வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் குழுவினர், கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து சிறைச்சாலை கூரையின் மீதேறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கைதிகள் அடித்து துன்புறுத்தப்படுகின்றமை மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் நாட்டின் தலைமை கண்திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தமது தண்டனையை குறைக்க வேண்டும் அல்லது பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளுடன் கலந்துரையாடியதாகவும், ஆனால் அவர்கள் கூரையிலிருந்து கீழே இறங்க மறுத்துவிட்டதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டுக்கடங்காத முறையில் நடந்து கொண்ட பல கைதிகள் சிறைக் கூண்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பல கைதிகள் இன்னும் சிறைச்சாலையின் கூரையில் உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.