பணப் பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பல முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நிறுவனங்களில் அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான எழுதுபொருள்களை கொள்வனவு செய்வது மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவது போன்றவை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அறியமுடிகிறது.

அமைச்சுக்களில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பது மாத்திரமன்றி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பராமரிப்பதிலும் கூட கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு போன்ற அமைச்சுக்களில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இருபதாயிரம் கோடிக்கு மேல் உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல அரச நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் கடுமையான நெருக்கடி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.