மன்னாரில் கடந்த திங்கட்கிழமை இரவு கார் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 30 ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களின்   பிரேதப் பரிசோதனை யாழ். வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.

இதன் போதே அவர்களது மரணத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது.

கடந்த 30 ஆம் திகதி நான்கு பேர் காரில் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மன்னார் உயிலங்குளம் பகுதியில் ஒரே நேரத்தில் இருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் அதே வாகனத்தில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு   செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் பேசாலை யைச் சேர்ந்த எம்.பிரதீப் (வயது-26) மற்றும் காட்டாஸ்பத்திரியை சேர்ந்த எம்.மசூர் (வயது-35) என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில், சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதுடன், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.