Header image alt text

வன்னிப் பெண்ணுக்கு சமாதானத்துக்கான சர்வதேச விருது

_thavachiri_charles_vijayaratnamதவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம்   இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உழைத்து வருகின்ற பெண் ஒருவர் சர்வதேச சமாதான விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.கிளிநொச்சி மாவட்டம் திருநகர் வடக்கைச் சேர்ந்த 49 வயது தவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம் இந்த விருதுக்காகத் தெரிவாகியிருக்கின்றார். Read more

News

Posted by plotenewseditor on 4 August 2013
Posted in செய்திகள் 

மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் பேரணி-

130804131321_battiprotest_304x171_bbc_nocreditமட்டக்களப்பு மாவட்டத்தில் கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு வலுயுறுத்தி இன்று கவனயீர்ப்பு பேரணி நடத்தப்பட்டுள்ளது.     இன்றுகாலை மாங்காடு பிள்ளையார் கோவிலிருந்து ஆரம்பமான பேரணி குருக்கள் மடம் ஐயனார் கோயிலை சென்றடைந்துள்ளது. கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்றவர்கள் சிவபுராணத்தை ஓதியவாறு ஆலயங்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் சுலோகங்களை ஏந்திச்சென்றிருந்தனர். இதேவேளை கோயில்கள் சேதமாக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுவாஞ்சிக்குடி பொலீசார் அறிவித்துள்ளனர்

இலங்கையர்களும் உள்ளடங்கிய படகுகள் ஆஸியை அடைந்தன-

இலங்கையர்களும் உள்ளடங்கிய அகதிகளின் குழுக்கள் இரண்டு நேற்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளன. இக்குழுவில் 16பேர்  இலங்கையர்கள் என கூறப்படுகிறது. இந்த குழுவினர் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் கெவின் ரட், பதவி ஏற்பதற்கு முன்னதாக இலங்கையிலிருந்து தங்களின் பயணத்தை ஆரம்பித்திருப்பதாக தெரியவருகிறது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் தொடர்பான சட்டங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது தெரியவருகிறது. கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதிகள் முகாமிற்கு இவர்கள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர்.

விருப்பு இலக்கங்களை வழங்க நடவடிக்கை-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் எதிர்வரும் இரண்டொரு தினங்களில் வழங்கப்படவுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள 10 மாவட்டங்களின் தேர்தல் செயலகங்களாலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பெயர் விபரங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதி நிலையை அடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி நாளை அல்லது நாளை மறுதினம் வேட்பாளர்கள் தங்களின் வேட்பு இலக்கங்களை மாவட்ட தேர்தல்கள் செயலகங்களில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய் பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு-

யாழ். கோப்பாய் பொலீஸ் நிலைய பொலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இன்றுகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி அத்தியர் இந்து கல்லூரியில் நாளை நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான பாதுகாப்பு கடமையில் நேற்றிரவு ஈடுபட்டிருந்த குறித்த பொலீஸ் உத்தியோகஸ்தரே காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக கடமையாற்றும் பண்டாரவளையை சேர்ந்த நு.ஆ.புத்ததாச (வயது 48) என்பவராவார். இவர் மாரடைப்பின் காரணமாகவே மரணமடைந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வெலிவேரிய சம்பவத்தில் மூன்றாவது நபரும் உயிரிழப்பு –

கம்பஹா மாவட்டம் ரதுபஸ்வல இரசாயன கழிவு நீர் பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த 01ம் திகதி வெலிவேரிய நகர மத்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபரும் இன்று உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 29 வயதுடைய ஆண் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுத்தமான குடிநீர் கேட்டு கடந்த முதலாம் திகதி மாலை 5மணியளவில் போராட்டம் நடத்திய பிரதேச மக்கள்மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உடனேயே 17 வயதுடைய இளைஞன் பலியானதுடன் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்றிரவு 19வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு இன்றுகாலை இன்னும் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு அறிவித்துள்ளது.

