தமது பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது. குறித்த குழுவினர் அடுத்த மாதம் 27ஆம் திகதி நாட்டில் தங்கியிருப்பார்கள் என கூறப்படுகின்றது. இலங்கைக்கு வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்விற்காக குறித்த குழு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கோரிக்கைக்கு அமைய, இந்திய கடற்படைக்கு சொந்தமான Donier-228 கடல் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமானப்படை முகாமில் விமானத்தை கையளிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த Donier-228 கடல் கண்காணிப்பு விமானம் இரண்டு வருடங்களுக்கு நாட்டின் விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க இதனை பெற்றுக்கொண்டுள்ளார்.
சீன ஆய்வுக் கப்பல் அடுத்த மாதம் நாட்டிற்கு வரவுள்ள நிலையில், இலங்கை மீண்டும் ஒரு பூகோள அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கரிசனையை ஈர்த்துள்ள Shi Yan 6 கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதை இலங்கை கடற்படை இன்று பிற்பகல் உறுதிப்படுத்தியது. இந்த கப்பல் 17 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை அமைச்சுகளுக்கு வழங்கிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் புதிய நிர்மாணப்பணிகளும் உள்ளடக்கப்படவில்லை.
தேசிய தொலைக்காட்சியின் பணிப்பாளர் சபையின் தீர்மானத்திற்கமைய, தமது அனுமதியுடன் Channel Eye -இன் ஒளிபரப்பு நேரத்தை குறுகிய காலத்திற்கு லைக்கா நிறுவனத்திற்கு (Lyca Group) குத்தகைக்கு விட்டுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளரும், வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். Channel Eye ஒளிபரப்பு நேரத்தை மாதம் 25 மில்லியன் ரூபாவிற்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த ‘செஞ்சோலை’ சிறுவர்கள் இல்ல வளாகத்தில், 2006 ஒகஸ்ட் 14ஆம் திகதி அரச படையால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் உயிரிழந்த 53 மாணவர்கள் உட்பட 61 பேரது 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் (12) குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 77000 செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர்இ அவர்களுக்கு கடந்த காலங்களில் சட்டப்பூர்வ சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
பொது போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படும் பஸ், லொறி மற்றும் ட்ரக் வண்டிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானி எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். எனினும், ஏனைய வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாட்டுகள், சில காலங்களுக்கு தளர்த்தப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.