சபாநாயகர் அவர்களுக்கு நன்றிகௌரவ பிரதமர் அவர்களினுடைய மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பேச்சின்படி, இரண்டு கட்சிகளுமே தேர்தலை நடாத்த வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டு பாராளுமன்றில் சொல்கிறார்கள்.
தேர்தல் நடத்துவதிலே இருக்கக்கூடிய பிரச்சினைகள் சம்பந்தமாக பேசப்படுகின்றது. எங்களுடைய உறுப்பினர் கௌரவ சுமந்திரன் அவர்கள் பழைய முறையிலே சென்று தேர்தலை நடத்த முடியும் என்று தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.
ஆகவே இந்த இரண்டு கட்சிகளையும் பொறுத்தமட்டில் அல்லது வடகிழக்கைத் தவிர்த்து தென்னிலங்கையை அல்லது மற்றைய இடங்களைப் பொறுத்தமட்டில், மாகாண சபை என்பது ஒரு அதிகார போட்டிக்கான விஷயமாக இருக்கிறதே ஒழிய தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் இது ஒரு முக்கியமான விசயமாக, ஆகக் குறைந்தது சிறிதளவாவது நாங்கள் எங்களுடைய பகுதிகளில் இருக்கக்கூடிய விடயங்களை பார்ப்பதற்கான ஒரு சபையாக அதைப் பார்க்கின்றோம்.
ஏனென்றால் எங்களுக்கு தெரியும் இந்த மாகாண சபை ஒரு முழுமையான தீர்வாக இருக்க முடியாது விட்டாலும் நிச்சயமாக அதனை கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் பல தடவைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆகவே இப்போது கௌரவ பிரதமர் அவர்களும் எதிர்க்கட்சியிலே இருக்கின்றவர்களும் இதனை நடத்தத்தான் வேண்டும் என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ஆகவே மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்ளுகின்றோம்.
பிரதமர் அவர்கள் நான்கு மிக முக்கிய அமைச்சுக்களுக்கு பொறுப்பாக இருக்கின்றார். ஆவை மிக முக்கிய அமைச்சுக்கள். இந்த நாட்டின் முழுமையான நிர்வாகத்துக்கு அவை பொறுப்பாக இருக்கின்றன. பிரதமர் அவர்களைப் பொறுத்த மட்டில், அவர் நீண்ட காலம் அதாவது நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பாராளுமன்ற அங்கத்தவராக இருக்கின்கிறார். பல தடவைகள் அமைச்சராக இருந்திருக்கிறார். அவர் அமைச்சராக இருந்த காலங்களில் எல்லாம் நாங்கள் பல பிரச்சினைகளை கொண்டு செல்லுகின்ற போது அவர் அதனை கரிசனையாக கேட்டு அவற்றைத் தீர்ப்பதற்கான முழுமையாக நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றார்.
அவரைப் பொறுத்த மட்டில் இந்த விஷயங்களிலே மிக கவனமாக நேர்மையாக யார் எந்த எதிர்க்கட்சியில் இருந்தாலும் எங்கிருந்தாலும் ஒரு பிரச்சினையைக் கொண்டு வந்தால் அதனை தீர்ப்பதில் மிக அக்கறையாகவே செயல்பட்டு வந்திருக்கின்றார். எங்களுடைய பிரச்சினையிலும் நான் நேரடியாக எடுத்துச் சென்ற பிரச்சினையை அவர் தீர்த்திருக்கிறார். அதற்காக நான் கட்டாயமாக அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ளவேண்டும்.
