மன்னாரில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு அழைப்பு-

imagesமன்னாரில் நாளை நடைபெறவுள்ள சத்தியாக்கிரகப போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் ஆகியன இணைந்தே இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்துகின்றன. இப் போராட்டமானது மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப் படுகொலைக்கு பக்கச்சார்பற்ற நீதியான சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும், இறுதி யுத்தத்தில் காணாமல் போனோரை காண்டுபிடிப்பதற்கு சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வேண்டியும், முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதை சர்வதேசம் ஏற்று விசாரணை நடத்த வேண்டும் என்றும், மீள்குடியேறி நான்கு ஆண்டுகளாகியும் முறையாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பதனைக் கண்டித்தும், இந்திய வீட்டுத் திட்டத்தில் மீள்குடியேற்ற கிராமங்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளதையும், கிளிநொச்சி தர்மபுரம் ஜெயக்குமாரியையும் அவரது மகளினதும் கைதை கண்டிப்பதுடன் அதற்கு நியாயம் கேட்பதுடன் வன்னிப் பிரதேசம் எங்கும் திடீர்ரென தொடங்கிய இராணுவ சோதனையை கண்டித்தும் திட்டமிட்ட நில அபகரிப்பும் சிங்கள குடியேற்றத்தை தடுக்கக் கோரியும் அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் இடம்பெறவுள்ளது. மன்னார் பொது விளையாட்டரங்கில் நாளை காலை 9.30முதல் மாலை 3.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது.

முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு-நிமல்கா பெர்னாண்டோ-

nimalka fernandoஇலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான விடயங்கள் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவையின் பிரதிநிதி கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ இது குறித்து தெரிவித்ததாவது, ‘இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ குழுக்களுக்கு எதிரான வன்முறைகளில் எம்மால் அதிகரிப்பைக் காண முடிகின்றது. குற்றமிழைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் தவறியுள்ளது. எனவே அமைப்பின் சிபாரிசுகளை கவனத்திற் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம். இவ்வாறான பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள முடிவை வழங்குவதற்கு நிர்வாகத்தினரால் சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நம்புகின்றோம்,’ என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறை தொடர்பில் அதிகளவு முறைபாடுகள் பதிவு-

cafeமேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பிலான் முறைபாடுகள் இம்முறை அதிகளவில பதிவாகி இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தெற்கு மேல் மாகாண சபைகளிலேயே ஊடகத்துறை மற்றும் கண்காணிப்பு அமைப்புகளும் அதிக அளவில் மத்திய நிலையங்களை கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே அதிகளவான முறைபாடுகள் பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவதை காட்டிலும், மதுபோதையின் காரணமாக ஏற்படுகின்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் தினத்தில், பாதுகாப்பின் தற்போதிருப்பதை விட மூன்று மடங்காக அதிகரிக்குமாறு காவற்துறையிடம் கோரி இருக்கிறோம். வாக்களிப்பை குழப்பியடிக்கும் முயற்சிகள் தொடர்பான முறைபாடுகளும் கிடைத்துள்ளநிலையில், அவற்றை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

தூக்கு தண்டனை தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு-

alugusuதூக்குத் தண்டனை தொடர்பான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை உள்ளடங்கிய அறிக்கை நீதியமைச்சுக்கு கையளிக்க நடவடிக்கை மேற்காள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஷந்ராரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். கண்டி, போகம்பர சிறைச்சாலைக்கு வந்த 90சதவீதமான மக்கள் தூக்குத்தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனைத் தவிர தற்போது கிருல பிரதேசத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தூக்குமேடையை பார்வையிட்ட பெரும்பாலோனோர் தூக்கு தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளனர். இந்நிலையில் மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை நீதியமைச்சிற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கானோர் சாட்சியமளிப்பு-

mattakalappil saatsiyamகாணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சாட்சி விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் இன்று சாட்சி விசாரணைகள் நடைபெற்றன. இன்று சாட்சியமளிப்பதற்காக 54 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் நூற்றுக்கும் அதிகமானோர் சமூகமளித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு – வாகரை, தெற்கு கிரான் ஆகிய பகுதிகளில் சாட்சி விசாரணைகள் பதிவுசெய்யப்படவுள்ளன. இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை முறைப்பாடுகளை பதிவு செய்யாதவர்கள், இந்த 03 நாட்களில் முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் 74 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது-

indian fishermen arrestஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட, மேலும் 74 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 53 மீனவர்கள், 13 மீன்பிடி படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதாகவும், ஏனைய 21மீனவர்கள், 5 மீன்பிடி படகுகளுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டதாவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இந்த மீனவர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்-

