பத்தரமுல்லை – கொஸ்வத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) ஆகிய இரு தினங்களில் வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் மூடப்படவுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

எனினும் பிரதான காரியாலயத்தின் முதலாவது மற்றும் இறுதி அனுமதியை பெறும் பிரிவு மற்றும் கொரிய வேலை வாய்ப்பு பிரிவின் நடவடிக்கைகளும் மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினருடன் முன்னெடுத்துச்செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தலாஹேன காரியாலயம் மற்றும் பிரதேச காரியாலயங்களின் சேவை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறவுள்ளன.

விமான நிலையத்தின் கிளை சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்யும் நடவடிக்கையினை அதன் ஊடாக மேற்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களுக்காக 1989 என்ற துரித இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.