சுன்னாகத்தில் ஒரு தபால் கந்தோர் கட்டவேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே மிக நீண்டகாலமாக இருந்தது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலே கௌரவ மனோ கணேசன் அவர்கள் அதற்கான நிதியை ஒதுக்கி அதற்கான அடிக்கல் 2019ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. அப்போது அரச அதிபராக இருந்த வேதநாயகம் அவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்த ஒப்பந்தப்காரரிடம் 2019 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முடிவுற வேண்டும் என்று சொல்லி அந்த கட்டடத்தை முடிக்குமாறு கேட்டிருந்தார். ஆனால் அந்த கட்டடம் முடிவு பெறவில்லை. ஆனாலும் அது முடிவுற்றதாக அதற்கான சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கட்டடம் அப்படியே இருந்தது. வேலைகள் நடைபெறவில்லை. நான் இந்த பாராளுமன்றத்தில் அந்த பிரச்சினையை எடுத்தபோது கௌரவ பிரதமர் அவர்கள் தான் அதனை முடித்துத் தருவதாக உறுதி கூறினார். இப்போது அந்த கட்டடம் ஏறக்குறைய முடிந்து விட்டது. இன்னும் சிறு அழகுபடுத்தும் வேலைகள் நடக்கின்றது. அதன் பிறகு அது திறக்கப்படும். அதற்கு நான் எங்களுடைய சுன்னாகம் பகுதி மக்கள் சார்பாக பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
எப்படி மனோகணேசன் அவர்கள் அதனை ஆரம்பித்தாரோ அதேபோல எங்களுடைய பிரதமர் அவர்கள் அதை முடித்து வைத்திருக்கின்றார். இருவருக்குமே நான் நன்றி கூற வேண்டும்.
அதே போல உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள், அவை நடத்தப்படாமல் 8 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நடத்தப்படவில்லை. பணமில்லை என்ற காரணம் கூறப்பட்டிருக்கின்றது. அது வேற விஷயம். ஆனால் அந்த உள்ளூராட்சி சபையிலே வேட்பு மனு தாக்கல் செய்த பலர் அரச உத்தியோகத்தர்களாக இருக்கின்றார்கள். அதிகமானவர்கள் வேலைக்கு போய்விட்டார்கள். ஆனால் பலருக்கு இன்னும் அவர்களினுடைய படிகள் கொடுக்கப்படவில்லை. பலர் இருக்கின்றார்கள் நான் வேண்டுமென்றால் அதனுடைய விபரங்களை என்னால் தர முடியும். அதை சீர் செய்வதற்கு பிரதமர் அவர்கள் கட்டாயம் முயற்சியெடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் நம்பி எட்டு மாதங்கள் தங்களுடய சம்பளத்தை எடுக்க முடியாமல் இருக்கின்றார்கள். அதைக் கட்டாயமாக பிரதமர் அவர்கள் கவனத்தில் எடுத்து தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்த அனைவருக்கும் அவர்களினுடைய படிகள் கிடைப்பதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்கின்றேன்.
அதே போல இந்த நடக்காத ஒரு தேர்தலுக்கு நிர்வாக செலவாக 940 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. இது நான் பத்திரிகையில் பார்த்த விஷயம். இவ்வளவு பொருளாதார நெருக்கடியிலே தனியே வேட்பு மனுக்களை எடுப்பதற்காக 940 மில்லியன் ரூபாவை செலவு செய்வது என்பது இது ஒரு வீண் விரயமாகத்தான் நான் பார்க்கின்றேன். மிகப் பெரும் தொகையான பணம் வீண் விரையம் செய்யப்பட்டிருக்கிறது. பல சந்தர்ப்பத்திலே அரசியல்வாதிகள் விரயம் செய்கிறார்கள். ஊழல் செய்கிறார்கள். என்ற குற்றச்சாட்டுக்கள் தொகையாக வந்து கொண்டிருக்கும். இதில் பலர் இந்த அதிகாரிகள் செய்யும் ஊழல்களை வீண் விரயங்களை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இவைகளையும் நிச்சயமாக பிரதமர் அவர்கள் கவனிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களின் கீழே தான் அதிகாரம் முழுவதும், முழுமையான நிர்வாகம்; இருக்கின்ற படியால் பிரதமர் அவர்கள் இந்த பொருளாதார மீட்சிக்கு அக்கறையாக ஜனாதிபதி அவர்களுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே பொருளாதார மீட்சி என்பது எல்லாருமே ஒத்துச் செய்ய வேண்டிய ஒரு விஷயம். இந்த விசயத்திலே சிலர் செய்கின்ற பிழைகளால் இந்த பொருளாதாரம் மீள்ச்சியிலிருந்து பின்னடைந்து கொண்டிருக்கிறது என்பது நிச்சயமான ஒரு விஷயம்.
