்த பிரதேசங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன