கோரிக்கை சிலவற்றை முன்வைத்து ரயில் சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில்களை இயக்கும் போது இடம்பெறும் செயல்பாட்டு பிழைகள் காரணமாக ரயில்வே ஊழியர்களிடமிருந்து இழப்பீடுகளை அறவிட அரசாங்கம் எடுத்த முடிவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அனுர பீரிஸ் தெரிவித்தார்.

அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் வெற்றியளிக்காததால் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ரயில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்ட போதிலும் வேறு ஊழியர்களை பயன்படுத்தி அலுவலக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பிரதான ரயில் வீதியில் ஐந்து அலுவலக ரயில்களையும் கடலோர ரயில் வீதியில் 4 அலுவலக ரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய ரயில் வீதிகளில் இரண்டு அலுவலக ரயில்கள் வீதம் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.