உலக நாடுகளில் கொரோனா தொற்றின் ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மேற்கத்தேய நாடுகளில் புதிதாக ‘மங்கி பொக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு அம்மை பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் ஆலோசனை நடத்திவருகிறது. 

“இதுவரையில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின், சுவீடன், ஐக்கிய இராச்சியம் ஆகிய 8 நாடுகளில் சமீப காலத்தில் குரங்கு அம்மை பரவி உள்ளது. இந்த நாடுகளைத் தவிர்த்து அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் உள்ளூர் தொற்றாக குரங்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது” என, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய பணிப்பாளர் குளூஜ் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மேலதிகமாக இஸ்ரேல் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளிலும் தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன், தொற்றாளர்களைக் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,284 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் மேலும் 11 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன், இதனால் அங்கு இதன் பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

குரங்கு அம்மையைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இந்த குரங்கு அம்மையின் அறிகுறிகளாக இருக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.

எளிதாக இந்த நோய் பரவிவிடாது என்றாலும் நெருங்கிய உடல் தொடர்புகள், பாலுறவு போன்றவற்றினால் பரவும் எனவும் மனிதர்களுக்கு இந்த வைரஸ் கண்கள், மூக்கு, வாய், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் வாயிலாக பரவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சுவீடனில் இந்த தொற்று பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்டு, அங்கு இந்த நோய் ஆபத்தான நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரியம்மை தடுப்பூசி போடப்படுபவர்களுக்கு இதன் தாக்கம் மிகக்குறைவாகவே இருக்கும் என, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் பணிப்பாளர் டொக்டர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.

அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் இருந்து தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் மே மாதம் 13 ஆம் திகதி முதல் உலகம் முழுவதிலும் இருந்து 92 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.