கொழும்பில் ஸ்தம்பித்திருக்கும் வெளிமாவட்ட மக்களை இம்மாதம் 20ஆம் திகதிவரை,அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் தமிழ் மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

சுகாதாரத்துறையின் கோரிக்கைப்படி மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்ட மக்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை சொந்த ஊருக்கு அனுப்புவதில்லை என அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாக, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் விஜயதாச ராஜபக்‌ஷ தன்னிடம் தெரிவித்ததாக, மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் தாம் கலந்துரையாட உள்தாகவும், எது எப்படி இருந்தாலும், தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும்வரை கொழும்பில் ஸ்தம்பித்துள்ள வௌிமாவட்டத்தவருக்கு, வாழுமிடங்களில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

சனிக்கிழமை (11) காலை, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.