Header image alt text

N ews

Posted by plotenewseditor on 20 August 2013
Posted in செய்திகள் 

தேர்தல் நடவடிக்கைகளை மும்மொழிகளில் முன்னெடுக்குமாறு கோரிக்கை-

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை மும்மொழிகளிலும் முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம், தேசிய மொழிகள் ஆணைக்குழு கோரியுள்ளது. விசேடமாக தேர்தலுக்கு பயன்படுத்தும் ஆலோசனை கையேடுகள், அறிவித்தல்கள் உள்ளிட்ட ஆவணங்களை மும்மொழிகளிலும் தயாரிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவதே இதன் நோக்கமெனவும், அதற்குத் தேவையான அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தேசிய மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க மேலும் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இந்திய தலைவர்கள் சந்திப்பு-
இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் ஐந்து தலைவர்களை சந்திக்கவுள்ளாரென இந்திய ஊடகங்கள் செ;தி வெளியிட்டுள்ளன. எதிர்;க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விஜயத்தின்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித், வெளிவிவகார செயலர் சுஜாதா சிங் உள்ளிட்டவர்களைச் சந்திக்கவுள்ளார். இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ராஜநாத் சிங்கை சந்தித்துள்ளார். இதன்போது, இந்திய இலங்கை மீனவ பிரச்சினை, வட மாகாணசபை தேர்தல், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.
தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடு பதிவு-
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் இதுவரை 149 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலக முறைப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல்களுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்தப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் 29 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குருநாகல் மாவட்டத்தில், 42 முறைப்பாடுகளும், மாத்தளை மாவட்டத்தில் 25 முறைப்பாடுகளும், கண்டி மாவட்டத்தில் 18 முறைப்பாடுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 17 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலக முறைப்பாட்டு பிரிவு மேலும் கூறியுள்ளது.
வடகொரிய மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணை-
வடகொரியாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்துள்ளது. இதற்கமைய தென்கொரியத் தலைநகரில் ஐ.நாவின் மூவரடங்கிய குழு விசாரணைகளுக்காக நேரடி சாட்சியங்களை பதிவுசெய்து வருகின்றது. விசாரணையாளர்கள் வடகொரியாவிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டமையினால் முதற்கட்ட விசாரணைகள் தென்கொரியாவில் இடம்பெறுவதுடன், அடுத்தகட்ட விசாரணைகள் ஐப்பானில் இடம்பெறவுள்ளன. துன்புறுத்தல், கடத்தல் மற்றும் சித்ரவதை முகாம்கள் போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக வடகொரியாமீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இந்த விசாணைக்குழு அடுத்தாண்டு விசாரணை அறிக்கையை ஐ.நா சபையில் சமர்ப்பிக்கவுள்ளது
தபால்மூலம் வாக்களிக்க 1லட்சத்து 11ஆயிரத்து 383பேர் தகுதி-
மாகாண சபைத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க 1,11,383பேர் தகுதிபெற்றுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இம்முறை தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க ஒரு லட்சத்து 33ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 1,11,383பேரே மேற்படி தபால்மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர். இதற்கமைய தபால்மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச்சீட்டுகளை எதிர்வரும் 22ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து இலங்கை வந்தவர்கள் கைது-
சட்டவிரோதமான முறையில் படகுமூலம் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த 6பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உருமலைப் பகுதியில் வைத்து இவர்கள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு ஆண்கள், பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் அடங்குகின்றனர். கைது செய்யப்பட்டோர் தலைமன்னார் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மூளாய் பகுதியில் கூட்டமைப்பு வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தேர்தல் கருத்தரங்கு-

Card copyயாழ். மூளாய் பகுதியில் நேற்று முன்தினம் மாலை வட மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்களும், உள்ளுராட்சி சபைகளின் அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். Read more

வலி. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு-

யாழ்ப்பாணம், சுன்னாகம் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் ஒன்று வலி வடக்கு; பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு. குமாரவேல அவர்களின் தலைமையில் இன்றுமாலை திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் ஆகியோரும் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் பிரகாஸ் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

News

Posted by plotenewseditor on 19 August 2013
Posted in செய்திகள் 

தாய்லாந்து மகாராணி இலங்கைக்கு விஜயம்-

தாய்லாந்தின் மகாராணியார் மஹாசக்ரி சிரின்டோம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் பெரஹரவை பார்வையிடவே அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின்போது, தாய்லாந்து மகாராணியார் கொட்டாஞ்சேனை, தீப்பதுத்தார பௌத்த ஆலயத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நாளை சந்திப்பார் எனவும், இலங்கை விஜயத்தினை நிறைவு செய்துகொண்டு அவர் மாலைதீவு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தகுதி-

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 383 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஒரு இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்ததாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 22ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு இந்தியாவிற்கு அழைப்பு-

வட மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்காக இந்தியாவின் தேர்தல் ஆணையாளர் வீ.எஸ். சம்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறும் தேர்தல்களை கண்காணிக்குமாறு கோரி இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் அழைக்கப்பட்டுளளனர். வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடாத்தவே விரும்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இராஜதுரை எம்.பி தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைவு-

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பி.இராஜதுரை தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தலைமையில் ஹட்டனில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரச சொத்துக்களை பயன்படுத்தல் குறித்து முறைப்பாடுகள் பதிவு- மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் 18 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தேர்தல்கள் முறைப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை ஆரம்பமான நாள்முதல் இதுவரை தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 119 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

