Header image alt text

Untitled Post

Posted by plotenewseditor on 10 May 2013
Posted in செய்திகள் 

Eisenbahnbrückeமடுவுக்கான ரயில் போக்குவரத்து சேவை-

மன்னார்,மடு தேவாலயத்துக்கான ரயில்சேவை எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மடு தேவாலய வருடாந்த திருவிழா ஆரம்பமாகவுள்ளதால் அங்கு செல்லவுள்ள பக்தர்களின் நன்மை கருதி மதவாச்சியிலிருந்து மடு வரையான சுமார் 106 கிலோமீற்றர் நீளமான தலைமன்னார் ரயில்பாதை துரிதகதியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்திய நிதியுதவியில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த ரயில் பாதை புனரமைப்பு பணிகளில் முதற்கட்டம் தற்போது பூர்த்தியாகியுள்ள நிலையில் அடுத்தகட்ட புனரமைப்புப் பணிகள் ஓரிரு தினங்களில் நிறைவடையவுள்ளன. முதற்கட்ட பணிகளுக்கு மட்டும் சுமார் 81 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை புனரமைப்பு பணிகள் கடந்த 2011, மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

மாகாணசபை உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகனங்கள்-

முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்த அமைச்சரவைப் பத்திரம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இரண்டரை வருடங்களுக்கு மேல் மாகாணசபை உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்யமுடியும். அத்துடன் நாடாளுமன் உறுப்பினர் 5 வருடங்களுக்கு ஒரு தடவை தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கைப் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ்-

தமிழக அகதி முகாம்களில் பிறந்த இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், இவ்வாரத்தில் மாத்திரம் 300 பிறப்பு சான்று பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 4 வருட காலப்பகுதியினுள், தமிழக முகாம்களில் பிறந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, மதுரை, ராமேஷ்வரம், கூடலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பல நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டு இலங்கை பிள்ளைகளுக்கான பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிட்னியில் பெண்களை தாக்கியதாக இலங்கையர்கள்மீது குற்றச்சாட்டு- 

அவுஸ்திரேலியாவின் கிழக்கு சிட்டி நகரில் இரு பெண்கள் மற்றும் ஒரு சிறுமிமீது தாக்குதல் நடத்தியதாக இரு இலங்கையர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பரமட்டா பகுதி வர்த்தக நிலையத்தில் 31, 39 வயதுடைய இரு பெண்களும் 14 வயது சிறுமியும் நேற்று பொருட்கள் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை நாடி வந்த இருவர் அவர்கள்மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் 20 மற்றும் 47 வயதுடைய இரு இலங்கைப் பிரஜைகளை கைதுசெய்துள்ளனர். இவ்விரு இலங்கையர்களும் அவுஸ்திரேலியாவின் வெஸ்ட்மீட் பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள்மீது வழக்கு தாக்கல்செய்து விசாரணை நடாத்தியபோது இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜூன் 26ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வட மாகாணசபை தேர்தல் நடத்தப்படுவது அவசியம்

சரத் பொன்சேகா- கூடிய விரைவில் வட மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் சரத் பொன்சேகா கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கோரிக்கை முன்வைத்துள்ளார். ஏனைய மாகாணசபை தேர்தல்கள் நடாத்தப்பட்டவாறு வட மாகாணசபை தேர்தலும் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் உள்ள பிரிவினைவாத சரத்தை சீர்திருத்தாது வட மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் பூர்வீக இடங்களில் வாக்களிக்க ஏற்பாடு

வடக்கிலிருந்து இடம்பெயயர்ந்து வேறு மாகாணங்களில் தங்கியுள்ள மக்கள் தமது பூர்வீக இடங்களில் வாக்களிப்பது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது காணிகளையும், சொத்துக்களையும், ஆவணங்களையும் கைவிட்டு, வேறு மாகாணங்களில், வேறு தேர்தல் தொகுதிகளில் தங்கியிருக்க நேரிட்டுள்ளதாக அதில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்கள் வடமாகாணத்தில், உரிய தேர்தல் தொகுதியில் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்யுமாறு விண்ணப்பித்த போதிலும்  நடைமுறையில் உள்ள சட்டத்தை காரணம் காட்டி தேர்தல் அதிகாரிகள் அதனை நிராகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் முன்னர் நிரந்தரமாக அவர்கள் தங்கியிருந்த தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கக் கூடியவாறு வாக்காளர் பெயர் பட்டியலொன்றை தயாரிக்க இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது அவசியமாகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

தயா மாஸ்ரர் வேண்டாம்;-சரத் பொன்சேகா-

புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்ரரை வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. புலிகள் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தனர். அவர்கள் மாகாண சபைக்கு வந்தாலும் அதையே செய்வார்கள் எனக் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, முன்னாள் புலிகள் வன்முறையைக் கைவிட்டதை ஆதரிக்கின்றேன். ஆயினும் அவர்கள் மாகாண சபை தலைமைப் பதவிகளுக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.      

