குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சிலர் நீரை சேமித்து வைப்பதற்காக குறித்த பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்தும் போது, அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலிருந்து சில இரசாயனங்கள் நீருடன் கலப்பதாக உணவு பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அவற்றில் சில இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் குடிநீர் நிரம்பிய பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் குடிநீரை போத்தல்களில் நிரப்பும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.
குடிநீரைச் சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தப்படும் 19 லீட்டர் பிளாஸ்டிக் போத்தல்கள், சில வறண்ட வலயங்களில் தண்ணீரைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் அவை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.