பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகளை நிகழ்நிலை (Online) மூலமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று (02) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை கையடக்க தொலைபேசி நிகழ்நிலை அல்லது இணையவசதி கொண்ட கணினி மூலம் நிகழ்நிலை (Online) ஊடாக சமர்ப்பிக்க முடியும்.

அத்தோடு இந்த பிரதிகளுக்கான கட்டணங்களை கடன் அட்டை Credit Card மூலம் செலுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய முகவரி ஊடாகப் பயனாளர்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் பயனாளர் வழங்கும் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு கட்டணங்கள் செலுத்துவதற்கான இணைப்பு அனுப்பப்படும். குறித்த இணைப்பின் ஊடாக பயனாளர் பெற்றுக்கொள்ள விரும்பும் பிரதிக்கான கட்டணங்களை செலுத்த முடியும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சான்றிதழ்களை நேரடியாகவோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 011 2 889 518 என்ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)