அரசாங்கத்திலிருந்து பதவி விலகியுள்ள அமைச்சர்கள் பயன்படுத்திய அரசாங்கத்துக்கு சொந்தமான இல்லங்கள், வாகனங்கள், தளபாடங்கள், அலுவலக உபகரணங்களை மீளப்பெற வேண்டுமென அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் திறைசேரி அறிவுறுத்தியுள்ளது.

திறைசேரியின் செயலாளராக அண்மையில் பதவி விலகிய எஸ்.ஆர்.ஆட்டிகலே, தான் பதவி விலகுவதற்கு முன்னர் இது தொடர்பான சுற்றுநிரூபத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

பொதுச்சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அரசாங்கத்தின் அனைத்துப் பொதுசொத்துக்களையும் பதிவு செய்தல் என்கிற தலைப்பில் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாணசபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் என அனைவருக்கும் இந்த சுற்றுநிரூபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது