Header image alt text

வலி. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு-

யாழ்ப்பாணம், சுன்னாகம் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் ஒன்று வலி வடக்கு; பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு. குமாரவேல அவர்களின் தலைமையில் இன்றுமாலை திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் ஆகியோரும் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் பிரகாஸ் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

News

Posted by plotenewseditor on 19 August 2013
Posted in செய்திகள் 

தாய்லாந்து மகாராணி இலங்கைக்கு விஜயம்-

தாய்லாந்தின் மகாராணியார் மஹாசக்ரி சிரின்டோம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் பெரஹரவை பார்வையிடவே அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின்போது, தாய்லாந்து மகாராணியார் கொட்டாஞ்சேனை, தீப்பதுத்தார பௌத்த ஆலயத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நாளை சந்திப்பார் எனவும், இலங்கை விஜயத்தினை நிறைவு செய்துகொண்டு அவர் மாலைதீவு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தகுதி-

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 383 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஒரு இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்ததாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 22ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு இந்தியாவிற்கு அழைப்பு-

வட மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்காக இந்தியாவின் தேர்தல் ஆணையாளர் வீ.எஸ். சம்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறும் தேர்தல்களை கண்காணிக்குமாறு கோரி இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் அழைக்கப்பட்டுளளனர். வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடாத்தவே விரும்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இராஜதுரை எம்.பி தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைவு-

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பி.இராஜதுரை தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தலைமையில் ஹட்டனில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரச சொத்துக்களை பயன்படுத்தல் குறித்து முறைப்பாடுகள் பதிவு- மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் 18 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தேர்தல்கள் முறைப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை ஆரம்பமான நாள்முதல் இதுவரை தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 119 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

கனடாவும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்குமென அறிவிப்பு-

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கனடா உள்ளிட்ட எந்த ஒரு பொதுநலவாய நாடும் புறக்கணிக்காது என மாநாட்டின் செயற்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, பொதுநலவாய நாடுகளின் செயற்குழு பணிப்பாளர் ரிச்சர்ட் உக்கு உள்ளிட்ட, 17 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிச்சர்ட் உக்கு, இம்முறை இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும். எந்த ஒருநாடும் இதனை புறக்கணிக்காது என குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விருப்பு இலக்கம் – 3 கந்தையா சிவநேசன் (பவன்) கருத்துப் பகிர்வு-

4கந்தையா சிவநேசன் ஆகிய நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே வட மாகாணசபைத் தேர்;தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். இந்த மாகாணசபைத் தேர்தலானது ஏனைய தேர்தல்களைப் போலல்லாமல் இது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்மூலம் கிடைக்கப்பெற்ற 13ஆவது திருத்தச் சட்டத்திற்கமைய இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது. இது மிக நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்த ஒரு தேர்தலாகும். திட்டமிட்டு இந்த சிங்கள அரசு இந்தத் தேர்தலை நடாத்தாமல் இவ்வளவு காலமும் இழுத்தடித்து வந்து, சர்வதேச மற்றும் இந்தியாவினுடைய அழுத்தங்களின் மூலம்தான் இந்தத் தேர்தலை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலையை அவர்களுக்கு உருவாகியிருக்கின்றது. சுதந்திரம் அடைந்ததிலே இருந்து சிங்கள அரசும், சிங்களப் பேரினவாதிகளும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வந்த சூழ்நிலையிலே உருவாக்கப்பட்ட சகல சாத்வீகப் போராட்டங்களும் நசுக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து வந்த ஆயுதப் போராட்டமும் இன்று நசுக்கப்பட்ட நிலையிலேயே இந்தத் தேர்தல் நடாத்தப்படுகின்றது. எனவே நாங்கள் இந்தத் தேர்தலிலே தோல்வியடைவோமாக இருந்தால் இன்று இருக்கின்ற சர்வதேச அபிப்பிராயங்களும், எங்களுக்கிருக்கின்ற ஆதரவுகளும் நிச்சயமாக அற்றுப் போய்விடும். காரணம் என்னவென்றால் உங்களுக்குத் தெரியும் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் யுத்தக்குற்றங்கள் கூட இந்தத் தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்துதான் அவற்றை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த 13ஆவது திருத்தச் சட்டம், அதிலே தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விடயங்கள் போதாது என்பதற்காக, அதை ஏற்றுக்கொள்ளாமல் தான் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இந்த ஆயுதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டதன் பின்பு எங்களுக்கு சட்டமாக்கப்பட்டிருக்கின்ற ஒரேயொரு விடயமாக தமிழ் மக்களுடைய தீர்வு விடயத்திலே இந்த 13ஆவது திருத்தம் மாத்திரமே இருக்கின்றது. அதையும் ஏதோ ஒரு காரணங்களுக்காக அல்லது ஒரு மிகக்குறைந்த அதிகாரங்களைக்கூட தமிழ் மக்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற அடிப்படையிலே பேரினவாத சக்திகள் இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டுமென்று முனைப்புடன் செயற்படுகின்றன. இதனால் நிச்சயமாக இந்தத் தேர்தலிலே தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தங்களுடைய 13ஆவது திருத்தத்துக்கான இந்த தேர்தல் குறித்த மகிந்தவினுடைய கொள்கையினை முறியடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். ஏறக்குறை 82ஆம் ஆண்டு காலப்பகுதியிலே இருந்து தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்திலே பங்குபற்றியவன் என்ற ரீதியிலும் பல பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியவன் என்ற அடிப்படையிலும் இன்று இருக்கின்ற இந்த சூழ்நிலையிலேயே இந்தத் தேர்தலிலே நான் போட்டியிடுகின்றேன். எனவே மிக நீண்டகால போராட்ட அனுபவம், ஆயுதப் போராட்ட அனுபவம் மாத்திரமல்ல, அரசியல் ரீதியான அனுபவங்களைக் கொண்டிருக்கின்றபடியினால் நான் உங்களுடைய அபிலாசைகளை அல்லது உங்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிப்பேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். அததுடன் நிச்சயமாக உங்களுக்குத் தெரியும் இன்று அரசினால் முன்வைக்கப்படுகின்ற ஒரேயொரு காரணம் அபிவிருத்தி என்ற விடயம் மாத்திரமே. அபிவிருத்தி என்பது அது எங்களுடைய உரிமை. இது ஒரு தனிக் குடும்பம் எங்களுக்குக் கொடுக்கின்ற சொத்துக் கிடையாது. அல்லது பேரினவாதிகள் எங்களுக்குக் கொடுக்கின்ற ஒரு சொத்தும் கிடையாது. இது எங்களுக்குரிய அபிவிருத்தி. நாங்களே அந்த அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும். எங்களுடைய சொந்த உரிமைகளை இவர்கள் பிச்சை போடுவதாக கூறிக்கொண்டிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. எனவே இந்தத் தேர்தலிலே நீங்கள் எனக்கு வாக்களித்தால் நிச்சயமாக உங்களுடைய அபிலாசைகளையும் உங்களுடைய எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நான் செயற்படுவேன் என்று உறுதி கூறுகின்றேன்.

