வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் எனட் டிக்ஷன் சந்திப்பு-

ddஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உதவித் தலைவர் எனட் டிக்ஷன் தலமையிலான அதிகாரிகள் குழு, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை யாழில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இச் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், நெல்சிப் திட்டத்தின் 2ம் பகுதி தொடர்பாகவும், விவசாயத்துறை நவீன மயப்படுத்தல் தொடர்பாகவும், மூலோபாய நகரங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் ஆராய்வதற்காகவே அவர்கள் வருகை தந்திருந்தனர். இதன்போது யாழ். நகரத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம். விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் தொடர்பாக பேசுகையில், குறிப்பாக நாங்கள் வழக்கத்தின் அடிப்படையில் சில விவசாய நடவடிக்கைகளுக்கான சில முறைகளை கையாண்டு வருகின்றோம். ஆனால் வியாபார நோக்கம், காலநிலை, நிலத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சில மாறுதல்களை மேற்கொள்ளலாம். அவை தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம். இதேவேளை வடமாகாணத்தில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டுமான வசதிகள் தொடர்பாக உலகவங்கி உதவிகளை வழங்கும். என கூறியிருக்கின்றார்கள். அதனை நாங்கள் வரவேற்றிருக்கின்றோம். மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு அவ்வாறான உதவிகள் நிச்சயமாக தேவை என்பதையும் நாங்கள் வலியுறுத்தி கேட்டிருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இணையத்தளத்தில் ஊடுருவிய இருவர்-

hackerஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17வயது மாணவன் சிறுவர் நன்னடத்தை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பில் கைதான 26வயது இளைஞர் எதிர்வரும் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றுபகல் மேற்படி இருவரும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மாணவர் கடுகண்ணாவ பகுதியில் வைத்து நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டிருந்ததோடு, இரண்டாமவரான இளைஞர் மொரட்டுவையில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் முடக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனட் டிக்சன் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாம் மக்கள் சந்திப்பு-

sss (2)யாழ். குடாநாட்டுக்கு நேற்றையதினம் சென்றிருந்த உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் எனட் டிக்சன் தலைமையிலான குழுவினர், மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமுக்கு விஜயம்செய்து, அங்கிருந்த மக்களை சந்தித்துள்ளனர். இதன்போது அம் மக்களுடைய வாழ்க்கைத் தரம், உட்கட்டுமான வசதிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன், மக்களின் பிரச்சினைகளை மக்களிடமே நேரடியாக கேட்டு அறிந்து கொண்டனர். இச் சந்தர்ப்பத்தில், 27 வருடங்களாக பல்வேறு விதமான அவலங்களுக்கு மத்தியில் நிரந்தர தொழில் மற்றும் வாழ்வாதார உதவிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக மக்கள் உலக வங்கியின் அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளனர். அத்துடன், தங்களுடைய நிலங்களை மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்குமாறும், பருவமழை ஆரம்பிக்கும் நிலையில் மழை வெள்ளத்தினால் வருடாந்தம் ஏற்படும் பாதிப்புக்களுக்கு நிவாரணம் கிடைக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர். மேலும், தம்மை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கும்படியும் குறித்த மக்கள், வருகைதந்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் மக்களுடைய கருத்துக்களுக்கு பதிலளித்த எனட் டிக்சன் சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர், உலக வங்கி வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டுமான உதவிகளை வழங்கும் என்றார்.

அரச அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து தப்பிச்சென்ற புலி உறுப்பினர்கள்-

mangala_samaraweeraயுத்தம் நிறைவடைந்த சில வாரங்களில் சில தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், எனினும் அவ்வாறு சென்றவர்கள் காணாமல் போயுள்ளோர் பட்டியலில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் அவர்கள் குறித்தும் ஆராயவேண்டும் எனவும், அதற்கு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது குறித்த சட்டத்தில் இடமுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது தொடர்பிலான தற்போதைய நிலைமைகள் குறித்து வெளிநாட்டு, உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில், வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மங்கள சமரவீர இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை குறித்த அலுவலகம் தொடர்பில் சிலர் மக்களுக்கு தவறான கருத்துக்களை கொண்டு செல்வதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்ட சில திருத்தங்களையும் அதில் உள்ளடக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், அதற்கு நீதிமன்றத்துக்கான அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் அதன் பரிந்துரைகள் இலங்கை சட்டத்தின் படியே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வடக்கில் பேரணி-

1472540423_download (1)வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதிப் பொறிமுறைகளே அவசியம் என, வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று வடக்கில் மாபெரும் பேரணியினை முன்னெடுத்திருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கம் மற்றும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சார்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களும், பொதுமக்களும் சமூக நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் தமது கோரிக்கைகளை ஏகோபித்த குரலில் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள். யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்றுகாலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வதிவிட காரியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது. பேரணியின் நிறைவில், ஐ.நா சபையின் வதிவிட காரியாலயத்தில் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணிக்கு ஓர் பகிரங்க சமர்ப்பித்தலையும் அவர்கள் வழங்கியதுடன், அந்த மகஜரின் பிரதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கும் அனுப்பி வைத்தனர். அந்த மகஜரில், ஆகஸ்ட் 2016 முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையானது, பாதிக்கப்பட்டோரின் குரலையும் கவனத்திற்கெடுத்து அவர்களின் கோரிக்கைகளையும் உரியமுறையில் உள்ளடக்கி வெளிவந்துள்ளது.

