பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் மகாநாடு இன்றுகாலை 10.30மணியளவில் கொழும்பிலுள்ள ஜானகி விடுதியில் நடைபெற்றது. இந்த மகாநாடு தேர்தல் சம்பந்தமான அறிவித்தலைக் கொடுப்பதற்காக நடாத்தப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, டெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களுடைய முழுமையான ஆதரவினையும் எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்குவதாக இரா.சம்பந்தன் அவர்கள் இதன்போது அறிவித்தார். மிகப் பெருவாரியான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்ட இந்த மகாநாட்டிலே பல கேள்விகளும் கேட்கப்பட்டு கேள்விகள் அனைத்திற்கும் இரா. சம்பந்தன் அவர்கள் மிகத் தெளிவாக பதில்களை வழங்கினார். இதன்போது பல கேள்விகள் மைத்திரிபால சிறிசேனவினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தொடர்பில் எதுவும் கூறப்படாதது குறித்தும், அத்துடன் முக்கியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் மைத்திரிபாலவிற்குமிடையில் ஏதாவது ஒப்பந்தம் இருக்கின்றதா என்ற கேள்வி உட்பட மிகவும் ஆழமான பல கேள்விகளும் கேட்கப்பட்டன. இதற்கு மிகத் தெளிவான பதில்களை இரா. சம்பந்தன் அவர்கள் வழங்கினார். அத்துடன் இதன்போது பத்திரிகை அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை இங்கு இணைக்கப்படுகின்றது. Read more