கனடாவும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்குமென அறிவிப்பு-

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கனடா உள்ளிட்ட எந்த ஒரு பொதுநலவாய நாடும் புறக்கணிக்காது என மாநாட்டின் செயற்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, பொதுநலவாய நாடுகளின் செயற்குழு பணிப்பாளர் ரிச்சர்ட் உக்கு உள்ளிட்ட, 17 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிச்சர்ட் உக்கு, இம்முறை இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும். எந்த ஒருநாடும் இதனை புறக்கணிக்காது என குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விருப்பு இலக்கம் – 3 கந்தையா சிவநேசன் (பவன்) கருத்துப் பகிர்வு-

4கந்தையா சிவநேசன் ஆகிய நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே வட மாகாணசபைத் தேர்;தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். இந்த மாகாணசபைத் தேர்தலானது ஏனைய தேர்தல்களைப் போலல்லாமல் இது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்மூலம் கிடைக்கப்பெற்ற 13ஆவது திருத்தச் சட்டத்திற்கமைய இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது. இது மிக நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்த ஒரு தேர்தலாகும். திட்டமிட்டு இந்த சிங்கள அரசு இந்தத் தேர்தலை நடாத்தாமல் இவ்வளவு காலமும் இழுத்தடித்து வந்து, சர்வதேச மற்றும் இந்தியாவினுடைய அழுத்தங்களின் மூலம்தான் இந்தத் தேர்தலை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலையை அவர்களுக்கு உருவாகியிருக்கின்றது. சுதந்திரம் அடைந்ததிலே இருந்து சிங்கள அரசும், சிங்களப் பேரினவாதிகளும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வந்த சூழ்நிலையிலே உருவாக்கப்பட்ட சகல சாத்வீகப் போராட்டங்களும் நசுக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து வந்த ஆயுதப் போராட்டமும் இன்று நசுக்கப்பட்ட நிலையிலேயே இந்தத் தேர்தல் நடாத்தப்படுகின்றது. எனவே நாங்கள் இந்தத் தேர்தலிலே தோல்வியடைவோமாக இருந்தால் இன்று இருக்கின்ற சர்வதேச அபிப்பிராயங்களும், எங்களுக்கிருக்கின்ற ஆதரவுகளும் நிச்சயமாக அற்றுப் போய்விடும். காரணம் என்னவென்றால் உங்களுக்குத் தெரியும் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் யுத்தக்குற்றங்கள் கூட இந்தத் தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்துதான் அவற்றை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த 13ஆவது திருத்தச் சட்டம், அதிலே தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விடயங்கள் போதாது என்பதற்காக, அதை ஏற்றுக்கொள்ளாமல் தான் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இந்த ஆயுதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டதன் பின்பு எங்களுக்கு சட்டமாக்கப்பட்டிருக்கின்ற ஒரேயொரு விடயமாக தமிழ் மக்களுடைய தீர்வு விடயத்திலே இந்த 13ஆவது திருத்தம் மாத்திரமே இருக்கின்றது. அதையும் ஏதோ ஒரு காரணங்களுக்காக அல்லது ஒரு மிகக்குறைந்த அதிகாரங்களைக்கூட தமிழ் மக்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற அடிப்படையிலே பேரினவாத சக்திகள் இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டுமென்று முனைப்புடன் செயற்படுகின்றன. இதனால் நிச்சயமாக இந்தத் தேர்தலிலே தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தங்களுடைய 13ஆவது திருத்தத்துக்கான இந்த தேர்தல் குறித்த மகிந்தவினுடைய கொள்கையினை முறியடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். ஏறக்குறை 82ஆம் ஆண்டு காலப்பகுதியிலே இருந்து தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்திலே பங்குபற்றியவன் என்ற ரீதியிலும் பல பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியவன் என்ற அடிப்படையிலும் இன்று இருக்கின்ற இந்த சூழ்நிலையிலேயே இந்தத் தேர்தலிலே நான் போட்டியிடுகின்றேன். எனவே மிக நீண்டகால போராட்ட அனுபவம், ஆயுதப் போராட்ட அனுபவம் மாத்திரமல்ல, அரசியல் ரீதியான அனுபவங்களைக் கொண்டிருக்கின்றபடியினால் நான் உங்களுடைய அபிலாசைகளை அல்லது உங்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிப்பேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். அததுடன் நிச்சயமாக உங்களுக்குத் தெரியும் இன்று அரசினால் முன்வைக்கப்படுகின்ற ஒரேயொரு காரணம் அபிவிருத்தி என்ற விடயம் மாத்திரமே. அபிவிருத்தி என்பது அது எங்களுடைய உரிமை. இது ஒரு தனிக் குடும்பம் எங்களுக்குக் கொடுக்கின்ற சொத்துக் கிடையாது. அல்லது பேரினவாதிகள் எங்களுக்குக் கொடுக்கின்ற ஒரு சொத்தும் கிடையாது. இது எங்களுக்குரிய அபிவிருத்தி. நாங்களே அந்த அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும். எங்களுடைய சொந்த உரிமைகளை இவர்கள் பிச்சை போடுவதாக கூறிக்கொண்டிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. எனவே இந்தத் தேர்தலிலே நீங்கள் எனக்கு வாக்களித்தால் நிச்சயமாக உங்களுடைய அபிலாசைகளையும் உங்களுடைய எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நான் செயற்படுவேன் என்று உறுதி கூறுகின்றேன்.