எமது துயரங்களை, இழப்புகளை, மறுக்கப்பட்டுள்ள எமது உரிமைகளை, இன்றுவரை நாம் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் முடிவுறா அச்சுறுத்தல்களை, எமது கோரிக்கைகளை பாதிக்கப்பட்டோரின் வாய் மூலமாகவே உலகுக்கு எடுத்துரைக்கும் ஒரு சர்வதேச நியாயப் பத்திரிகையாக இவ் அறிக்கையை பார்க்கின்றோம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் காரணமாக வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மற்றும் அவர்களின் குடும்ப உறவுகள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள் சார்ந்து மேற்படி அறிக்கையையும் ஆதாரமாகக் கொண்டு எமது கருத்துக்களை முன்வைக்கிறோம்.

இலங்கை அரசானது நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கல் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் என்பன பற்றி கதைத்து வருகிறது.

ஜ.நா.வையும் சர்வதேச நாடுகளையும் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாக நம்பச் செய்கிறது. பலர் நம்புகின்றனர். ஆனால் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை யார் அறிவார்கள்?

நிலைமாறுகால நீதிக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான முன் நிபந்தனை அரச வன்முறைப் பொறிமுறைகளை முடக்குவதும் அவற்றை கண்காணிப்புக்குள் வைத்திருப்பதும் ஆகும். இலங்கை அரசு இதில் கவனம் செலுத்தவில்லை. அரச வன்முறைப் பொறிமுறைகளான படைத்தரப்பும் புலனாய்வுத் தரப்பும் வடக்கு, கிழக்கில் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டிருப்பதன் மூலம் பொதுமக்களின் உரிமைகள் அத்துமீறப்பட்டு வருகின்றன.

அவர்கள் இன்றுவரை அச்சுறுத்தலுக்கும் இன்னோரன்ன நெருக்கடிகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை தொடர்ந்தும் இராணுவ மயமாக்கலுக்குள்ளும் கண்காணிப்புக்குள்ளும் வைத்துக்கொண்டு இலங்கை அரசு எவ்வாறு நல்லிணக்கத்தை முன்னெடுக்க முடியும்?

இலங்கையில் தற்போது சுயாதீன மனித உரிமைகள் ஆணையகம் அமைக்கப்பட்டு இயங்கிவருகிறது. நீதித்துறை, பொலிஸ் இலாகா ஆகிறவற்றை சுயாதீனப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அரச வன்முறைப் பொறிமுறைகளை நெறிப்படுத்தாவிட்டால் மேற்கூறிய எந்தவொரு முன்னெடுப்பும் பயனற்றுப்போகும். சுயாதீனப்படுத்தலும் நல்லிணக்கமும் கேள்விக்குறியாகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், தமது உயிர்வாழும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளனர். இவர்கள் எங்கே என்ன நிலையில் இருக்கிறார்கள்? இருக்கிறார்களா இல்லையா என்பதை அறியத் துடித்துக்கொண்டிருப்பவர்கள் இவர்களின் குடும்ப உறவுகளே. இந்த குடும்ப உறவுகளும் தாக்குதல் இலக்காக மாற்றப்பட்டுள்ளனர். நல்லாட்சி அரசிலும் இது இன்றுவரை தொடர்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் அச்சுறுத்தப்படுவதானது உண்மையைக் கண்டறிவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். அத்துடன் இது சாட்சிகளுக்கு பாதுகாப்பு கிடையாது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. எனவே இது அடிப்படையில் நிலைமாறுகால நீதியின் நியாயாதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

நிலைமாறுகால நீதியை முன்னெடுக்கும் நாடுகள் பரஸ்பரம் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவது அவசியம். இலங்கை அரசு அரசியல் இயலாமையிலும் நல்லிணக்கம் சார்ந்து நேர்மையான எண்ணப்பாடு இல்லாமலும் இருப்பதாகவே காண்கிறோம். எனவே, வடக்கு, கிழக்கு மக்களுக்கு நீதியை வழங்கவோ சமாதானமான வாழ்வை உருவாக்கவோ இயலாத நிலையிலேயே இலங்கை அரசுள்ளது.

வலிந்து காணமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறைகளே அவசியம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளுக்கும் ஏனைய சாட்சிகளுக்கும் இவ் விடயம் சார்ந்து செயற்படும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட அரச வன்முறைப் பொறிமுறைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இவையாவையும் முறையே நடைபெறவும் உண்மையான நல்லிணக்கம் ஏற்படவும் வேண்டுமாயின் ஐ.நா. இலங்கையின் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளில் இணைப் பங்காளியாக வேண்டும் என்றும் அந்த மகஸரில் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்கள், சமூகவியலாளர்கள், பொது மக்கள் மற்றும் பொது அமைப்பினைச் சார்ந்த 100ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.