ரயில் மார்க்கங்களின் பராமரிப்புக்கு தேவையான உதிரிபாகங்கள் உடனடியாகக் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக மேலும் பல ரயில்கள் தடம் புரளும் என்று இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில்களுக்கு தேவையான உராய்வு நீக்கிகள் மற்றும் இயந்திரங்கள், பெட்டிகளுக்கான பல்வேறு உதிரிபாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாளாந்தம் ரயில்கள் தடம்புரள்வதுடன், இயங்கும் பல ரயில்களில் இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்ட சங்கம், ரயில்கள் இல்லை என்று கூறி பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாகவும் தெரிவித்தது.

ரயில் உதிரி பாகங்கள் இல்லாததால், தற்போது நாளொன்றுக்கு சுமார் 14 ரயில் சேவைகளை திணைக்களம் இரத்து செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே திணைக்களத்தில் 19,382 ஊழியர்கள் தேவை என்றும் தற்போது 10,500 ஊழியர்கள் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவித்த சங்கம், இதன் காரணமாக பயணிகளுக்கு முழுமையான சேவை வழங்கப்படுவதில்லை  என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் திணைக்களத்தின் தற்போதைய நிலைமை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டது.

கொழும்பு பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு அருகில் நேற்று (19) ரயிலொன்று தடம்புரண்டதுடன், காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலொன்று, கொள்ளுப்பிட்டியில் கடந்த வாரம் தடம்புரண்டமையால் ரயில் சேவைகள் பல தாமதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மார்க்கங்களை பராமரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களுக்கான பற்றாக்குறை காரணமாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுவதாகவும் டொலர் நெருக்கடி காரணமாக மூலப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிக்கல் காணப்படுவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார்.