நன்றி. கந்தையா சிவநேசன் (பவன்)- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர், முல்லைத்தீவு மாவட்டம் – விருப்பு இலக்கம் – 3.

செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் கூட்டமைப்பு வேட்பாளர் அறிமுக நிகழ்வு-

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நேற்றுமாலை 3மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், செட்டிக்குளம் பிரதேச சபைத் தலைவர், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களான ஜி.ரி.லிங்கநாதன் (விசு), க.சந்திரகுலசிங்கம் (மோகன்) எம்.எம்.ரதன், செந்தில்நாதன் மயூரன், எஸ்.தியாகராஜா, எம்.பி.நடராஜா, எஸ்.ரவி, ஆர்.இந்திரராஜா, வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம் ஆகிய வேட்பாளர்களும், ஆதரவாளர்கள், பொதுமக்கள், கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது பொதுக் கூட்டமும், வேட்பாளர் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது; செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் எம்.பி ஆகியோரின் உரைகளுடன் ஒன்பது வேட்பாளர்களின் உரைகளும் இடம்பெற்றதுடன், பொது மக்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.

சுதந்திரக் கட்சி அலுவலகங்கள்மீது தாக்குதல் மற்றும் எரியூட்டல்-

வவுனியா தேக்கவத்தை, தோணிக்கல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள சுதந்திரக்கட்சி அலுவலகங்கள் நேற்றிரவு 9.30மணியளவில் தாக்கப்பட்டும், அந்த அலுவலகங்களில் இருந்த சுதந்திரக் கட்சி வேட்பாளர்களின் விளம்பரப் பலகைகள் மற்றும் பதாதைகள் எரியூட்டப்பட்டும் உள்ளன. அந்த சமயத்தில் சந்தேகத்தின் பேரில் சுயேட்சைக்குழு -இல-3இன் வேட்பாளர் ஆனந்தகுமார் பரணீதரன் என்பவரும், மூன்று முறிப்பு பிள்ளையார்கோவில் குருக்கள் சிறீ ஐயரும் வவுனியா பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டு வவுனியா பொலீசில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

129 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு-

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது முதல் இதுவரை 129 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தின் நிக்கவெரட்டிய மற்றும் பிங்கிரிய பகுதிகளில் அதிக வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென கபே குறிப்பிட்டுள்ளது. தாக்குதல், வானத்தை நோக்கி சுடுதல், அச்சுறுத்தல், கட்சி அலுவலகங்கள் தாக்கப்படுதல் போன்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் கடந்த வாரத்தில் குருநாகலில் பதிவாகியுள்ளன. அங்கு ஒரே கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் அதிகரித்து வருகிறது. யாழ் நெடுந்தீவு, மாத்தளை நாவுல, கண்டி வத்தேகம ஆகிய பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் எவ்வித தேர்தல் வன்முறைகளும் பெரியளவில் இடம்பெறவில்லை என கபே கூறியுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி நவநீதம்பிள்ளையை சந்திக்க நடவடிக்கை-

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆனையாளர் நவநீதம்பிள்ளைக்கும் குற்றப்பிரோனை மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்குமிடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குற்றப்பிரேரணை மூலம் கடந்த மார்ச் மாதம் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் முன்னாள் நீதியரசர் கலந்துகொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இதுவென்று கூறப்படுகிறது. அதேபோல் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஷிராணி பண்டாரநாயக்க சந்திக்கும் முதலாவது ராஜதந்திரி நவநீதம்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஷிராணி பண்டாரநாயக்க ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் சர்வதேச நீதியரசர்களின் கூட்டத்தில் உரையாற்றவிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறினால் அது முடியாமற் போயிருந்தது.

தேர்தல் ஆணையாளர் வடபகுதிக்கு விஜயம்-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 383 பேர் தகுதி பெற்றுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 542 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. அவற்றில் 22 ஆயிரத்து 159 விண்ணப்பங்கள் நிராக்கப்பட்டன. அதிக அளவில் குருநாகல் மாவட்டத்தில் இருந்தே அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணிப்பிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து குறைந்த அளவாக 831 பேர் அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணபித்துள்ளனர். கண்டி மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களே அதிக அளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இம்மாதம் 21ம்திகதி வடபகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் விமானப்படையினர் இருவர் பலி, ஒருவர் படுகாயம்-

திருகோணமலை, பளிங்கு கடற்கரைப் பகுதியில் (மாபல்பீச்) உள்ள விடுமுறை விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விமானப் படையில் பணி புரியும் பெண் ஒருவரும் விமானப்படை வீரர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். விமானப் படையினால் நடத்திச் செல்லப்படும் விடுமுறை விடுதியிலேயே இத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானப்படை கோப்ரல் ஒருவர் குறித்த இருவர்மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் வின்கமான்டர் என்டி விஜேசூரிய தெரிவித்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் செய்தபின் விமானப்படை கோப்ரல் தன்னைத்தானே சுட்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரமே இச்சம்பவத்திற்கு காரணமென்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் உண்மை நிலவரம் அறிய சந்தர்ப்பம்-பிரிட்டன்-

