வவுனியாவில் மகிந்தராஜபக்சவுக்கு ஆதரவாக சிறீ ரெலோ பிரச்சாரம்
இன்று வவுனியா வடக்குப்பிதேசசெயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் மகிந்தவுக்கு ஆதரவானதேர்தல் பிரச்சாரம் ஒன்று வவுனியா வடக்குப் பிரதேசசெயலகர் பிரிவிலுள்ள கிராம அலுவலர்கள் பிரிவிலிருந்து சமுர்த்திப்பணம் வழங்குவதாக திவிநெகும (சமுர்த்தி அலுவலர்கள்) அலுவலர்கள் மூலமாக பொது மக்கள் பிரதேச செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அலுவலகத்தினமாதலால் நூற்றுக்கணக்கான மக்களால் பிரதேசசெயலகம் நிரம்பி வழிந்தது. கூட்டம் ஆரம்பமாகியபோது மேற்படி கூட்டத்தில் கலந்த கொண்டிருந்த வவுனியா மாவட்ட விளையாட்டு அதிகாரி லலித் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பிதேசசபை உறுப்பினர்ர்கள், சமுர்த்தி தலைமைக்காரியாலய அதிகாரி மற்றும் மாவட்டசெயலக சமுர்த்தி உத்தியோகத்தர் கலீல் ஆகியவர்கள் மகிந்தவுக்கு ஆதரவான பிரச்சாரத்தினை நடாத்தினர் பிரச்சாரம் நடைபெற்ற வேளையில் இடைநடுவே சிறிரெலோ உதயராசாவும் மேற்படி கூட்டத்திற்கு வருகை தந்ததுடன் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் சமுர்த்தி உதவி தருவதாக எம்மை அழைத்து தேர்தல் பிரச்சாரம் நடாத்துவதாக முணு முணுத்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் சலசலப்பு அதிகமாக மக்கள் தாமாகவே கூட்டத்தினை விட்டு வெளியேறியுள்ளார்கள் கூட்டத்தினை ஒழுங்கு படுத்தியவர்கள் மக்களை அமருமாறு கோரிய போதும் வெளியேறி உள்ளார்கள் கூட்டம் இடை நடுவே குழம்பியதால் கோபமடைந்த உதயராசாவும் அவரது குழுவினரும் பிரதேச செயலக வாயிலில் மக்களை ஒன்றுதிரட்டி மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முனைந்தபோது மீண்டும் மக்கள் குழம்பியவாறு வெளியேறியுள்ளார்கள் என செய்திகள் கூறுகின்றன .
மகிந்த – மைத்திரிபக்கம் ஆதரவாளர்கள் தாவல்
மகிந்தபக்கம் – தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நால்வர் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று 31.12 வவுனியா சுவர்க்கா விடுதியில் நடாத்தப்பட்ட ஊடகசந்திப்பின் போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரனி உதவித்தவிசாளர் ரிசிதாசன் மற்றம் உறுப்பினர்களான பேரின்பதரன், சிவராஜா ஆகியோரே அரசாங்கத்துக்க ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர். மைத்திரிபக்கம் – குருநாகல் மாவட்டத்தின் முக்கிய பிரதேச சபைகளின் 18 உறுப்பினர்கள் இன்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுளதாகவும். இவர்கள் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் முக்கிய ஆதரவாளர்கள் என்றும், மேலும் வடமேல் மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் ஆளும் தரப்பில் இருந்து 21 பேர் மைத்திரி வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் ஆதரவாளர்கள் உட்பட இருபத்தியொரு உள்ளூராட்சி உறுப்பினர்கள் மைத்திரி பக்கம் இணையவுள்ளதாக தகல்கள் தெரிவிக்கின்றன.
