எரிவாயு சிலிண்டர் விநியோகம் மூன்று வாரங்களில் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எரிவாயு உற்பத்திக்கு தேவையான தரங்களை இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம் ஏற்கெனவே வழங்கியுள்ளது என்றும் புதிய தரத்தின் கீழ் போதுமான எண்ணிக்கையிலான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ நிறுவனத்துக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்காக லிட்ரோ ஊழியர்கள் 24 மணிநேரமும் உழைத்து வருவதாகவும் நாளாந்தம் 40,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த சில நாட்களாக நாளாந்தம் சுமார் 350,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாகவும்  நாளாந்த எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை 180,000 ஆல் அதிகரிக்க நிறுவனம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்கான வரிசை படிப்படியாக குறையும் என்று கூறினார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்தி செயல்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் நாளாந்தம் சுமார் 300 எரிவாயு வால்வுகள் மாற்றியமைக்கப்பட்டதாகவும், தற்போது நாளாந்தம் 3,000 வால்வுகள் மாற்றப்பட்டு வருவதாகவும், வால்வு மாற்றும் திறனை 20,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.