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அனுமதியில்லை

படகுகள் மூலம் வரும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது நாட்டில் குடியேற்றப்பட மாட்டர்கள் என அவுஸ்ரேலியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. குடியேற்றவாசிகளை குடியமர்த்துவது தொடர்பில் உடன்படிக்கையொன்றில் அவுஸ்ரேலியாவும் நவ்ரூ இராஜ்ஜியமும் நேற்று கைச்சாத்திட்டுள்ளன. புதிய உடன்படிக்கைக்கு அமைய அகதி அந்தஸ்தை பெற்றுகொள்ளும் பொருட்டு படகுகள் ஊடாக சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு வருகை தருபவர்கள் நவ்ரூ இராஜ்ஜியத்திற்கு அனுப்பப்படவுள்ளனர். இவர்களின் புகலிடக் கோரிக்கை உறுதிசெய்யப்பட்டாலும், தொடந்தும் நவ்ரூ தீவில் தங்கவைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமலையில் மீனவர்கள்தாக்குதல்-மீது தாக்குதல்-

திருகோணமலை கடற்பரப்பில் மீனவர்கள் சிலர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிண்ணியாவிலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிலரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மூன்று மீனவர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கிண்ணியா பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தேர்தல் பகுதிகளில் நடைபவனிகள், ஊர்வலங்களுக்குத் தடை-

மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் நடைபவனிகள், பிரசார ஊர்வலங்கள் மற்றும் மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டங்களை நடத்த வேண்டாம் என தேர்தல்கள் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்வேறு தரப்பினர் ஏற்பாடு செய்யும் இத்தகைய நிகழ்வுகளை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கலாம் என்பதால் தேர்தல்கள் செயலகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இதற்கமைய வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதிவரை நடைபவனிகள், பிரசார ஊர்வலங்கள் மற்றும் தெளிவூட்டல் கூட்டங்களை நடத்தக்கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு-

Capture

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கு ஒன்று யாழ். மானிப்பாய் சாவற்காடு பிரதேசத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை மிகப் பெரும்பான்மையாக வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திப் பேசியதுடன், வட மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இக்கருத்தரங்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் கௌரகாந்தனும் கலந்துகொண்டு உரையாற்றினார். ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

வட மாகாணசபை வேட்பாளர் சடலமாக மீட்பு-

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகம், ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலீசார் தெரிவித்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இதுபற்றிய விசாரணைகளை யாழ். பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.நா அறிக்கை தொடர்பிலான பான்கீ மூனின் நிலைப்பாடு-

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஐ.நா செயலர் பான்கீ மூன் ஆராய்ந்து வருவதாக த இன்னர்சிட்டி பிரஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் யுத்தம் தொடர்பான செயற்பாடுகளில் ஐ.நா சபை தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட அறிக்கை ஒன்றின் அடிப்படையில், ஐ.நா கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்த மற்றுமொரு அறிக்கை பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆராந்து வருகின்ற பான்கீ மூன் இது தொடர்பான தமது நிலைப்பாட்டை அடுத்தமாதம் அறிவிப்பார் என ஐக்கிய நாடுகளின் ஊடக பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனத்தில் தீ விபத்து- அம்பாந்தோட்டை –

கட்டுவௌ சந்தியில் உள்ள சீனாவின் கெனிக் வீதி நிர்மாண நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 8.45 அளவில் இத்தீ விபத்து ஏற்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டை பொலீசார் மற்றும் நிறுவன ஊழியர்கள் இணைந்து தீயை அணைத்துள்ளனர். தீ விபத்தால் ஊழியர்களின் விடுதிக்கும் அங்கிருந்த ஆவணங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. சேத விபரம் இன்னும் கணிக்கப்படவில்லை. மின் ஒழுக்கு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கை – இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை-

கொழும்பில் ஆகஸ்ட் 7-ஆம் திகதி இந்திய, இலங்கை தூதரக அதிகாரிகள் முன்னிலையில் இலங்கை-தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளின் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து டில்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் கூறுகையில், இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவர இச்சந்திப்பு நடைபெற வேண்டும் என இந்தியா விரும்புகிறது என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக, இக்கூட்டம் ஆகஸ்ட் 1-ஆம் திகதி நடப்பதாக இருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு கொழும்பு செல்ல தமிழக மீனவர்கள் விரும்பினர். ஆனால், முதல்வரைச் சந்திக்க நேரம் கிடைக்காததால் பயணத்தைத் தாற்காலிகமாக மீனவர்கள் தவிர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இராணுவம் நடமாடக் கூடாது –

