பல்வேறு விடயங்களை முன்வைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) குற்றஞ்சுமத்தியுள்ளது. 

தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக பஃப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் உள்ளிட்ட தேர்தலை ஒத்திவைப்பதற்கு தாம் ஆதரவாக இல்லை என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் மக்களின் இறைமைக்கு பாரிய சேதம் ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நம்புவதாகவும் 20ஆம் திகதிக்குப் பிறகு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.