தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். 
தமிழ் மக்கள் இலங்கையில் அச்சமின்றி வாழ்வதற்கு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டு, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை உரிய முறையில் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு கருத்தாடல்களுக்கு மத்தியில் 13 ஆவது திருத்தம் என்பது பந்தாடப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், யுத்தம் நடைபெற்ற பொழுது தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குவதற்கு தயாராக இருந்தவர்கள் யுத்தம் முடிந்த பிறகு எதனையுமே கொடுக்கக்கூடாது என்ற நிலைக்கு வருவதாக இருந்தால், அவ்வாறானவர்களுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை என தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை அரசியல் தலைமைகளிடையே உள்ள முரண்பாடான நிலைமைகளை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏறத்தாழ 70 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் தமது உரிமைக்காக தொடர்ந்து முன்னெடுக்கும் போராட்டத்தை இந்தியாவும் சர்வதேசமும் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்களை கொடுத்தால் நாடே பிளவுபடும் எனும் பிழையான இனவாத கருத்துகள் மீண்டும் மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் திணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், நாட்டில் நிரந்தரமான ஒரு பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெளிவான மொழியில் எடுத்துரைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறில்லையெனின், இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் வழங்கும் உதவிகளும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.