கொலை, ஆட்கடத்தல்களுக்கு எதிராக கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்-
;ஜனநாயகப் படுகொலை, நீதிக்கு புறம்பான சகல ஆட்கடத்தல்கள், கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் பங்கேற்புடன் மாகாணசபையின் பேரவைச் செயலகத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் கண்டனப் போராட்டம் ஒன்று இன்று பிற்பகல் நடாத்தப்பட்டுள்ளது. வடக்கில் போர்க்காலத்தில் காணாமற்போனவர்களை தேடி அலையும் குடும்பங்களின் போராட்டத்தை முடக்கும் நோக்குடன் அரசாங்கத்தினால் திட்டமிட்டு கைதுசெய்யப்பட்டு பூஸா முகாமில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகளான விபூசிகா அகியோரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், இந்தக் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று யாழ்ப்பாணத்தில்; கண்டனப் போராட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பி;னரும் வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களும், வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் உட்பட பலரும் பங்கு பற்றியிருந்தனர். இன்று காலை 9 மணியளவில் வடக்கு மாகாணசபையின் 7ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இதனையடுத்து பிற்பகல் 2மணியளவில் மாகாண சபையின் முன்பாக ஏ-9 வீதியில் இந்தக் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது 13 வயதேயான மகள் விபூசிகா ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என பிரதானமாக வலியுறுத்தப்பட்ட அதேவேளை வடக்கில் தொடரும் சட்டவிரோத கைது நடவடிக்கைகளை அரசாங்கமும் படைத்தரப்பினரும் நிறுத்த வேண்டுமெனவும் இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் கூடிய கவனம் செலுத்தி தமிழருக்குகெதிரான அடக்குமுறைகளைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டுமெனவும் கோரப்பட்டது. Read more