நன்றி. கந்தையா சிவநேசன் (பவன்)- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர், முல்லைத்தீவு மாவட்டம் – விருப்பு இலக்கம் – 3.

செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் கூட்டமைப்பு வேட்பாளர் அறிமுக நிகழ்வு-

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நேற்றுமாலை 3மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், செட்டிக்குளம் பிரதேச சபைத் தலைவர், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களான ஜி.ரி.லிங்கநாதன் (விசு), க.சந்திரகுலசிங்கம் (மோகன்) எம்.எம்.ரதன், செந்தில்நாதன் மயூரன், எஸ்.தியாகராஜா, எம்.பி.நடராஜா, எஸ்.ரவி, ஆர்.இந்திரராஜா, வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம் ஆகிய வேட்பாளர்களும், ஆதரவாளர்கள், பொதுமக்கள், கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது பொதுக் கூட்டமும், வேட்பாளர் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது; செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் எம்.பி ஆகியோரின் உரைகளுடன் ஒன்பது வேட்பாளர்களின் உரைகளும் இடம்பெற்றதுடன், பொது மக்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.

சுதந்திரக் கட்சி அலுவலகங்கள்மீது தாக்குதல் மற்றும் எரியூட்டல்-

வவுனியா தேக்கவத்தை, தோணிக்கல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள சுதந்திரக்கட்சி அலுவலகங்கள் நேற்றிரவு 9.30மணியளவில் தாக்கப்பட்டும், அந்த அலுவலகங்களில் இருந்த சுதந்திரக் கட்சி வேட்பாளர்களின் விளம்பரப் பலகைகள் மற்றும் பதாதைகள் எரியூட்டப்பட்டும் உள்ளன. அந்த சமயத்தில் சந்தேகத்தின் பேரில் சுயேட்சைக்குழு -இல-3இன் வேட்பாளர் ஆனந்தகுமார் பரணீதரன் என்பவரும், மூன்று முறிப்பு பிள்ளையார்கோவில் குருக்கள் சிறீ ஐயரும் வவுனியா பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டு வவுனியா பொலீசில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

129 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு-

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது முதல் இதுவரை 129 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தின் நிக்கவெரட்டிய மற்றும் பிங்கிரிய பகுதிகளில் அதிக வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென கபே குறிப்பிட்டுள்ளது. தாக்குதல், வானத்தை நோக்கி சுடுதல், அச்சுறுத்தல், கட்சி அலுவலகங்கள் தாக்கப்படுதல் போன்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் கடந்த வாரத்தில் குருநாகலில் பதிவாகியுள்ளன. அங்கு ஒரே கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் அதிகரித்து வருகிறது. யாழ் நெடுந்தீவு, மாத்தளை நாவுல, கண்டி வத்தேகம ஆகிய பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் எவ்வித தேர்தல் வன்முறைகளும் பெரியளவில் இடம்பெறவில்லை என கபே கூறியுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி நவநீதம்பிள்ளையை சந்திக்க நடவடிக்கை-

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆனையாளர் நவநீதம்பிள்ளைக்கும் குற்றப்பிரோனை மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்குமிடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குற்றப்பிரேரணை மூலம் கடந்த மார்ச் மாதம் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் முன்னாள் நீதியரசர் கலந்துகொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இதுவென்று கூறப்படுகிறது. அதேபோல் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஷிராணி பண்டாரநாயக்க சந்திக்கும் முதலாவது ராஜதந்திரி நவநீதம்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஷிராணி பண்டாரநாயக்க ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் சர்வதேச நீதியரசர்களின் கூட்டத்தில் உரையாற்றவிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறினால் அது முடியாமற் போயிருந்தது.

