(தேசியத்தின பால் ஈர்ந்தவர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை)இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து குடும்ப உறவுகளின் கைகளினால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இதுவரை இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட அரசாங்கம் எதுவும் கூறவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
எதிர்வரும் 30ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் உலகெங்கும் நினைவுகூரப் படுகின்றது.
அந்த வகையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து குடும்ப உறவுகளின் கைகளினால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் இவர்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதை இதுவரை அரசாங்கங்கள் கூறவில்லை.
கடந்த 14 வருடங்களாக இந்த நாட்டை மாறி மாறி ஆளும் அரசாங்கம் எதுவும் இதற்கான பதிலை வழங்கவில்லை.
இந்த அடிப்படையில் வடக்கு கிழக்கிலே எதிர்வரும் 30ம் திகதி மன்னாரிலும், மட்டக்களப்பிலும் பாரியளவிலான ஆர்ப்பாட்டப் பேரணி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடத்தப்படவுள்ளது.
அந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் முழு ஆதரவையும் கொடுப்பது மாத்திரமல்லாமல் தேசியத்தின் பால் ஈர்ந்தவர்கள் அனைவரும் கூடுமான அளவிற்கு இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு எமது உறவுகளுக்கான நீதியைப் பெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.
இவ் ஊடக சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவர் இரா.துரைரெட்ணம், முன்னாள் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவர் பொ.செல்லத்துரை, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.