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஆளும் கட்சி ஊடக சந்திப்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்ததாவது, ‘பல விடயங்களைத் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலுக்குள் நாட்டு மக்களை தள்ளிவிட அரசாங்கம் தயாரில்லை. அங்கிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அந்த இடத்திற்கு ஆயுதம் எவ்வாறு வந்தது? இதனுடன் யார் தொடர்புபட்டுள்ளார்கள், என்பது தொடர்பில் பரந்த அளவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 30 ஆண்டுகால மோதல்களில் இருந்து மீண்ட மக்களை மீண்டும் அந்நிலையிலேயே வைத்திருக்க நாங்கள் தயாரில்லை. ஆகவே, ஜெனீவா தீர்மானத்திற்கு பயந்து நாட்டின் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை.’ என்றார்.

ஜெயக்குமாரி ஐ.சி.ஆர்.சி உறுப்பினர்கள் சந்திப்பு-

missing_peopleகிளிநொச்சி தர்மபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் காலி மாவட்டத்தின் பூஸா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். இன்றையதினமும் நேற்றுமே அவர்கள் ஜெயக்குமாரியை சந்தித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. பாலேந்திரன் ஜெயக்குமாரியின் மகள் பாலேந்திரன் விபூசிகா (13) நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

தேர்தல் தொடர்பில் 898 முறைப்பாடுகள் பதிவு-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் குறித்த வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 898ஆக உயர்வடைந்துள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது. இதில் 854 சம்பவங்கள் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பானது என கபே இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 44 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேல் மாகாணத்தில் 515 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தென் மாகாணத்தில் 320 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் கபே சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியாவில் இராணுவம் சுற்றிவளைப்பு தேடுதல்-

sivasakthi ananthanவவுனியாவில் உள்ள கிராமங்களில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக சிவில் உடை தரித்த இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு, தேடுதல் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வவுனியாவின் பூந்தோட்டம், அண்ணாநகர், மகாறம்பைக்குளம், கருப்பனிச்சங்குளம் மற்றும் காத்தார்சின்னக்குளம் கிராமங்களில் புதன் நள்ளிரவில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவத்தினர் வியாழன் நண்பகல்வரை அதனைத் தொடர்கின்றனர். இவ்வேளை வீடுகளில் பட அல்பங்களும் சோதிக்கப்படுகின்றன. இன்றுகாலை தமது கடமைகளுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரால் ஆங்காங்கே அடையாள அட்டை பரிசோதனை மற்றும் கேள்விகள் கேட்கப்பட்டே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், யுத்தம் இடம்பெறும் இடத்தினைப் போன்று அவர்கள் அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடித்திரிந்ததாகவும் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். மேலும், வவுனியாவின் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தினர் வீடு வீடாக சென்று பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரம் மற்றும் இருட்டு மடு கிராமங்களும் சுற்றிவளைக்கப்பட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராமத்தவர்களை ஒரு பொது மைதானத்திற்கு விசாரணைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரியவருகிறது. ஏற்கனவே, தமிழர் தாயகப் பிரதேசம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெரும் எடுப்பிலான இத்தகைய சுற்றிவளைப்புக்கள் தேடுதல் நடவடிக்கைகளால் மீண்டும் இப் பிரதேசத்தில் பதற்ற நிலையைத் தோற்றுவிக்கவே அரசு முயற்சிக்கின்றது. மனித உரிமை விவகாரம் ஜெனீவாவில் சூடுபிடித்துள்ள நிலையில், அதனைத் திசை திருப்பவும் தனது ஆக்கிரமிப்புக் கொள்கையிலிருந்து சிறிதளவும் விலகாத தன்மையைக் கொண்டுள்ள அரசும் ஆட்சியாளர்களும் மீண்டும் தமது இரும்புப் பிடிக்குள் தமிழ் மக்களைக் கொண்டுவரும் முயற்சியின் வெளிப்பாடே இதுவாகும். சமீபத்தில் கிளிநொச்சி தருமபுரம் பகுதியிலும் முல்லைத்தீவிலும் இடம்பெற்ற சுற்றிவளைப்பு, தேடுதல், கைதுகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களான வண.பிதா, அவருடன் சென்றவர், ஒன்றுமறியாத தாய் அவருடைய பராயமடைந்த மகள் கைது விவகாரம் குறித்து சர்வதேச சமூகம் கவனத்திலெடுத்து இங்குள்ள தமிழ் மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.