இலங்கையின் உண்மை நிலைமைகளை பார்வையிடுவதற்கு பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். உலகத் தலைவர்கள் வெளிவிவகார அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோருக்கு நாட்டின் உண்மையான நிலைமைகளை நேரில் கண்டுகொள்ள இந்த அமர்வு சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் வர்த்தக மாநாட்டுக்கான முன்னோடி நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு லண்டனில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இலங்கை சமாதானத்தை எட்டியுள்ளதாகவும், இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் கிறிஸ் நோனீஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சார்க் கண்காணிப்பாளர்கள் 17பேர் வடக்கு தேர்தல் பணியில்-

வட மாகாண சபைத்தேர்தலை கண்காணிப்பதற்கு தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) கண்காணிப்பாளர்கள் 17 பேர் கண்காணிப்பதற்கு வருகை தருவர் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களின்போதும் அரசாங்கம், அரச சொத்துக்களை தேர்தல்கள் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வடக்கில் இராணுவத்தின் இடையூறுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி கட்சி உறுப்பினர்களின் விபரங்களை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் திரட்டி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

யாழ் – கொழும்பு புகையிரத சேவை ஆரம்பம்-

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவை அடுத்த சித்திரை புத்தாண்டு தினத்தில் ஆரம்பிக்கப்படும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ். பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றும்பேதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் யாழில் இருந்து புகையிரதத்தின் மூலம் கொழும்பு வெள்ளவத்தைக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் ஒரு நெருக்கமான உறவைப் பேணக் கூடிய நிலை காணப்பட்டது. இப்போது மறுபடியும் புகையிரதம் கிளிநொச்சி வரை வந்து செல்கின்றது எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்தன்று யாழில் இருந்து கொழும்புக்கான புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த கால அவகாசம்-கபே