மூதூரில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு-

திருகோணமலை, மூதூர் கிழக்கில் இடம்பெயர்ந்த 18 குடும்பங்களுக்கான வீடுகள் இன்று கையளிக்கப்பட்டுள்ளன. மூதூர், சீதனவெளி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடுகள் கிளிவெட்டி, பட்டித்திடல் முகாம்களில் உள்ளவர்களுக்கே கையளிக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட நடவடிக்கையாக ஏற்கனவே 56 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்டமாக 18 குடும்பங்களுக்கான வீடுகள் இன்று கையளிக்கப்பட்;டுள்ளன. மேலும் 50 வீடுகளை கட்டுவதற்கான செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பல்-

சிரியாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமைகளின் மத்தியில் அங்கு சிக்குண்டு இருந்த இலங்கையர்கள் இரண்டு விமானங்களில் இன்று நாடு திரும்பியுள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதுவர் ரஞ்சித் குணரட்ன தெரிவித்துள்ளார். சர்வதேச குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவியுடன் இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாகவும் ரஞ்சித் குணரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

News

Posted by plotenewseditor on 8 May 2013
Posted in செய்திகள் 

08.05.2013.
 
புலனாய்வுத் தகவல்களை பரிமாற வேண்டியது அவசியமாகும்-பாதுகாப்பு செயலர்

நாடுகளுக்கு இடையில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலனாய்வுத் தகவல்களை வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ள நாடுகளுக்கு இடையில் அவை பகிரப்பட வேண்டுமெனவும், நிதிப் புலனாய்வுப் பிரிவுகள், புலனாய்வு முகவர் நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் ஆகிய தரப்பினருக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய வலய மாநாடொன்றில் பங்கேற்றிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கு புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் மிகவும் அவசியமானது. பயங்கரவாதம், சட்டவிரோத நிதிக்கொடுக்கல் வாங்கல், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத ஆட்கடத்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பிராந்திய வலயங்களுக்கு இடையில் புலானய்வுத் தகவல்கள் காத்திரமான முறையில் பகிரப்பட வேண்டும். புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்தும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு வழிகளில் அவர்கள் இயங்கி வருவதடன், நிதி திரட்டி இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் அண்மையில் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் ஆயுதப்பயிற்சி வழங்கவும் முயற்சி எடுத்திருந்தனர். நாடுகளுக்கு இடையில் வலுவான புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் காரணமாகவே இந்த முயற்சிகளை வெற்றிகரமாக முறியடிக்க முடிந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார். 
 
பயங்கரவாதச் சட்டம் நீக்கப்பட மாட்டாது- பிரதமர் டீ.எம்.ஜயரத்ன-

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது கடினம் என்றும் அரசியல் நோக்கர்களுக்காகவோ, அரசியல் கட்சிகள், நபர்களைக் குறிவைத்தோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை அரசு ஒருபோதும் பயன்படுத்தவில்லை எனவும் பிரதமர் டீ.எம். ஜயரத்ன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அசாத் சாலி கைதுசெய்யப்பட்டதைப் பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபம் தேட முயல்கின்றனர்.  இதனையிட்டு கவலையடைகின்றேன். எதிர்க்கட்சித் தலைவரும் அரசியல் நோக்கத்துக்காகத் தான் இது குறித்துப் பேசுகிறார் என நினைக்கிறேன். 
அசாத் சாலி பல்வேறு சந்தர்ப்பங்களில் இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இலத்திரனியல், அச்சு ஊடகங்களினூடாக கருத்துகளை வெளியிட்டுவந்தார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் சமாதானத்துக்கு அச்சுறுத்தலாகவும் இளைஞர்களைத் தூண்டும் வகையிலும் செயற்படும் நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கத்திலிருந்து விலகப்போவதில்லை-சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலகாது என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தன்னுடைய கட்சி அரசுடன் கருத்து வேறுபாடுகளை கொண்டுள்ளபோது, அவ்வாறான விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சர் டிலான் பெரேரா மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே நிதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆலய காணியில் கட்டிடம் நிர்மாணிக்கத் தடை

கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள உதிரவேங்கை ஞானவைரவர் ஆலயத்திற்கு உரித்தான காணியில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் காணியை அத்துமீறி அபகரித்தமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக உதிரவேங்கை ஞானவைரவர் ஆலயத்தின் பயன்பாட்டில் இருந்துவந்த குறித்த காணியில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வர்த்தகர் ஒருவரால் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. வர்த்தகரின் இந்த செயற்பாட்டை ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேசத்தின் பொது அமைப்புகள் எதிர்த்தன. எனினும் அவை எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் அவர் கட்டுமாணப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், மேற்படி காணி தொடர்பில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆலய நிர்வாகம் கடந்த 06ஆம் திகதி வழக்குத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரணை செய்த நீதவான் எம்.ஜ.வஹாப்தீன் குறித்த காணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், பிரதிவாதியான வர்த்தகரை காணி குறித்த ஆவணங்களுடன் எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியாவிற்கு கடிதம் கிடைப்பதில் தாமதம்-

வவுனியா பிரதம தபாலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் கடிதங்கள் உரிய வகையில் பொதுமக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வவுனியா பிரதம தபாலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் கடிதங்கள் குறைந்தது ஒருநாளுக்குள் குறிப்பிட்ட முகவரி உடைய நபருக்கு கிடைத்துவிட வேண்டும். மாறாக மூன்று, நான்கு நாட்களின் பின்னர் கிடைப்பதாகவும் சில கடிதங்கள் தமக்கு வந்து சேராது இருப்பதாகவும் வேப்பங்குளம், குட்செட்வீதி, வெளிக்குளம், முருகனூர், நெளுக்குளம் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு தமக்கு கிடைக்காத கடிதங்களுக்குள் பல்வேறு முக்கியமான கூட்டக் கடிதங்கள் உட்படுவதாக அப்பகுதி மக்கள் மேலும் கூறுகின்றனர். எனினும் கடிதம் காலதாமதமாகக் கிடைப்பது குறித்து பொதுமக்களின் முறைப்பாடுகள் நேரடியாக தமக்கு கிடைக்கவில்லை எனவும். உரிய வகையில் முறைப்பாடுகள் தலைமை அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வவுனியா தபாலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான சகல பணிகளையும் மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. மழையினால் நிர்க்கதிக்குள்ளான மக்களுக்குத் தேவையான சமைத்த மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ள நீர் வடிந்து செல்வதற்கான வகையில் வடிகான்களை சுத்திகரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

PLOTE News

Posted by plotenewseditor on 6 May 2013
Posted in செய்திகள் 

மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம்– இலங்கையில் விசேட மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலர் கமலேஷ் ஷர்மாவுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதற்கமைய இவ்வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை இலக்காகக் கொண்டு உத்தேச மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டத்தை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார். ஆறுமாத காலத்திற்கு இந்தத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ள- தாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 
வாக்காளர் இடாப்பு திருத்தம் இம்மாதம் ஆரம்பம்– 2013ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நடைபெற்று வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் வாக்காளர் இடாப்புத் திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு நிரப்பப்பட்ட படிவங்கள் ஜூன் முதலாம் திகதிமுதல் சேகரிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 
 
