பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமான் கொலை, 5 வர்த்தகர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை-

sulaimanகொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமான் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகிக்கப்படும் ஐந்து வர்த்தகர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடைவிதித்து, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொழும்பு குற்றப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்ற பிரிவினர் மற்றும் கேகாலை பொலிஸார் இணைந்து 8 குழுக்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மாவனெல்ல நீதவான் எல்.கே.மஹிந்த மேற்கொண்டதாக, மேலதிக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரிஷாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக கேகாலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு விஷேட வைத்தியர் மூலம் பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், பிரிஷாந்த ஜெயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரை இந்த விடயம் குறித்து இறந்ததாக கூறப்படுபவரின் நண்பர்கள் மற்றும் வர்த்தகர்கள் சிலரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை வர்த்தகர் காணாமல் போன பின்னர் 2 கோடி ரூபாய் கப்பம் கோரி தொலைபேசி அழைப்பு கேகாலை பகுதியில் இருந்து வந்ததாகவும், சடலம் கண்டெடுக்கப்பட்டது கேகாலையை அண்மித்த பகுதியில் இருந்தே எனவும், குறிப்பிட்ட பிரிஷாந்த ஜெயக்கொடி, இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனவும், அந்த அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். உயிரிழந்ததாக கூறப்படும் வர்த்தகரிடமிருந்து கடன் பெற்ற மற்றும் குறித்த வர்த்தகர் கடன் வாங்கிய வர்த்தகர் குறித்து விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளதாக, பொலிஸ் தரப்பின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பம்பலப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமான், கடந்த 21ம் திகதி இரவு நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, இரவு 11.15 அளவில் மனைவிக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார். பின்னர் அவரது மனைவி வீட்டைத் திறந்து வெளியே வந்தபோது, சுலைமானது கைக்கடிகாரம் மற்றும் அவர் கொண்டு வந்த உணவுப் பொதியும் நிலத்தில் கிடந்ததாக, பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த சிலரே கணவரைக் கடத்தியிருக்கலாம் எனவும் அவரைத் தேடித் தருமாறும், சுலைமானின் மனைவி அன்றைய தினமே பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த நபரொருவரின் பழுதடைந்த நிலையிலான சடலம், மாவனெல்ல பகுதியிலிருந்து மீட்கப்பட்டதோடு, அது காணாமல் போன வர்த்தகருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டதோடு பின்னர் கொழும்பில் இருந்து பொலிஸ் குழுவும், வர்த்தகர் சுலைமானது தந்தை உள்ளிட்ட உறவினர்களும் அப் பகுதிக்கு சென்றுள்ளனர். இதேவேளை, சடலத்தில் இருந்த சில அடையாளங்கள் மற்றும் ஆபரணங்களைக் கொண்டு அது தனது மகன் என அவரது தந்தை குறிப்பிட்டிருந்தார். மேலும், கைப்பற்றப்பட்ட சடலம் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை பம்பலபிடி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் முஹமட் ஷாகிப் சுலைமான் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இன்று அவரது சடலம் குறித்த பிரேதப் பரிசோதனைகள் கோகலை வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரி ரமேஷ் அலகியவத்தவினால் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி மரணத்துக்குக் காரணம் தட்டையான ஆயுதத்தினால் தலையின் பின் பகுதியில் தாக்கப்பட்டமையால் உடலின் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளமையே என தெரியவந்துள்ளது. மேலும், அவர் கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலம் வரையான காலப்பகுதியில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.