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பினர்களால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென சுதந்திரமானதும் நியாயமானதுமக்கான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அறிவித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 6 வார காலப்பகுதிக்குள் வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி வட மாகாண வேட்பாளர்களின் அரசியல் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு வருதல் மற்றும் வடமாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியா மாவட்ட வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலின் போது வாக்களிப்பதற்கு சுமார் ஒரு இலட்சம் பேரிடம் தேசிய அடையதள அட்டைகள் இல்லை. அதிலும் சுமார் 80ஆயிரம் பேருக்கு எந்தவிதமான அடையாள அட்டைகளும் இல்லை. இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பால் அச்சுறுத்தல்; விடுக்கப்பட்டுள்ளது என ஆறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வடக்கில் இன்னும் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்கள் மற்றும் அரச தரப்பினர் போட்டியிடாத பிரதேசங்களைச் சேர்ந்த வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைளுக்கு பாதுகாப்பு தரப்பினர் இடையூறு விளைவிக்கின்றனர். இந்நிலையில், எதிர்வரும் 6 வார காலப்பகுதிக்குள் வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி வட மாகாண வேட்பாளர்களின் அரசியல் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலைப் பாதிக்கும் வகையில் இராணுவத் தலையீடு தொடர்கிறது
Captureவெலிவேரிய உயிரிழப்பு சம்பவத்தை பெரியதொரு விடயமாக எண்ணி சர்வதேச விசாரணை தேவை என்று கோஷமிடும் சிங்களக் கட்சிகள், இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் உயிரிழந்த போது ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தார்கள் என்று கேள்வியெழுப்பிய  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் சித்தார்த்தன், இனிமேலாவது எல்லாச் சம்பவங்களையும் சேர்த்து விசாரிப்போம் என்று இவர்கள்  கூறுவார்களா? என்றும் வினவினார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பேட்டியின் விபரம் வருமாறு;
கேள்வி: இலங்கை வரவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர்  நவநீதம்பிள்ளையை சந்திக்கும் வாய்ப்பு கூட்டமைப்பினருக்கு இருக்கிறதா?
பதில்: ஆம். தமிழ் மக்கள் இந்நாட்டில் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும்  எடுத்துக்கூறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று நான்  நினைக்கிறேன்.
கேள்வி: எவ்வாறான விடயங்களை அவரிடம் நீங்கள் முன்வைக்க இருக்கிறீர்கள்?
பதில்: முக்கியமாக நாம் அடிக்கடி பேசிவரும் விடயங்களான இளைஞர்களின் விடுதலை பற்றி பேசவிருக்கிறோம். முதலாவதாக தடுப்புக்காவல்களில் நீண்டகாலமாக  விசாரணைகளின்றி இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை, இன்றும்  இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வடகிழக்கில் உளவியல் ரீதியாக  அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் சம்பவங்கள் பல இடம்பெறுகின்றன அவை  பற்றியும் மேலும், காணிபறிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற பல விடயங்கள்  குறித்தும் பேசவிருக்கிறோம். இவை பலமுறை கூறப்பட்ட விடயங்களாக இருப்பினும், திரும்பத் திரும்ப இவற்றைக் கூறினால் தான் அவர்கள் இவ்விடயங்களை தமது  கவனத்தில் சரியாக எடுத்து அதற்கு ஒரு சரியான தீர்வை எமக்குப் பெற்றுத்  தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு வரும் கூட்டமைப்பு வேட்பாளர்களின்  பாதுகாப்புத் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளை  எடுத்துள்ளது?
பதில்: அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடுகள் வரும்போது அது குறித்து தேர்தல்  கண்காணிப்புக் குழுவிடமும், தேர்தல் ஆணையாளரிடமும் பொலிஸாரிடமும்  அறிவிக்கிறோம். இதைத்தான் எம்மால் முதலாவதாக செய்யக்கூடியதாக இருக்கிறது. இதைவிட மிகக்கூடிய அச்சுறுத்தல்கள் வரக்கூடிய வேளையில் தான், மேலதிகமாக  என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என யோசிக்கலாம்.
கேள்வி: வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகிறது. இது  தேர்தல் வாக்களிப்புத் தினத்தில் எவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: இது தொடர்பில் நாம் சர்வதேசத்திடமும் இலங்கை அரசிடமும் பேசியிருக்கிறோம். உண்மையில் இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள், தேர்தல்  விடயங்களிலும் மக்களையும், வேட்பாளர்களையும் நேரடியாக பாதிக்கும் வகையில்  அவர்கள் ஈடுபடுகிறார்கள். இவை நிறுத்தப்பட வேண்டுமாயின் இராணுவம்  முகாம்களுக்குள் முடக்கப்படவேண்டும். ஆனால், அரசு இதை தங்களால்  முற்றுமுழுதாக செய்ய முடியாது என்று கூறுகின்றது. இருந்தபோதும், இது  தொடர்பில் நாம் சர்வதேசத்திடம் தொடர்ந்தும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். இது தொடர்பில், சர்வதேசம் நேரடியாக தலையிடாவிட்டாலும் மறைமுகமாக அரசுக்கு  அழுத்தங்களை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனால் இராணுவத்தினரின்  தலையீடு முழுமையாக இல்லாவிடினும், ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படும் என்று  நான் நினைக்கிறேன்.
கேள்வி: தெற்கில் முஸ்லிம் பள்ளிகளை அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் சிங்களக்  கடும் போக்காளர்கள் வடக்கில் புத்தர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்புக்  காட்டாமல் இருப்பது ஏன்?
பதில்: யுத்தம் முடிவடைந்ததன் பின் வடக்கு, கிழக்கிலே பெருமளவான விகாரைகள்  உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆரம்பத்திலேயே இவற்றுக்கெதிராக நான்  கண்டனங்களை தெரிவித்திருக்கிறேன். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன், “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரைகள் அமைப்பது  புத்தபெருமானை அவமதிக்கும் செயல்’ என்று கூறியிருக்கிறேன். இதுவொரு  ஆக்கிரமிப்பின் அடையாளமாகவே நான் கருதுகிறேன். “யுத்தத்தில்  வென்றுவிட்டோம்; நீங்கள் தோற்கடிக்கப்பட்ட ஓர் இனம்’ என்ற மமதையிலே  செய்யும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே இதை நான் பார்க்கிறேன். பல  ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு செய்கிறது. அதிலொன்றுதான் இதுவும். பல  புத்த விகாரைகள் வட, கிழக்குப் பகுதிகளில் கட்டப்பட்டிருந்தாலும்  வழிபடுவதற்கு ஆட்களில்லாமல் அவை வெறுமையாகவே காணப்படுகின்றன. பௌத்தர்கள்  இருந்தால் அங்கு ஆலயம் அமைப்பதை ஏற்றுக்கொள்ளலாம். இது குறித்து நாம்  பேசினால், பௌத்த தலைவர்கள், கொழும்பு, காலியில் இந்தக்கோயில்கள்  இருக்கும்போது நாம் வட, கிழக்குப் பகுதியில் பௌத்த விகாரைகளை அமைத்தால்  என்ன? என்று கேட்கிறார்கள். கொழும்பிலும் காலியிலும் இராணுவமோ அரசாங்கங்களோ இந்துக்கோயில்களை அமைக்கவில்லை. அவற்றை அந்தந்த பிரதேசங்களில் வாழ்ந்த  இந்து மக்கள் தாங்கள் வழிபடுவதற்காக அமைத்தார்கள் ஆனால், வடகிழக்கில் புத்த விகாரைகள் அமைப்பது அவ்வாறல்ல. இவற்றை இராணுவம் எமது நிலங்களை  ஆக்கிரமிக்கும் நோக்கில் அமைக்கின்றது. அதையே நாம் எதிர்க்கிறோம்.
கேள்வி: வவுனியாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனரா?
