சர்வதேச விசாரணை கோரி, மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 6ஆவது நாளான இன்று (08), வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் நடைபெற்றுவரும் சர்வதேச நீதி கோரிய போராட்டம் நடைபெறும் இடத்தில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சங்கத்தின் உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக இந்த இடத்துக்கு வந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொலிஸார், நீதிமன்றத் தடையுத்தரவு தொடர்பில் தெரியப்படுத்தி, நீதிமன்ற தடையுத்தரவை வழங்க முற்படுகையில், அதில் பெயர் குறிப்பிட்ட நபர்கள், அவ்விடம் இல்லாமையால் பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.

பொலிஸார் வருகை தந்து தடையுத்தரவை வழங்க முற்பட்டபோது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

“சர்வதேச மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி பெண்கள் எத்தனையோ பேர் கண்ணீருடன் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுத்து செயற்படுத்த வேண்டும்” என இதன்போது வலியுறுத்தப்பட்டது.