மியன்மார் இராணுவ ஜுன்டா ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண பொது அமைப்புகள் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு – காந்திபூங்காவில் இன்று (16) கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இக்கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், போரால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினர், பெண்கள் அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் தொடர்பிலான ஊடக அறிக்கையும் இதன்போது வெளியிடப்பட்டதுடன், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர்களுக்கு இவ்வறிக்கை சமர்ப்பிதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டன.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அதிகாரி ஆகியோருக்கு இவ்வறிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.