2015ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து தாக்கல் செய்யப்பட்ட 1ஆவது பிணை முறி மோசடி வழக்கின் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் 9 பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (11) கட்டளையிட்டது.

பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் பிரிவாதிகளுக்கு சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டைப் பேண முடியாது என்று பிரதிவாதிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனையை நீதிபதிகள் குழாம் ஏற்றுக் கொண்டதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சஞ்சீவ மொராயஸ், தமித் தோட்டவத்த மற்றும் நாமல் பலேல்ல ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான நீதிபதிகளின் உடன்பாட்டின் பேரில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.