சுரேஷ் எம்.பி- வடக்கில் தேர்தல் ஜனநாயகமாக நடைபெற விரும்பினால் படையினர் சிவில் உடையிலோ, சீருடையிலோ நடமாட கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியிறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றுகாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனைக் கூறியுள்ளார். யாழில் 13 ஆயிரம் இராணுவத்தினரே இருப்பதாக கூறப்படுகின்றது, யாழ்ப்பாணம் மட்டும் வடக்கல்ல, 10லட்சம் பேர் வாழ்கின்ற வடக்கு மாகாணத்தில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு யாழ் வந்திருந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தான் இராணுவத்தினரை யாழ்பாணத்தில் காணவில்லை என கூறியிருந்தார். இங்குள்ள இராணுவத்தினர் சிவில் உடையில் இருப்பது அவருக்கு எவ்வாறு தெரியும்? நேற்று வல்வெட்டித்துறை. தீருவிலில் வல்வெட்டிதுறை நகர சபையினரால் அமைக்கப்பட்டிருந்த பொது பூங்காவின் பெயர்பபலகை இனம் தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. அந்த இனம்தெரியாதவர்கள் இராணுவத்தினரே என நாம் சந்தேகப்படுகின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாகாண சபை வேட்பாளர்களுக்கு அறிவூட்டல் கருத்தரங்கு-

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான தேர்தல் சட்டம் தொடர்பிலான அறிவூட்டல் கருத்தரங்குகளை நடத்த தேர்தல்கள் செயலகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 6, 7ஆம் திகதிகளில் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்ளிலுள்ள வேட்பாளர்களுக்கு கருத்தரங்குகளை நடத்தவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார் எதிர்வரும், 12 மற்றும் 13 ஆகிய இரு தினங்களிலும் வட மாகாணசபைக்கான வேட்பாளர்களுக்கு கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன. தேர்தல் சட்டவிதிகளுக்கு அமைய வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களை முன்னெடுப்பதற்குரிய வழிமுறைகளை பின்பற்றுவதற்கு வசதியாக இந்த அறிவுறுத்தல் கருத்தரங்குகள் நடத்தப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்ற பட்சத்தில் பொலீசார் சட்டங்களை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த அறிவூட்டல் கருத்தரங்குகள் மூலம் எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அடையாள அட்டை பெற இன்றும் வசதி-

இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்காத, இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, அதனை பெற்றுக்கொள்வதற்காக இன்று முழுவதும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாணவர்கள் நேரடியாக சமூகமளிக்கத் தேவையில்லை என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத் குமார குறிப்பிட்டுள்ளார். பெற்றோர் அல்லது வேறு எவரேனும் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர் மாணவர்களின் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள சந்தர்பபம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேசிய அடையாள அட்டைக்காக உரிய விண்ணப்பபடிவத்துடன் தேவையான ஆவணங்களை சமர்பித்து நாளைக்குள் மாணவர்கள் தேசிய  அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐ.நா. கோரிக்கை-

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அடக்குமுறைகள் எதுவுமின்றி சுதந்திரமான முறையில் தங்களது கடமைகளை மேற்கொள்ள ஊடகவியலாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஐ.நா கேட்டுள்ளது. ஐ.நா அமைப்பின் பொதுச் செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீயிடம் இன்னர்சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இலங்கையின் ஊடக சுதந்திரம் தொடர்பில் பாரியளவில் சர்ச்சைகள் நிலவி வருகின்றது. ஊடக சுதந்திரம் மிகவும் அவசியமானது. கம்பஹாவின் வெலிவேரிய தாக்குதல் குறித்து தற்போதைக்கு எதுவும் குறிப்பிட முடியாது. இதேவேளை, இலங்கை, யுத்தத்தின் போது ஐ.நா அமைப்பின் பங்களிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைப் பரிந்துரைகள் கவனத்திற் கொள்ளப்படும் என நெசர்கீ மேலும் கூறியுள்ளார்.

142 உறுப்பினர்களை தெரிவு செய்ய 3785 பேர் போட்டி-

வடக்கு, மத்திய, மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 142 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக நடைபெறும் இத் தேர்தலில் 3785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் சார்பாக 2279 வேட்பாளர்களும் சுயேட்சைக்குழுக்கள் சார்பாக 1506 வேட்பாளர்களும் போட்டியிடுவதாகத் தேர்தல் ஆணையாளர் கூறியுள்;ளார். இதேவேளை அரசியல் கட்சிகளின் 5 வேட்பு மனுக்களும் சுயேட்சைக் குழுக்களின் 4 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் 2 கட்சிகளினதும் ஒரு சுயேட்சைக் குழுவினதும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் 2 கட்சிகளின் வேட்புமனுக்களும் புத்தளத்தில் ஒரு அரசியல் கட்சியின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆஸி. செல்லத் தயாரான 39பேர் மாத்தறையில் கைது-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு தயார் நிலையில் இருந்த ஒரு தொகுதியினர் நேற்றிரவு மாத்தறையில் வைத்து பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை, கனத்தகொட பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 39 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு அதில் 18 ஆண்களும் 07 பெண்களும் 14 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று மாத்தறைப் பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் உரிமைக்கு மதிப்பளிக்கவும் –