பதில்: அனைவரும் மீள்குடியேற்றப்படவில்லை. சிறுதொகையினர் மெனிக் முகாமில் இன்னும் இருக்கிறார்கள். எத்தனைபேர் அங்கு இருக்கிறார்கள் என்று அதிகமானோர் அவரவர் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்பட வில்லை. மிகப்பெரும்பான்மையான மக்கள்  இன்றும் எந்தவொரு வசதியுமில்லாது சிறு குடிசைகளில் மிகவும் கஷ்டமானதொரு  நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். வீட்டுத்திட்டங்கள் சரியான முறையில்  பூர்த்தி செய்யப்படவில்லை. இந்திய வீட்டுத்திட்டங்கள்கூட மக்களிடம் இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை. இந்திய வீட்டுத்திட்டத்தில் கூட அரசு  பலதடைகளைச் செய்து வந்தது. தற்போது இந்தியா அந்த மக்களுக்கு பணத்தை  கொடுத்து வீடுகளை கட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், இந்த அரசு இன்றுவரை மக்களுக்கு எந்தவொரு வீட்டையும் கொடுக்கவில்லை. அழிக்கப்பட்ட  வீடுகள் அழிக்கப்பட்டதாகவே இருக்கின்றன. மக்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள். இதுதான் இன்றைய அவர்களின் நிலைமை. இன்று வன்னியிலே பல குடும்பங்கள்  பெண்களை தலைமையாகக் கொண்டுதான் இருக்கின்றன. ஆண்கள் யுத்தத்தில்  இறந்துவிட்டார்கள். அதனால் பெண்கள் தலைமை தாங்கி தமது குடும்பங்களை மிகவும் கஷ்டப்பட்டு வழிநடத்துகிறார்கள். இக்குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றன. இவர்களுக்கு உதவிசெய்து வாழ்வாதாரத்தை உயர்த்த  வேண்டுமென்ற கடமை அரசுக்கு இருந்தாலும், அபிவிருத்தி என்ற பெயரில் பாதைகளை  அபிவிருத்தி செய்வதிலும் மின்சாரத்தை வழங்குவதிலுமே அரசு மும்முரமாக  செயற்பட்டு வருகின்றது. சுகாதார வசதிகளை வழங்குவதிலோ அல்லது அம்மக்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலோ அரசு ஒரு துணியளவுகூட அம்மக்களுக்கு  உதவமுன்வரவில்லை. இன்று இவற்றைப் பார்த்து அந்த மக்களுக்கு அடிப்படை  வசதிகள் பெற்றுக் கொடுப்பது நிச்சயமாக எங்களுடைய கடமையாக இருக்கிறது. இவ்விடயங்கள் தொடர்பில் நான் சம்பந்தனுடன் கதைத்திருக்கிறேன். அவரும் மாகாண சபைத் தேர்தலுக்குப்பின் அரசின் நிதியில் தங்கியிராமல் கூடியளவுக்கு எமது  வெளிநாட்டில் வாழும் உடன் பிறப்புகளான புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து  உதவிகளைப் பெற்று அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைப்  பெற்றுக்கொடுப்பதில் கவனம் காட்டுகிறார். எவ்வாறு அதிகாரப் பரவலாக்கல்  பிரச்சினையை நாம் எடுத்துச் செல்கிறோமோ, அதேயளவு வேகமாக இந்த மக்களின்  அடிப்படைத் தேவைப் பிரச்சினையையும் எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே  நாம் இன்று இருக்கிறோம்.
கேள்வி: மீள்குடியேற்றம் சரியாக இன்றும் இடம்பெறவில்லை என்று கூறினீர்கள். இது  மாகாண சபைத்தேர்தலில் எவ்வாறானதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள்  கருதுகிறீர்கள்?
பதில்: நிச்சயமாக வாக்களிப்பு வீதம் குறையும். அதேபோன்று அவர்கள் மத்தியில்  வாக்களிப்பதன் மூலம் என்ன பிரயோசனம் இருக்கிறது? என்றதொரு எண்ணப்பாடு  தோன்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று அந்த மக்கள் இன்று  பலவீனமானதொரு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். இந்த பலவீனத்தை அரசு  நிச்சயமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். இவற்றையெல்லாம் மீறி அவர்கள் தமது வாக்குகளைச் சிதறாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு  வாக்களிக்க வைப்பது என்பது ஒரு பெரிய விடயமாகும். அதற்கான முயற்சிகளை நாம்  எடுத்து வருகிறோம்.
கேள்வி: கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் உங்களது கட்சி எவ்விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது?
பதில்: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள்  போராட்டங்களுக்கு ஆதரவாக நாம் செயற்பட்டு வருகிறோம். அதேபோன்று சட்டரீதியாக கொழும்பில் இருக்கும் வழக்கறிஞர்கள் குறிப்பாக சுமந்திரன் போன்றவர்கள்  அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நாம் உதவியாக இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நான்  சர்வதேசங்களில் இருந்து வருகின்ற தூதுவர்கள், பிரதிநிதிகளை சந்திக்கின்ற  பொழுது இதுதொடர்பில் அவர்களிடம் எடுத்துக் கூறிவருவதுடன், அவர்களை விடுதலை  செய்விப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
கேள்வி: யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தின் கல்வி எவ்வாறானதொரு நிலைமையில் உள்ளது?
பதில்: யுத்தத்தின் பின்னர் எமது குழந்தைகள் கல்வியில் ஒரு நாட்டம்  கொண்டுள்ளார்கள். எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் மின்சாரம் இல்லாத  நிலையில் கூட விளக்கை வைத்து படித்து ஓரளவுக்கு நன்றாக கல்வியில்  முன்னேற்றம் காட்டுகிறார்கள். இதை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை எடுத்து  வருகிறோம். இருந்தபோதும், இதுபோதாது. இன்றைய அவர்களின் வறுமையான  சூழ்நிலையில் பல பிள்ளைகள் பசியுடன் பாடசாலைகளுக்கு செல்கிறார்கள். இதனால்  படிப்பில் சரியாக நாட்டம் காட்ட முடியாது. தவிக்கிறார்கள். இதற்கு உணவு  கொடுப்பதாலோ அல்லது உடைகளை கொடுப்பதாலோ தீர்வை ஏற்படுத்த முடியாது அந்த  குடும்பங்கள் சொந்தக்காலில் நின்று வாழக்கூடிய வகையில் வாழ்வாதாரத்தை  கொடுக்கவேண்டும். அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தினால் அவர்கள் தாங்களாகவே முன்னேறி விடுவார்கள். கையேந்தி வாழும் நிலைமையை நாம் மாற்றவேண்டும். அந்நிலைமை நீண்டகாலத்திற்குச் செல்லக்கூடாது. அவ்வாறு செல்லவும் முடியாது. இதை மாற்றுவதற்கான நடவடிக்கையை நாம் நிச்சயமாக எடுக்கவேண்டும். இன்றும்  வெளிநாடுகளிலிருந்து வருவோரைச் சந்தித்து எமது மக்களின் அத்தியாவசியப்  பிரச்சினைகள் குறித்து பேசி ஒருசில வேலைகளைச் செய்து வருகிறோம். நாம்  மட்டுமல்ல, பலர் இவ்வாறான செயல்களை செய்து வருகிறார்கள். இருந்தபோதும் இவை  போதாது. வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றி  பெற்றால் வடக்கில் மாத்திரமல்ல கிழக்கிலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி  செய்ய எண்ணியுள்ளோம். குறிப்பாக கல்வியில் கவனம் செலுத்தவிருக்கிறோம். இன்று நாம் மிகவும் பின்தள்ளிய நிலையிலேயே இருக்கிறோம். ஆகவே, கல்வியின்  மூலமே நம் முன்னேறமுடியும்.
கேள்வி: நாவற்குளி விகாரை மீதான தாக்குதல் குறித்து?
பதில்: இன்று வடக்கிலே வாழுகின்ற தமிழர்கள் இருக்கும் மனநிலையில், எந்தவொரு  தமிழராலும் நடத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நான் கருதவில்லை. இது  தேர்தலுக்காக அல்லது மக்கள் மத்தியில் ஒருவித பயத்தை தக்க வைத்திருக்க  வேண்டியிருப்பதற்காக ஏதாவதொரு குழுவால் செய்திருக்கக்கூடிய விடயமாகவே நான்  கருதுகிறேன்.
கேள்வி: வெலிவேரிய சம்பவம் பற்றி…?
பதில்: வெலிவேரியாவில் நடந்த சம்பவம் பற்றி சிங்களக்கட்சிகள் எவ்வளவு தூரம்  மிகவும் ஆக்ரோஷமாக சர்வதேச விசாரணை தேவை என்று கோஷமிட்டார்கள். ஆனால், எங்களுடைய தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்தபோது இவர்கள் எல்லாம் கண்ணை  மூடிக் கொண்டிருந்தார்கள். இந்த நாட்டிலுள்ள எதிர்க்கட்சியாக இருக்கட்டும்  அல்லது ஏனைய சிங்களக் கட்சிகளாக இருக்கட்டும். இவர்கள் இந்த வெலிவேரிய  சம்பவத்தை ஒரு பெரிய விடயமாக காட்டுகிறார்கள். அச்சத்தில் மூன்றுபேர்  இறந்தாலென்ன, முப்பது ஆயிரம் பேர் இறந்தாலென்ன அப்பாவி மக்கள் இவ்வாறு  இறப்பது ஒரு பிழையான விடயம். அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வெலிவேரிய சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அதேநேரத்தில் இதைக்கண்டித்தவர்கள் எமது  மக்கள் உயிரிழந்தபோது கண்டிக்காததையே தவறு என்று கூறுகிறோம். இன்றாவது  இவர்களுக்கு தெரிந்திருக்கிறது நாட்டில் இவ்வாறான பிரச்சினைகள்  இருக்கிறதென்று. ஆகவே, இனியாவது உணர்ந்து எல்லாச் சம்பவங்களையும்  விசாரிப்போம் என்று கூறுவார்களா? இன்றுவரை அவ்வாறானதொரு கருத்தை யாரும்  வெளியிடவில்லை.
கேள்வி: முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது பற்றி…?
பதில்: தமிழ் மக்கள் அடக்கப்பட்டு விட்டார்கள். முஸ்லிம் மக்கள் மத்தியிலும்  ஒருவிதமான மனரீதியான பயத்தை உருவாக்கி இந்த நாட்டில் நீங்களும் இரண்டாம் தர பிரஜைகள் தான் என்பதை ஞாபகப்படுத்தி வைத்திருப்பதற்கும், தமிழ் மக்கள்  இராணுவ ரீதியாக முற்றுமுழுதாக அடக்கப்பட்டு விட்டார்கள். முஸ்லிம் மக்கள்  இவை பற்றி சிந்திக்கக்கூடாது என்பதை ஞாபகப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே  நான் இவற்றைப் பார்க்கிறேன்.