நீர்கொழும்பில் மழையினால் பெரும் பாதிப்பு– நீர்கொழும்பு நகரில் இன்று அதிகாலை முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு நகரின் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பாடசாலை மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உட்ப பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தின் பல்லன்சேனை வீதி, கட்டவ பிரதேசம், நகரமத்தியில் தம்மிட்ட வீதி மற்றும் போலவலான பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளநீரினால் பாதிக்கப்பட்டுள்ளன சட்டவிரோத கட்டிடங்கள் காரணமாகவும், பிரதான வடிகான் துப்பரவு செய்யப்படாததன் காரணமாக வடிகானில் நீர் நிறைந்து இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதுபோன்று அடிக்கடி ஏற்படுவதாகவும் தளுபத்ததை பிரதேசவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இன்று பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை பெரும்பாலான மாணவர்களுக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
லயன் எயார் விமான எச்சங்கள் மீட்பு– புலிகளால் 1998ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் என்டனொட் 24 லயன் எயார் விமானத்தின் சில பகுதிகளும் மற்றும் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மனித எலும்புக்கூட்டின் சில பாகங்கள், மனிதர்கள் பாவிக்கும் தங்கப்பல் மற்றும் விமானத்தில் உபயோகிக்கப்படும் பல இயந்திர உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தீவிர ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளன. 1998ம் ஆண்டு பலாலி விமானத் தளத்திலிருந்து கொழும்பு பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இரணைதீவு பகுதியில் மீட்புப்பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையிலேயே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.. சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த விமானம் வீழ்ந்த இடம் கண்டறியப்பட்டு, மீட்புப் பணிகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
காணி பொலீஸ் அதிகாரங்களை நீக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை-அமைச்சர் தினேஷ் குணவர்த்தன- வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிடவேண்டும் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். எது எவ்வாறெனினும் தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் ஏற்பாடுகளுக்கு அமைவாக செயற்படவேண்டியது தேர்தல் செயலகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடக்கில் வாழ்ந்த தற்போது வெளி மாகாணங்களில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் வடக்குத் தேர்லில் வாக்களிக்க முடியுமான வகையில் தேர்தல்கள் ஆணையாளர் ஏற்பாடுகளை செய்யவேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் கூறியுள்ளார். 
 
இலங்கை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி– இந்தியாவின் வட பிராந்தியத்திற்கு செல்லும் இலங்கை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. அங்கு தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பநிலை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பௌத்த வெளிநாட்டு பயணிகள் செயல்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இலங்கையிலிருந்து புத்தகாயா வரணாசி போன்ற மத வழிபாட்டு பிரதேசங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. இதேவேளை, இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் பௌத்த யாத்திரீகர்கள் தற்போது கொழும்பிலிருந்து நேரடியாக புதுடெல்லிக்கு விமானம்மூலமே செல்வதாக கூறப்படுவதுடன், 37ஆயிரம் இலங்கை ரூபாவினை இதற்கென அவர்கள் செலவிடுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. தென் இந்தியாவில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை காரணமாகவே நேரடியாக விமான்மூலம் அவர்கள் செல்கின்றனர். 
 
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 65பேர் கைது– இந்தியாவிலிருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயன்ற 65 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இவர்கள் இன்று அதிகாலை காலி, ஹிக்கடுவ கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கைதானவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

PLOTE News

Posted by plotenewseditor on 5 May 2013
Posted in செய்திகள் 

 
காணி, பொலீஸ் அதிகாரங்களை தமிழ்க் கட்சிகள் கோரும் என அச்சம்
வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர், தமிழ்க் கட்சிகள் காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை கோரிநிற்கும் என்ற அச்சம் காணப்படுவதாக தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். வடக்கில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும் அதற்காக நாட்டின் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. இதேவேளை தேர்தலின் பின்னர் வடமாகாணத்திற்கு காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை கோரி தமிழ் கட்சிகள் செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்ற அச்சம் காணப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால், அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என எல்லே குணவன்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

சந்திரிகா, ஷிராணி இணைந்து புதிய அரசியல் கட்சி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும் இணைந்து புதியதோர் அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. புதிய கட்சி ஒன்றினை உருவாக்கும் தங்களது திட்டம் தொடர்பில் இலங்கையிலுள்ள மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரபலங்கள் மற்றும் தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் பலரும் இந்த புதிய அரசியல் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும், முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. இக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் விமுக்தி குமாரதுங்க நியமிக்கப்படவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் தமிழ் இளைஞரைக் காணவில்லையென முறைப்பாடு
கொழும்பு, மருதானை, டீன்ஸ் வீதியைச் சேர்ந்த 18வயதான களியபெருமாள் ரவீந்திரன் என்கிற தமது மகனை கடந்த 01ஆம் திகதியிலிருந்து காணவில்லையென பெற்றோர் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர் கடந்த முதலாம் திகதி காலை 6 மணியளவில் வீட்டிலிருந்து சென்றதாகவும், அவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையெனவும் பெற்றோர் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அத்துடன் தனது மகன் பற்றிய தகவலை அறிந்தவர்கள் 072 3866457 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு காணாமற்போன இளைஞனின் தாயாரான இந்திராணி கேட்டுக் கொண்டுள்ளார்