தேர்தல் ஆணையாளர் வடபகுதிக்கு விஜயம்-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 383 பேர் தகுதி பெற்றுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 542 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. அவற்றில் 22 ஆயிரத்து 159 விண்ணப்பங்கள் நிராக்கப்பட்டன. அதிக அளவில் குருநாகல் மாவட்டத்தில் இருந்தே அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணிப்பிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து குறைந்த அளவாக 831 பேர் அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணபித்துள்ளனர். கண்டி மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களே அதிக அளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இம்மாதம் 21ம்திகதி வடபகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் விமானப்படையினர் இருவர் பலி, ஒருவர் படுகாயம்-

திருகோணமலை, பளிங்கு கடற்கரைப் பகுதியில் (மாபல்பீச்) உள்ள விடுமுறை விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விமானப் படையில் பணி புரியும் பெண் ஒருவரும் விமானப்படை வீரர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். விமானப் படையினால் நடத்திச் செல்லப்படும் விடுமுறை விடுதியிலேயே இத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானப்படை கோப்ரல் ஒருவர் குறித்த இருவர்மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் வின்கமான்டர் என்டி விஜேசூரிய தெரிவித்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் செய்தபின் விமானப்படை கோப்ரல் தன்னைத்தானே சுட்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரமே இச்சம்பவத்திற்கு காரணமென்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் உண்மை நிலவரம் அறிய சந்தர்ப்பம்-பிரிட்டன்-

இலங்கையின் உண்மை நிலைமைகளை பார்வையிடுவதற்கு பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். உலகத் தலைவர்கள் வெளிவிவகார அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோருக்கு நாட்டின் உண்மையான நிலைமைகளை நேரில் கண்டுகொள்ள இந்த அமர்வு சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் வர்த்தக மாநாட்டுக்கான முன்னோடி நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு லண்டனில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இலங்கை சமாதானத்தை எட்டியுள்ளதாகவும், இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் கிறிஸ் நோனீஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சார்க் கண்காணிப்பாளர்கள் 17பேர் வடக்கு தேர்தல் பணியில்-

வட மாகாண சபைத்தேர்தலை கண்காணிப்பதற்கு தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) கண்காணிப்பாளர்கள் 17 பேர் கண்காணிப்பதற்கு வருகை தருவர் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களின்போதும் அரசாங்கம், அரச சொத்துக்களை தேர்தல்கள் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வடக்கில் இராணுவத்தின் இடையூறுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி கட்சி உறுப்பினர்களின் விபரங்களை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் திரட்டி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

யாழ் – கொழும்பு புகையிரத சேவை ஆரம்பம்-

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவை அடுத்த சித்திரை புத்தாண்டு தினத்தில் ஆரம்பிக்கப்படும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ். பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றும்பேதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் யாழில் இருந்து புகையிரதத்தின் மூலம் கொழும்பு வெள்ளவத்தைக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் ஒரு நெருக்கமான உறவைப் பேணக் கூடிய நிலை காணப்பட்டது. இப்போது மறுபடியும் புகையிரதம் கிளிநொச்சி வரை வந்து செல்கின்றது எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்தன்று யாழில் இருந்து கொழும்புக்கான புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த கால அவகாசம்-கபே

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பினர்களால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென சுதந்திரமானதும் நியாயமானதுமக்கான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அறிவித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 6 வார காலப்பகுதிக்குள் வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி வட மாகாண வேட்பாளர்களின் அரசியல் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு வருதல் மற்றும் வடமாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியா மாவட்ட வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலின் போது வாக்களிப்பதற்கு சுமார் ஒரு இலட்சம் பேரிடம் தேசிய அடையதள அட்டைகள் இல்லை. அதிலும் சுமார் 80ஆயிரம் பேருக்கு எந்தவிதமான அடையாள அட்டைகளும் இல்லை. இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பால் அச்சுறுத்தல்; விடுக்கப்பட்டுள்ளது என ஆறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வடக்கில் இன்னும் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்கள் மற்றும் அரச தரப்பினர் போட்டியிடாத பிரதேசங்களைச் சேர்ந்த வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைளுக்கு பாதுகாப்பு தரப்பினர் இடையூறு விளைவிக்கின்றனர். இந்நிலையில், எதிர்வரும் 6 வார காலப்பகுதிக்குள் வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி வட மாகாண வேட்பாளர்களின் அரசியல் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.