பொதுத் தேர்தலில் எந்தவொரு வகிபாகத்தையும் கொண்டிராமல் இருப்பதற்குத் தமிழ் மக்கள் பொதுச்சபை தீர்மானித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் தமிழ் மக்கள் பொதுச்சபை ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலை ஒரு தேர்தலாகவோ பதவிக்கான போட்டியாகவோ தமது அமைப்பு கருதவில்லை எனத் தமிழ் மக்கள் பொதுச்சபை அறிக்கையொன்றை விடுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகக்குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலைஇ தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பரீட்சார்த்த களமாகக் கையாள முன்வந்ததுடன் அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றதாகத் தமிழ் மக்கள் பொதுச்சபை தெரிவித்துள்ளது.

எனினும் பொதுத் தேர்தல் பதவிகளுக்கான போட்டி, அரசியலாகவும் மக்களை அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர் சார்ந்து கூறுபடுத்திச் சிதறடிக்கும் செயற்பாடுகளை முதன்மையாகக் கொண்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளை அவர்களது பதவிக்கான நலன்களுக்கு அப்பால் அழைத்துச்சென்று ஒருங்கிணைக்கும் கால அவகாசமோ சாத்தியமோ தமிழ் மக்கள் பொதுச்சபைக்குத் தற்போதைய நிலையில் இல்லையென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி நோக்கங்களுக்காக எதிரணியாகப் பிரிந்து நின்று மக்களின் ஒற்றுமையைச் சிதறடிக்கும் போட்டி அரசியல் என்பது தமது உன்னதக் குறிக்கோளுக்கு முற்றிலும் விரோதமானது எனத் தமிழ் மக்கள் பொதுச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு வகிபாகத்தையும் கொண்டிராமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கத்துவ அமைப்புகள் அனைத்தும் தேர்தல் தொடர்பான பொருத்தமான தீர்மானங்களைத் தத்தமது அமைப்பு சார்ந்து மேற்கொள்ளுமாறும் தமிழ் மக்கள் பொதுச்சபை அறிவித்துள்ளது.