காணமல் போன எயர் ஆசியா விமானம் கண்டுபிடிப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் பயணித்த வேளையில் காணாமல் போன விமானம் சீரற்ற காலநிலை காரணமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விமானம் கடலில் கிட்டத்தட்ட 50 மீற்றர் ஆழத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு உடலங்கள் இந்தோனேஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இந்த விமானத்தில் பயணம் செய்த மற்றவர்களின் சடலங்களையும் இந்த விமானத்தின் கருப்பு பெட்டியையும் தேடும் பணிகள் அந்த கடற்பரப்பில் வீசும் பலமான காற்று மற்றும் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் காரணமாக தடைபட்டிருக்கின்றன. இந்த விபத்து மோசமான வானிலைக்கு நடுவே நடந்திருக்கும் இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை
அகதிகள் கப்பல் ஒன்றை இத்தாலிய கடற்படையினர் கரைசேர்த்துள்ளனர்
சுமார் 700 அகதிகள் பயணிப்பதாக கருதப்படும் மால்தோவா நாட்டின் சரக்குக் கப்பல் ஒன்று இத்தாலிய நாட்டின் கடற்படையினர் கைப்பற்றி தெற்கு இத்தாலித் துறைமுகமான கல்லிபோலி துறைமுகத்தில் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த அகதிகள் அனைவரும் உள்ளூர் பள்ளிக்கூடம் மற்றும் உடற்பயிற்சிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் சிரிய நாட்டு அகதிகள் இருந்ததாகவும். இந்த கப்பல் இத்தாலியை நோக்கி வந்துகொண்டிருந்ததாகவும், கடலின் நடுவே வைத்து இத்தாலிய கடற்படையினர் இந்த கப்பலுக்குள் ஏறியதாகவும். முன்னதாக கிரேக்கக் கடற்கரையோரமாக இந்த கப்பல் பயணித்தபோது இந்த கப்பலில் இருந்து அவசர உதவி கோரப்பட்தாகவும் கூறப்படுகிறது. இந்த கப்பலை மனித கடத்தல்காரர்கள் என்று கருதப்படுபவர்கள் வழிநடத்தியதாகவும், கடலின் நடுவே இந்த கப்பலை அவர்கள் கைவிட்டுவிட்டு அதிலிருந்து ஓடிவிட்டதாகவும் அவர்கள் கைவிட்டபிறகு இந்த கப்பல் தானியங்கி முறையில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இத்தாலிய கடற்படையினர் இதைக்கைப்பற்றி பத்திரமாக கரைக்கு கொண்டுவந்ததாகவும் அதே நேரம் இயந்தியரம் பழுதாகிய நிலையில் உதவி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதக்கடசியில் (நவம்பர்) 600 அகதிகள் இத்தாலிப்பகுதியில் தஞ்சம் கோரியதும். முன்பு பல படகுகள் இத்தாலிக் கடற்பரப்பில் விபத்தக்குள்ளாகி பல நூறு பேர் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட ஆச்சிபுரம், சம்மளகுளம், கல்நாட்டினகுளம், கோமரசங்குளம், கல்வீரங்குளம், சிதம்பரபுரம்கற்குளம், ஆசிகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 648 குடும்பங்ளை சேர்ந்த சுமார் 1950 பேருக்கு உதவ வட மாகாண சபை உறுப்பினர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களினால் வட மாகாண விவசாய அமைச்சு, வட மாகாண சுகாதார அமைச்சின் உதவியுடன் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வட மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன், கௌரவ ம.தியாகராசா, கௌரவ இ.இந்திரராசா சுகாதார அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள இடைத்தங்கள் முகாம்களுக்கு நேரில் எடுத்துச்சென்று வழங்கியதுடன். பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை நேரடியாக பார்த்து, கேட்டு ஆராய்ந்து அறிந்ததுடன். மேலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கும் உலர் உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் மகாநாடு இன்றுகாலை 10.30மணியளவில் கொழும்பிலுள்ள ஜானகி விடுதியில் நடைபெற்றது. இந்த மகாநாடு தேர்தல் சம்பந்தமான அறிவித்தலைக் கொடுப்பதற்காக நடாத்தப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, டெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களுடைய முழுமையான ஆதரவினையும் எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்குவதாக இரா.சம்பந்தன் அவர்கள் இதன்போது அறிவித்தார். மிகப் பெருவாரியான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்ட இந்த மகாநாட்டிலே பல கேள்விகளும் கேட்கப்பட்டு கேள்விகள் அனைத்திற்கும் இரா. சம்பந்தன் அவர்கள் மிகத் தெளிவாக பதில்களை வழங்கினார். இதன்போது பல கேள்விகள் மைத்திரிபால சிறிசேனவினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தொடர்பில் எதுவும் கூறப்படாதது குறித்தும், அத்துடன் முக்கியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் மைத்திரிபாலவிற்குமிடையில் ஏதாவது ஒப்பந்தம் இருக்கின்றதா என்ற கேள்வி உட்பட மிகவும் ஆழமான பல கேள்விகளும் கேட்கப்பட்டன. இதற்கு மிகத் தெளிவான பதில்களை இரா. சம்பந்தன் அவர்கள் வழங்கினார். அத்துடன் இதன்போது பத்திரிகை அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை இங்கு இணைக்கப்படுகின்றது.
வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம், வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லப்பர் மருதங்குளம் விவசாயக் கிராம பலநோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 300 க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரவு உணவினை நேற்று இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் பணிப்புரைக்கமைய மொரிசியஸ் நாட்டில் வசிக்கும் எமது இளைஞர்களால் வழங்கப்பட்ட நிதி உதவியில் அவர்களுக்கான இரவு உணவுகள் கோவில்குளம் இளைஞர் கழகத்தால் உடனடியாக வழங்கப்பட்டது.





தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பணிப்புரைக்கமைய, வவுனியா மாவட்ட புளொட் இணைப்பாளர் திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் வழிகாட்டலில் கோவில்குளம் இளைஞர் கழகமும் இணைந்து இன்றைய தினம் சமளங்குளம் அ.த.க.பாடசாலை, முருகனூர் பாடசாலை, கோமரசங்குளம் பாடசாலை, எல்லப்பர் மருதங்குளம் சனசமூக நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 500 க்கு மேற்ப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டன.
























