மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு நிரந்தர நீதாய நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றம் சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிடியாணையை ஆங்கிலத்தில் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வழக்கில் 10 ஆவது பிரதிவாதியான அஜஹான் கார்திய புஞ்சிஹேவா எனும் நபர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சிங்கப்பூரில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் எனவே அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறும் பிரதி சொலிசிடர் ஜெனரல் நீதிமன்றத்தில் வேண்டியிருந்தார். அதனடிப்படையில் குறித்த நபருக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம் அது தொடர்பிலான அறிக்கை டிசம்பர் 4 ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.