அமெரிக்கா- கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதான அசம்பாவிதம் குறித்து ஐக்கிய அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வதற்குள்ள உரிமைக்கு மதிப்பளிக்குமாறு அமெரிக்க இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் கண்காணிப்பு குழு-

வடமாகாண சபை தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு விரைவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகத்தினரை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒருவார காலமாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, வியாழனன்று மதியம் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ள காலகட்டத்தில் தேர்தல் சூழ்நிலைகளை கண்காணிக்க சார்க் அமைப்பு, ஆசிய தேர்தல் ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு ஆகியவை வருகை தரவுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப கால அவகாசம் நிறைவு-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால்மூல விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் குறித்த விண்ணப்பங்கள் கையளிக்கப்பட வேண்டுமென தேர்தல் செயலகம் குறிப்பிட்டிருந்தது. இதற்கான வாக்காளர்களின் பெயர்ப்பட்டியல் தேர்தல் மற்றும் பிரதேச செயலகங்களிலும், கிராமசேவகர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது. இதேவேளை, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பிப்பதற்கு எதிர்வரும் 12ஆம் திகதிவரை சந்தர்ப்பம் காணப்படுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

கொழும்பு தெற்கு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி-

கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 8ஆம் திகதிமுதல் 13ஆம் திகதிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுகத்தின் முதற்கட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 5ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார். கடலின் நடுவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் நேரில்காண அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு 2016ல் துறைமுக விஸ்தரிப்பு பணிகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செப்டம்பர் 21ஆம் திகதி தேர்தல்-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த மாகாண சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் இன்று நண்பகல் 12மணியுடன் நிறைவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி மாகாண சபைகளின் தேர்தலுக்காக கடந்த 25ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை வேட்புமனுக்கள் தக்கல் செய்யப்பட்டு வந்தன. 16 அரசியல் கட்சிகளும் 49ற்கும் அதிகமான சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

வட மாகாணசபை தேர்தலில் 11 கட்சிகள், 9 சுயேட்சைகள் போட்டி-

வடமாகாண சபைத் தேர்தலில் 13 அரசியல் கட்சிகளும் 10 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தன. எனினும் வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகளுள் யாதிக சங்வர்த்தன பெரமுண, எமது தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் மற்றும் முருகன் குமார வேல் தலைமையிலான சுயேட்சைக் குழுவினது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 20 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்த 3 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக மனு காணப்டாமையே காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 9 சுயேட்சை குழுக்களும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளன. யாழ்ப்பாணத்தின் 16 ஆசனங்களுக்காக 380பேர் போட்டியிடவுள்ளனர். 526 வாக்களிப்பு நிலையங்கள் யாழில் அமைக்கப்படவுள்ளன. யாழ் மத்திய கல்லூரியில் வாக்குகள் எண்ணும் பணி இடம்பெறவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 6 ஆசனங்களுக்காக 171 பேர் போட்டி-

வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக்குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்துள்ள வேட்புமனு தாக்கல் செய்யும் கால எல்லைக்குள் 12 அரசியல் கட்சிகளும் 8 சுயேற்சைக்குழுக்களும் வவுனியா மாவட்டத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. இந்நிலையில் செல்லையா விஜயகுமார் தலைமையிலான சுயேற்சைக்குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என வவுனியா தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக் குழுக்ளையும் சேர்ந்த 171 பேர் 6 ஆசனத்திற்காக வவுனியாவில் போட்டியிடவுள்ளனர்.

