தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டிசம்பரில் அழைக்கும் கூட்டத்தில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரது வீட்டில் நேற்று(23.11.2022) நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களோடும் நாளை(25.11.2022) நடைபெறவிருக்கும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் பங்குபற்ற அழைக்கப்படுவார்கள் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், தீர்வு முயற்சிகளுக்கான பேச்சு தொடர்பாக இப்போது ஏற்பட்டுள்ள களச்சூழல் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது சமஷ்டி அடிப்படையிலான தீர்வை ஒன்றுபட்டு நின்று வலியுறுத்துவது எனவும், பின்னர் நிலைமைகளுக்கு ஏற்ப விடயங்களைக் கூடிக் கதைத்துப் பரிசீலித்து தீர்மானங்களை எடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.