வரலாற்றுத் தேர்தலில் உங்களுக்கு வெற்றியென்றால் தமிழ்த் தேசியம் வட மாகாணத்தை ஆட்சி செய்யும்-
வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன்-

120_content_p16_h1
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாம் அவரைச் சந்தித்தபோது எமக்கு தனது நம்பிக்கையை வெளியிட்டு வலுச் சேர்த்ததுடன் இத்தேர்தலில் நிச்சயம் உங்களுக்கே வெற்றியை மக்கள் பெற்றுத் தருவார்கள் எனத் தெரிவித்ததை நான் மறக்க முடியாதுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புகழ்பூத்த அரசியல் ஞானி தர்மலிங்கத்தின் புத்திரரும், புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் தமிழ்; தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் த.சித்தார்த்தனின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம், நவாலியில் வலி. மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் கூறுகையில்,
வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தான் வெற்றி வாகை சூடிப் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி அமைப்பார்கள். இத் தேர்தலில் அரசு சார்ந்த எந்தக் கட்சியும் வெல்ல முடியாது. அந்தளவிற்கு தமிழர்கள் ஒற்றுமையுடன் அணிதிரண்டு விட்டனர்.
கடந்த கால சாத்வீகப் போராட்டம், அதன் பின்னர் ஏற்பட்ட அழிவுகள், பல ஆயிரக்கணக்கான போராளிகளின் இழப்புகள், பல இலட்சக் கணக்கான மக்களின் உயிரிழப்புகள், இன்னும் மீள முடியாத சுமைக்குள் தள்ளப்பட்ட பொதுமக்கள், ஊனமுற்றோர்கள், விதவைகள், அநாதைகள், பிணியாளர்கள் என எமது சமூகம் நொந்துவிட்ட நிலையில் உள்ளது.
இன்று 13ஆவது திருத்தத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என்று, திவிநெகும என்ற அழிவுச் சட்டம், 19ஆவது சரத்து மாற்றம், வடக்கு கிழக்கு துண்டிப்பு, காணி பறிப்புச் சட்டம், இவ்வாறாக அரசும், அரசுடன் இணைந்தவர்களும் ஒத்து ஓதி தமிழ் இனத்தை அழிப்பதற்கு துடிக்கின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அண்மையில் கூறும்போது, விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவே நிச்சயம் வெல்லும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேசும்போதும், வடக்கு மாகாணசபையை தமிழ்த தேசியக் கூட்டமைப்பே வெல்லும் எனவும் நாம் எமது பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம். ஆனால் காணி, பொலீஸ் அதிகாரம் தர மாட்டேன் எனவும் சூளுரைத்துள்ளார்.
இதுதான் ஒரு முக்கியமான விடயமாகும். நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெல்லுவோம் என்பதை மகிந்த ராஜபக்சவே கூறிவிட்டார். நாம் காணி பொலீஸ் அதிகாரம் தொடர்பாக பெரிதும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதனை நாம் சர்வதேசத்தின் வல்லமையுடன் பெற்று கூடுதலான அதிகாரங்களுடன் ஆட்சி அமைப்போம். இதற்குத் தமிழ் மக்கள் தமது பலத்தைக் காட்ட வேண்டும். இதற்காக அர்ப்பணித்து வெற்றியீட்ட முயல வேண்டும். தூங்கிக் கிடக்கின்ற ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களிக்க முன்வர வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளரும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். யார் உங்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றாலும் உங்களது எண்ணம், சிந்தனை யாவும் வீடு என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது. இவ் வரலாற்றுத் தேர்தலில் உங்களுக்கு வெற்றியென்றால் தமிழ்த் தேசியம் வட மாகாணத்தை ஆட்சி செய்யும் என வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் வலி. தென்மேற்குப் பிரதேச சபை உப தவிசாளர் சண்முகம் சிவகுமார், வலி. தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் சின்னத்துரை மகேந்;திரன் ஆகியோரும்  உரையாற்றினார்கள்.

