அரசாங்கத்தின் செயற்பாடுகளால்தான் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருள்களுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வைத்திய சேவைகளை முழுமையாக முன்னெடுக்க முடிவில்லை எனவும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்பாக இன்று (06) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிலைய வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் தாதிய உதவியாளர்கள் இணைந்து நண்பகல் 12 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் இப்போராட்டத்தை ஆரம்பித்து, பிரதான வீதி வரை சென்று அங்கு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வைத்தியர்கள்,  “தற்போது மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்குத் தேவையான பொருள்கள் பற்றாக்குறையாக உள்ளன. இருப்பதைக் கொண்டு மக்களுக்கு சேவையை வழங்கி வருகின்றோம். சிக்கனமாக பயன்படுத்துகின்றோம்.

“இந்த நிலை தொடருமானால் வைத்திய சேவையை மக்களுக்கு தொடர்ச்சியான வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் பெரும் சவால்களுக்கு முகங் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்” என்றனர்.