உள்ளுராட்சி மன்ற எல்லை மீளமைப்பு ஒத்திவைப்பு
உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் மேலும் ஆறு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் விவகார பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க ஊகடத்திற்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவு செய்யப்படவிருந்தது. எனினும் இந்நடவடிக்கைகளை உரிய தரத்துடன் மேற்கொள்வதற்காக மேலும் ஆறு மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் இந்த தாமதம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர முதல்வரின் பிரத்தியேக செயலர் வீடுமீது தாக்குதல்
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீரா சாஹிபின் பிரத்தியேக செயலர் ஏ.எல்.எம்.இன்சாதின் வீட்டின்மீது நேற்றிரவு 9.45 மணியளவில கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாய்ந்தமருது-11 ஹாஜா வீதியிலுள்ள குறித்த வீட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியுள்ளன. அவரும் அவரது மனைவி பிள்ளைகளும் சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் இருந்தபோதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அங்கு விரைந்த கல்முனைப் பொலிஸார், ஏ.எல்.எம்.இன்சாதிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படுவோர் எண்ணிக்கை உயர்வு
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், 2009ம் ஆண்டு 504 சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனைவிட 2010ஆம் ஆண்டு 608 பேரும், 2011ஆம் ஆண்டு 865 பேரும், 2012ஆம் ஆண்டு 717 பேரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டதாகவும் உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, இவ்வருடத்தில் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டேவிட் டலி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக கடமை பொறுப்பேற்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக டேவிட் டலி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான தற்போதைய வதிவிடப் பிரதிநிதியான பேர்னாட் சவேஜ் ஜின் இடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது டேவிட் டலி ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிடப் பிரதிநிதியாக கன்பராவிலிருந்துகொண்டு செயற்பட்டு வருகிறார். பதவி விலகிச் செல்லவுள்ள பேர்னாட் சாவேஜ் 2009ஆம் ஆண்டின் இறுதிப் போர் இடம்பெற்ற வேளையில் இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிடப் பிரதிநிதியாக சிரமமானதொரு வேளையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

பிரித்தானிய பிரதமர் மாநாட்டில் பங்கேற்பதற்கு கண்டனம்
இலங்கையில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக பிரித்தானிய பிரதமர் அறிவித்துள்ளமை குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களை காரணம் காட்டி, இங்கு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும் இதனை மீறி இம்மாநாட்டில் தாம் பங்கேற்கவிருப்பதாக, டேவிட் கெமரூன் அறிவித்திருந்தார். இதனைக் கண்டித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. இம்மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் ஊடாக, இலங்கை அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நீர்த்துப் போவதை சர்வதேச நாடுகள் அங்கீகரிப்பதாக அமையும் என்றும் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது

தமிழக முதல்வரின் கருத்துக்கு கருணாநிதி மறுப்பு
கச்சத்தீவின் உரிமத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கியமைக்கு தாம் உதவி செய்யவில்லை என முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையிடம் இருந்து கச்சத்தீவின் உரிமத்தை இந்தியா மீளப்பெற வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, கச்சத்தீவின் அதிகாரத்தை இலங்கைக்கு கையளிக்க கருணாநிதி மத்திய அரசுடன் ஒத்துழைத்தார் என தெரிவித்திருந்தார். எனினும் இதனை மறுத்துள்ள கருணாநிதி, 40 வருடங்களுக்கு முன்னர் கச்சத்தீவின் அதிகாரத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கும் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மறுநாள், தாம் இவ்விடயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்களில் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தாக சுட்டிக்காட்டியுள்ளார்.

PLOTE NEWS

Posted by plotenewseditor on 4 May 2013
Posted in செய்திகள் 

04.05.2013.