நாட்டின் ஜனாதிபதிமீது வழக்குத் தாக்கல் செய்யக்கூடிய அளவிற்கு அரசியல் யாப்பில் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 2010ம் ஆண்டுக்குப் பின் ஜனாதிபதி மோசடியான ஆட்சி ஒன்றை நடத்திச் சென்றார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பண்டாரநாயக்க கொள்கை இல்லாதொழிக்கப்பட்டது. அரசாங்க ஊழியர்கள் சுயமாக இயங்க முடியவில்லை. சாதாரண மக்களை மறந்து செயற்பட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்காக பெற்றோல், டீசல் விலையை குறைத்தார். ஆனால் அப்பாவி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டம் இல்லை. இன்று விவசாயிகள் நீரிழிவு நோயாளர்களாக மாறியுள்ளனர். விதை விலை அதிகம். களஞ்சியசாலை வசதி இல்லை. நீர்முகாமைத்துவம் இல்லை. உர பிரச்சினை உள்ளது. உற்பத்திகளுக்கு உரிய விலை இல்லை. ஜனவரி 8ம் திகதிக்குப் பின் அமையும் கூட்டணி அரசாங்கத்தில் விவசாயிகளின் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொலிவூட் நடிகர் சல்மான் கான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். கொழும்பு பொரளையில் நடைபெறும் கூட்டத்திலேயே சல்மான் கான் இணைந்துகொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸ_ம் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார். பொலிவூட் நடிகர் சல்மான் கானுடன் ஆறுபேர் அடங்கிய குழுவினர் இன்றுகாலை இலங்கையை வந்தடைந்திருந்தனர். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவருமாக மொத்தமாக ஆறுபேர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இன்று இணைந்து கொண்டு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிங்கபூரிலிருந்து இன்று அதிகாலை நாடுதிரும்பிய முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அவர் மைத்திரிபாலவுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதியமைச்சர் முஸ்தபா, கடந்த 26ஆம் திகதி சிங்கபூருக்கு பயணமாகியிருந்த நிலையில் இன்று அதிகாலை நாடு திரும்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜனவரி 8ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு இதுவரையிலும் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையை கவனத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைக்குமாறு யாரும் கோரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்கூட்டம் இன்றுமாலை கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது இரு வேட்பாளர்கள் தொடர்பிலும் இருக்கக்கூடிய தமிழ் மக்களுக்குப் பாதகமான விடயங்கள் தொடர்பாக இதில் பங்கேற்றிருந்தவர்கள் எடுத்துக் கூறினார்கள். அத்துடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் குறித்தும், எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் சம்பந்தமாக எதுவுமே சொல்லப்படாத குறைபாடுகள் பற்றியும், தமிழ் மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது. பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவினை அதன் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் ஓரிரு தினங்களுக்குள் பத்திரிகை மகாநாடு ஒன்றில் வைத்து அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன், கருணாகரம், இரா.துரைரெட்ணம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அந்தக் கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தை அறிவித்திருப்பதோடு நீதி அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாம் நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படவிருப்பதாக, அவர் கூறியுள்ளார். மொரவக்க – நாயாமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் போல தேர்தல் சட்டங்களை மீறிய அரச தலைவர் யாரும் இல்லை. எதிர்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மேடைகளுக்கு தீ வைக்கப்படுகிறது. சுவரொட்டிகளை ஒட்டுகின்றவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுதான் தற்போதைய ஜனநாயகம் என்று மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற எயார் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது. இந்த விமானத்தில் 155 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. QZ 8501 என்ற இலக்கத்தை கொண்ட விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. இந்த விமானத்தில் 7 விமானப்பணியார்களும் 155 பயணிகளும் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 400க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பில் 53 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல்கள் செயலக அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 113 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இவற்றில் அதிகமாக கண்டி பொலிஸ் பிரிவில் 13 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் 11 முறைப்பாடுகளும், கொழும்பு தெற்கில் 10 முறைப்பாடுகளும், அனுராதபுரத்தில் 9 முறைப்பாடுகளும், நுகேகொடையில் 8 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சித்திரா மன்திலக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார். கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்து தனது தீர்மானத்தை சித்ரா மன்திலக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிசெய்வதற்காக தாம் செயற்படுவதாக அவர் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார். சித்திரா மன்திலக்க ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட, பாத்ததும்பர தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராக செயற்பட்டு வந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்கிற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதியின் படத்துடனான சில கடிதங்கள் இராணுவத்தினால், இராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அனுப்பப்பட்டதாக அவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், அதனை மறுத்துள்ள இராணுவத்தினர், அவை வருடாந்தம் வழமையாக அனுப்பப்படும் சாதாரண வாழ்த்துச் செய்திகளே என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் அமைப்பின் சார்பிலான ஷான் வீரதுங்க கூறுகையில், இப்படியான ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் திணைக்களம் மூலம் அனுப்பப்பட்டதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது கடந்த சில வாரங்களாகவே இராணுவத்தினர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதை நாம் அவதானித்துள்ளோம்.