தேசிய தொலைக்காட்சியின் பணிப்பாளர் சபையின் தீர்மானத்திற்கமைய, தமது அனுமதியுடன் Channel Eye -இன் ஒளிபரப்பு நேரத்தை குறுகிய காலத்திற்கு லைக்கா நிறுவனத்திற்கு (Lyca Group) குத்தகைக்கு விட்டுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளரும், வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். Channel Eye ஒளிபரப்பு நேரத்தை மாதம் 25 மில்லியன் ரூபாவிற்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கொடுக்கல் வாங்கலுக்கு அமைச்சரவையின் அனுமதி தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குக் கூட இயலாத அளவில், பெரும் நட்டத்தில் Channel Eye தொலைக்காட்சி இயங்குவதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு Channel Eye நிறுவனம் தள்ளப்பட்டதன் காரணமாக, ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அதனை புதிய தலைவரிடம் ஒப்படைத்ததாகவும் பந்துல குணவர்தன கூறினார்.
Channel Eye தொடர்பான அனைத்து யோசனைகளையும் கருத்தில் கொண்டு, அதன் நன்மை கருதி, குறுகிய காலத்திற்கு அதனை லைக்கா நிறுவனத்திற்கு வழங்க தீர்மானித்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.