வடக்கில் பொலீஸ் நிலையங்களுக்கு காணி சுவீகரிப்பு-

யாழ். மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தனியார் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. அவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு உரித்துடையவர்கள் அது தொடர்பில் தத்தமது பிரதேச செயலகத்திலோ அல்லது யாழ். மாவட்ட செயலகத்திலோ முறைப்பாடு செய்யலாம் என யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம். ஜெப்றி தெரிவித்துள்ளார். யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 8 பொலிஸ் நிலையங்களும், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 9 பொலிஸ் நிலையங்களும் உள்ளன. யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு மாத்திரமே தற்போது காணி ஒன்று சொந்தமாகவுள்ளது. ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு காணிகள் இல்லை. எனவே இங்குள்ள காணிகளைச் சுவீகரிக்க வேண்டியுள்ளது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிராம சேவையாளர்களை இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை

புதிய கிராம சேவையாளர்களை சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை இன்றையதினம் நாடெங்கிலும் இதற்கென அமைக்கப்பட்டிருந்த 261 மத்திய நிலையங்களில் நடத்தப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளின் பின்னர் புதிதாக கிராம சேவையாளர் பதவிக்கு ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இம்முறை 4ஆயிரம் பேர் இப்பதவிக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் ஆலய விக்கிரகங்கள் கொள்ளை-

கிளிநொச்சி தொண்டமான் நகர் உதிரவேங்கை வைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த விக்கிரகங்கள் மற்றும் ஆலயப் பொருள்கள் களவாடப்பட்டுள்ளன. இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. விக்கிரகங்களுடன் ஐம்பொன் தகடுகள், பெறுமதியான பொருள்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த களவுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான காணி அதிகாரிகளின் அனுமதியுடன் பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு வழங்கப்பட்டு கட்டடப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் திட்டமிடப்பட்டே கொள்ளை இடம்பெற்றிருக்கலாமென கூறப்படுகிறது.

இளவாலையில் மனித எலும்புக்கூடு மீட்பு-

யாழ்ப்பாணம், இளவாலை, சீனிப்பந்தல் பிரதேசத்தில் தனியார் காணியொன்றிலிருந்து எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை 4.30 மணியளவில் இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலசலகூடம் அமைப்பதற்கான குழியொன்று வெட்டும்போதே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அசாத் சாலியை விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை-

கைது செய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு விடுதலை செய்யப்படாத பட்சத்தில் சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் எனவும் மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசை விமர்சிப்பதால் ஏற்படும் நிலைமையை அசாத் சாலியின் கைது உணர்த்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய வலயத்திற்கான பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் திட்டத்தின் புதிய இரைதான் அசாத் சாலி எனவும் பொலி ட்ரஸ்கொட் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் கெமருன் பங்கேற்க வாய்ப்பு-

இலங்கையில் இவ்வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் பங்கேற்பாரென தெரிவிக்கப்படுகிறது. லண்டனைத் தளமாக கொண்டியங்கும் த டெய்லி டெலிகிராப் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலவரங்களை காரணம் காட்டி, இம்மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தப்படுகிறது. எனினும் இந்த வலியுறுத்தல்களையும் மீறி, பிரித்தானிய பிரதமர் இம்மாநாட்டில் பங்கேற்பாரென பிரித்தானிய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இந்த மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதற்கு கனடா தொடர்ந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தொகுதி தமிழர்களை நாடு கடத்த பிரிட்டன் நடவடிக்கை

பிரித்தானியாவில் இருந்து எதிர்வரும் மாதங்களில் மேலும் சில இலங்கைத் தமிழர்கள் நாடுகடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது பிரித்தானிய குடிவரவுத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பின், கடந்த 2009ம் ஆண்டு 504 பேரும், 2010ம் ஆண்டு 608 பேரும் 2011ம் ஆண்டில் 865 பேரும் கடந்த 2012 ஆண்டு 717 பேரும் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். எனினும் எதிர்வரும் மாதங்களில் பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட உள்ளவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஊடக அடக்குமுறை பட்டியலில் இலங்கைக்கு நான்காமிடம்-

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை பிரயோகிப்போர் தண்டிக்கப்படாத நாடுகளின் பட்டியிலில் இலங்கை இரண்டாவது தடவையாகவும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலே இலங்கையில் ஊடகவியலாளர்களின் நிலையை இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளது. பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இந்த வரிசையில் உள்ளடங்குகின்றன. ஈராக், இலங்கை, மெக்ஸிக்கோ, கொலம்பியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்படும் சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

01.05.2013.

