தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை மையமாகக் கொண்டு, தூத்துக்குடி – காங்கேசன்துறை, தூத்துக்குடி – கொழும்பு, ராமேஸ்வரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, தூத்துக்குடி – காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரியில் தொடங்கப்படவுள்ளதுடன், இதற்கான கப்பல் விரைவில் தூத்துக்குடிக்கு வரவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த கப்பலானது தினசரி 120 கடல் மைல் தொலைவை 3 முதல் 4 மணி நேரத்தில் கடக்கும் எனவும் 400 பயணிகள், 40 கார்கள், 28 பஸ்கள் மற்றும் டிரக்களை கொண்டு செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாவிற்கு சொந்தமான கார்கள் மற்றும் பஸ்களில் செல்பவர்கள், தங்கள் கார்கள் மற்றும் பஸ்களையும் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு கொண்டு சென்று, மீண்டும் திரும்பி வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொகுசு கப்பலில் வரி இல்லாத விற்பனைக் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இந்த கப்பலில் பயணிக்க விமானப் பயணத்திற்கு தேவைப்படுவதைப் போன்று விசா, கடவுச் சீட்டு இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
பயணிகள் 80 கிலோகிராம் எடையை மட்டும் தங்களுடன் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.