வெள்ளம் காரணமாக வடக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு-

வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்புத்தேகமவுக்கிடையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் வெள்ளநீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொள்ளும் ரயில் சாவஸ்திரிபுர வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு – கோட்டையில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ரயில்கள் மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மேலும் கூறியுள்ளது. அத்துடன் கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ரயில் கல்கமுவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடிந்ததும் நிலைமை வழமைக்கும் திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு-

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாத்தறை, நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு ஆபத்து காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. மாத்தளை, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, ஹங்குரன்கெத்த மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாவட்டங்களின் மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் வீதிகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் தலைவிக்கு எதிராக நடவடிக்கை-லோரன்ஸ்-

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே என அக் கட்சியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன் நேற்று அறிவித்துள்ளார். இதுபற்றி மலையக மக்கள் முன்னணியின் பொதுசெயலாளர் ஏ.லோரன்ஸ் கூறுகையில், தீடிரென கூட்டம் ஒன்று கூட்டி கலந்துரையாடி இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது ஒரு நியாயமான செயல் அல்ல. பொது செயலராகிய எனக்கும் இது சம்பந்தமாக எதுவும் அறிவிக்கவில்லை. இது சட்டவிரோதமான ஒரு செயலாகும். ஆரம்பத்தில் எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்போம் என தீர்மானம் எடுத்ததையடுத்து இப்படி தீடிரென மாறுவது குறித்து நான் கவலையடைகின்றேன் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் மலையக மக்கள் முன்னணியின் தலைவி எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த பின் இப்படி தாவியமை குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக பொதுசெயலர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை முன்னணியின் அரசியல்துறை பொறுப்பாளர் வே.இராதாகிருஷ்ணன் அரசிலிருந்து விலகி எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்திருந்தார்.