மாகாண சபையை பற்றி சொல்லி இருக்கிறோம். அதை நடத்துவதற்கான கட்டாயமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அடுத்ததாக இன்னொரு விஷயம் அம்பாறை மாவட்டத்திலே கல்முனை தமிழ் பிரதேச செயலகம் 2015 ஆம் ஆண்டு இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற அன்று பிரதமராக இருந்த கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கணக்காளர்களை நியமிக்கப்போகிறோம் என்று தமிழ் கட்சிகளுக்கு உறுதியளித்தார். அப்போது வஜிர அபேவர்தன அவர்கள் அமைச்சராக இருந்தார். இன்ன பெயரை நியமிக்கப் போகிறோம் என்று அவர் பெயரும் தருவார். இவ்வாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளிக்கப்படும், பின்பு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று நியமிக்க கூடாது என்று அழுத்தம் கொடுப்பார்கள். அது நியமிக்காமல் விடுபடும். மீண்டும் நாங்கள் சென்று கதைக்கின்ற பொழுது நியமிக்கப்படும் என்பர். பின் அதே முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்க வேண்டாம் என்றபோது நியமிக்கப்படாமல் விட்ட சந்தர்ப்பம் இருக்கிறது.
அதனால் அந்த சபை ஒழுங்காக நடக்காமல் இருக்கின்றது. பல உப சபைகள் இருக்கின்றன. அதற்கு கணக்காளர் போடப்பட்டிருக்கிறது. பிரதேச அலுவலகங்களாக தரமுயர்த்தப்படுகின்றது. மிக நீண்டகாலமாக தமிழர்கள் இந்த கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை செய்ய முடியாத ஒரு நிலையிலேயே இந்த அரசாங்கம் இருக்கின்றது, வெறும் வாக்குகளுக்காக. யாருடைய வாக்கு தேவை என்று யோசிக்கின்றார்களோ அவர்களின் பக்கத்திலே நிற்கின்ற நிலைமை இந்த நாட்டிலே இருந்துகொண்டிருக்கின்றது. இதையும் பிரதமர் அவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அடுத்ததாக வவுனியா நெடுங்கேணி பிரதேசத்திலே வெடிவைத்த கல்லு. அதிலே அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பகுதியைக் கொண்டு வந்து அதிலே இருக்கக்கூடிய கிராம நிலதாரிகள் உடன் சேர்க்கப்பட்டிருக்கின்றது. அந்த கிராமம் ஏறக்குறைய 30 கிலோ மீற்றர் காட்டுப்பாதையால் நெடுங்கேணி பிரதேசசபைக்கு வரவேண்டும். எங்களை விட்டு விடுங்கள் நாங்கள் மீண்டும் அனுராதபுரத்துக்கு போகின்றோம் என்று அந்த அநுராதபுரம் மக்களே பிரதேசசபைக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.. அதை செய்வதற்கு இந்த அரசு தயங்குகிறது. ஏனென்றால் அங்கே ஒரு திட்டம் இருக்கின்றது. இப்போதல்ல மிக நீண்டகாலமாக அந்த திட்டத்தை உருவாக்க பார்க்கிறார்கள். போகஸ்வேவ என்ற இடத்திலே ஏற்படுகின்ற குடியேற்றம். இந்த குடியேற்றத்தின் மூலம் அனுராதபுரத்திற்குள் நிலங்களை சேர்ப்பது, அதிலிருக்கக்கூடிய மக்களை சேர்ப்பது வெளி மாவட்டத்திலிருந்து மக்களை கொண்டுவந்து குடியேற்றுவது, இதன் மூலம் வவுனியா மாவட்டத்தினுடைய குடிப்பரம்பலை மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்த முயற்சிகள் எல்லாம் எடுத்துக்கொண்டு ஒரு பொருளாதார வளர்ச்சியை பற்றி நாங்கள் பேசுவது நிச்சயமாக ஒரு நடைமுறைக்கு சரிவராது.
ஏனென்றால் தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் முழுமனதுடன் இந்த செயல்பாடுகளில் பங்கு பற்ற வேண்டும். அவர்கள் முழு மனதுடன் செயல்பாடுகளில் பங்குபற்றுவது என்றால் அவர்கள் சரியான முறையிலே நடாத்தப்பட வேண்டும். அவர்களுடைய அரசியல் அபிலாசைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இதை நிச்சயமாக அரசாங்கம் செய்யவேண்டும் என்று கேட்டுக் என உரையை முடிக்கிறேன் நன்றி வணக்கம்.