உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளதாக சில அறிக்கைகள் வெளியாகியுள்ள நிலையில் அதனை மறுத்துள்ள உலக வங்கி, முறையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்கத் திட்டமிடவில்லை என இன்று (30) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அறிவித்துள்ள மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் ஹதாத்-செர்வோஸ், உலக வங்கி குறிப்பிட்ட தொகை நிதி உதவியை வழங்குவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறானது என்றார்.

குறிப்பாக அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக கொழும்பில் உள்ள உலக வங்கியின் முகாமையாளர் சியோ கண்டா கூறியதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையை கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உடனடி நிவாரணங்களை உலக வங்கி வழங்கவுள்ளதாக அண்மைய அறிக்கைகளின் அவதானிக்க முடிகின்ற போதிலும்  இது துல்லியமான அறிக்கை அல்ல. நாங்கள் இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.தற்போதுள்ள திட்டங்களில் இருந்து சில ஆதாரங்களை நாங்கள் மீண்டும் உருவாக்குகிறோம். மேலும்  பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான கொள்கைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறோம். கடந்த கால கொள்கைகளை மாற்றியமைக்க உதவுகிறோம் என தெரிவித்தார்.

எனினும் போதுமான முறையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை என்று அவர் கூறினார்.