தென் மாகாண மீன்பிடி அமைச்சர் கைது-

தென்மாகாண மீன்பிடி அமைச்சர் டி வி உபுல், தங்காலைப் பொலீசாரினால் இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தங்காலை, மஹவெல ஊடாக மாத்தறை வரை செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சாரதிமீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சாரதியான டபிள்யூ. எஸ். சந்ரசேன தங்காலை வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தங்காலை பேருந்து சாலையின் பணியாளர்கள் சேவைப்புறக்கணிப்பி;ல் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் – கொழும்பு போக்குவரத்து நெருக்கடி-

யாழ்ப்பாணம் கொழும்பு வீதியில் சேவையில் ஈடுப்படும் தனியார் பேரூந்து சேவையில் நிலவும் நெருக்கடி நிலையை தீர்ப்பது குறித்து இன்று ஆய்வொன்று நடத்தப்படுகின்றது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், யாழ்ப்பாணம் – கொழும்பு போக்குவரத்தில் நிலவும் குறைப்பாடுகள், ஒழுங்கின்மை போன்ற விடயங்கள் குறித்து ஆராயப்படுகின்றது. வழி அனுமதி பத்திரமின்றி சில பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுகின்றமை காரணமாக இந்நிலை தோன்றியிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையால் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுகின்றது. அனுமதி பத்திரமின்றி சேவையில் ஈடுப்படுபவர்களை சட்டரீதியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு இன்றுமுதல் தீடீர் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

வெளிநாடு செல்லும் பணியார்களுக்கு சிறப்பு பரீட்சை-

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் பணியாளர்கள் எதிர்வரும் காலங்களில் என் வீ கியூ 3 பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சவுதி அரேபியா செல்பவர்கள் இந்த பரீட்சையில் சித்தியடைபவர்கள் வீட்டு பணியாளர்கள் என்றழைக்கப்படாது இல்ல பாதுகாப்பு உதவியார்கள் என அழைக்கப்படுவார்கள் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு விரிவாக்கல் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர்களின் வருமானத்தை குறிப்பிட்டளவு அதிகரித்துக் கொள்ளமுடியும். இதன்மூலம் இலங்கை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பும் கிடைக்கும். இதற்கு சில முகவர்கள் நிலையம் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள். எனினும் இது சிறந்த நடைமுறையாகும் என்றே கருதமுடியும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

பார்வையற்ற ஏழு பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்-

மாற்றுத்திறனாளிகளான பார்வையற்ற ஏழு பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால்  அண்மையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் இந்த பட்டதாரிகள் சித்தியடைந்துள்ளதை அடுத்தே அவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிஸாம் தெரிவித்துள்ளார். பிறப்பிலேயே கண்பார்வையற்ற பட்டதாரிகள் ஏழு பேருக்கு முன்னோடி நடவடிக்கையாக நேற்றைய தினம் நியமனங்கள் வழங்கப்பட்டதாக மாகாண கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார். ஆசிரியர் நியமனம் பெற்றுக்கொண்ட மாற்றுத் திறனாளிகளில் 2 ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றனர். மாகாணத்திற்குள் தத்தமது வசிப்பிடங்களை அண்மித்த பாடசாலைகளில் சேவையாற்றும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சிறை-

கலைஞர்களான ரூகாந்த குணதிலக்க மற்றும் சந்திரலேக பெரேரா தம்பதியினர் தங்கியிருந்த மத்தேகொடை பகுதி வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்து அவர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பத்து பேருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் இன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேல்நீதிமன்ற நீதவான் குசல சரோஜினி வீரவர்தன முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். இதற்கமைய பிரதிவாதிகள் 9 பேருக்கு நான்கரை வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர 21,000 ரூபா வீதம் அபராதமும் இரண்டு இலட்சம் ரூபா வீதம் இழப்பீடும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் ஐந்தாவது பிரதிவாதி அங்கவீனராக இருப்பதால் அவருக்கு இலகு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அகதிக்கு 11 வருட சிறை-

இலங்கை தமிழ் அகதி ஒருவருக்கு தமிழக நாகப்பட்டினம் நீதிமன்றம் ஒன்று 11 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. வெடிப்பொருள் கடத்த முற்பட்டார்; என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த இலங்கையருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சௌந்;தரராஜன் என்ற குறித்த இலங்கையர் திருச்சிராப்பள்ளி கே.கே நகரின் அகதி முகாமில் தங்கியிருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி கியூபிரிவு காவல்துறையினரால் இவர் கைதுசெய்யப்பட்டார். வாகனம் ஒன்றை சோதனை செய்த போது, அதில் ஜெலட்டின் குச்சிகள், செய்மதி தொலைபேசி என்பவற்றுடன் குறித்த இலங்கையர் கைதுசெய்யப்பட்டதாக த பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இவர் இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்த முற்பட்டார் மற்றும் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்த முற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நாகப்பட்டிணம் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு கடுழிய சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.