மேதினத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்வலங்கள்- மேதினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு, மலையகம் உட்பட நாடுதழுவிய ரீதியில் ஊர்வலங்களும் கூட்டங்களும் நடைபெறுகின்றன. பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பிலும், ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு, குருணாகல் மற்றும் பதுளையிலும், ஜே.வி.பி. கொழும்பிலும் ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சியில் மேதினக் கூட்டத்தை நடத்துகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடமராட்சியில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி.யின் மேதினக் கூட்டம் கிளிநொச்சயில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது. மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்களும் மேதின பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தல்– அண்மைக் காலமாக இலங்கையில் ஊடக நிறுவனங்கள்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளது. இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புகள் விடயங்களுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி செய்யும் என அமெரிக்கா அரச திணைக்கள பேச்சாளர் பேட்ரிக் வென்ரெல் தெரிவித்துள்ளார். கருத்து வெளியிடும் சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அதிகாரிகளை வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். உதயன் பத்திரிகை மீதான தாக்குதலையும் அமெரிக்கா கண்டித்துள்ளது. உதயன் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை, பத்திரிகை விநியோகத்தர்கள் தாக்கப்பட்டு பத்திரிகைகள் எரிக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பெறப்படும் காணிகளுக்கு உரிய தொகை வழங்கப்படும்-யாழ் கட்டளைத் தளபதி- வடக்கில் பெற்றுக் கொள்ளப்படும் காணிகளுக்குரிய மதிப்புத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்குவோம் எனவும், பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அப்பகுதியில் 2ஆயிரம் ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம் எனவும் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். வடக்கில் அரசியல் கட்சிகளின்; போராட்டங்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. பலாலி விமான நிலையத்தை சர்வதேச ரீதியில் தரம் உயர்த்துவது மற்றும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ளன. இவற்றுக்கு போதிய காணிகள் தேவைப்படும்போது அவற்றை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்டவர்களை நாம் நாடுவோம். தென் அதிவேக வீதி, மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகையில், அப்பிரதேச மக்களின் காணிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன. அப்போது பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆனால், வடக்கில் அரசியல் கட்சிகள் போலியான பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டு பொமக்களை ஏமாற்றி வருகின்றன என யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேலும் கூறியுள்ளார்.

புதிய இந்திய தூதுவரை நியமிக்க நடவடிக்கை– இலங்கைக்கான புதிய இந்தியத் தூதராக இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான வை.கே.சிங்ஹா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த இராஜதந்திரி வை.கே. சிங்ஹா தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சில் பாகிஸ்தான், ஈரான் விவகாரங்களைக் கையாளும் பிரிவில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். தற்போது சீனாவுக்கான இரகசியத் தூதுவர் பதவியில் இருக்கும் ஜெய்சங்கர் இலங்கைக்கு மாற்றப்படலாமென முன்னர் செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால், இந்திய வெளியுறவுத்துறைச் செயலராக அவர் நியமிக்கப்படும் வாய்ப்பிருப்பதால் அது சாத்தியப்படவில்லை என கூறப்படுகிறது.

அமெரிக்க நிதியுதவி மீளப் பெறப்பட்டது– இலங்கையின் நீதித்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நன்கொடை நிதியை அமெரிக்கா மீளப் பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கையின் நீதி அமைச்சு அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயற்திறனின்மை மற்றும் அலட்சியம் காரணமாகவே இந்நிதியை அமெரிக்கா மீளப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நீதித்துறையை தரமுயர்த்தும் நோக்கில், சட்டரீதியான தாமதங்களை தவிர்க்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்காகவே இந்த நன்கொடையை அமெரிக்கா வழங்கியது. எனினும் இலங்கை அரச அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாத நிலையிலேயே அமெரிக்கா நிதியுதவியை திரும்பப் பெற்றுள்ளது. நன்கொடை திரும்பப் பெறப்பட்டுள்ளதை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாசவின் ஞாபகார்த்த தினம்– காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாசவின் 20வது ஞாபகார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதியின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகளும் சமய அனுஸ்டானங்களும் இடம்பெறுகின்றன. பிரதான ஞாபகார்த்த நிகழ்வு கொழும்பு புதுக்கடை பிறேமதாச உருவச்சிலைக்கு அருகாமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. மௌன அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து பிறேமதாசவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் அரசியல்வாதிகள் பிறேமதாச குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாச 1993ம் ஆண்டு கொழும்பு, ஆமர்வீதியில் மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தபோது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.