அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி பிரதிநிதிகளுடன் நடை பெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (03.10.2024) இடம்பெற்றது. காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக்கட்சி ,ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.
உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புதிய நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(03) வழங்கபட்டது.
பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் வெகு விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் நிறைவடைந்ததும் அதற்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையூடாக அறிவித்துள்ளது. நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக தமது அலுவலகம் கடமைப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கமைய, சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 4ஆவது தவணையை வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத குழந்தைகளை இனங்கண்டு அவர்களுக்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் சான்றிதழ்களை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். 
இலங்கைக்கு நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். ஒருநாள் விஜயமாக இலங்கை வருகின்ற அவருடன் இந்தியாவின் முக்கிய உயர்மட்டத் தூதுக்குழு ஒன்றும் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைத் தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கும் வகையிலான பிரேரணை ஒன்றை நிறைவேற்றுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை, சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அதன் ஆசியப் பிராந்திய பிரதி பணிப்பாளர் மீனாக்சி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் தெரித்துள்ளார். இலங்கையில் புதிதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.