News

Posted by plotenewseditor on 17 August 2013
Posted in செய்திகள் 

எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவிற்கு விஜயம்-

எதிர்;க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். அவர் அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து, இந்திய அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளின்போது, வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படுமென கூறப்படுகிறது.

நீதியமைச்சர் ஹக்கீமின் இந்தோனேசிய விஜயம்-

நீதி அமைச்சர் ரவுக் ஹக்கீம் நாளைய தினம் இந்தோனேசியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஆட்கடத்தல் மற்றும் தஞ்ச கோரிக்கையாளர்கள் குறித்த அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவுள்ளனர். சர்வதேச ரீதியாக ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துதல், மற்றும் அரசியல் அந்தஸ்து கோரியுள்ளவர்களின் உரிமைகள் தொடர்பில் இம்மாநாட்டில் கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த, புலம்பெயர்ந்த வாக்காளர்களின் விபரம் கோரல்-

2012 ஆம் ஆண்டின் வாக்காளர் தேர்வு இடாபில் பதிவு செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உயிரிழந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கிராம அலுவலர்களுக்கு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். அவர்களின் விவரங்கள் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியினருக்கும் வழங்கப்படவுள்ளன. வாக்காளர் அட்டைகளை உரியவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பயன்படுத்தித் தேர்தல் மோசடி செய்ய முற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தச் செயற்பாடு மேற்கொள்ளப்ப டுகிறது. 2012ஆம் ஆண்டின் வாக்காளர் தேர்வு இடாப்பில் பதிவுசெய்து வாக்காளர்களாக உள்ளவர்களில் யாராவது உயிரிழந்திருந்தால் அல்லது வெளிநாடுளுக்குச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டால் அத்தகையவர்களின் பெயர் விவரம், தொடரிலக்கம் உள்ளிட்ட விடயங்களைப் பதிவுசெய்து அனுப்புமாறு கிராம அலுவலர்களிடம் தெரிவத்தாட்சி அலுவலர்களால் கோரப்பட்டுள்ளது.     யாழில் நான்கு இளைஞர்கள் கைது- யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல். விக்கிரமராச்சி நேற்று அறிவித்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட 4 இளைஞர்களையும், விசாரணையின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமரை மாநாட்டிற்கு அழைக்க அமைச்சர் டில்லி விஜயம்-

கொழும்பில் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாளை இந்தியா செல்லவுள்ளார். இந்தியா செல்லும் அவர், புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமருடனான சந்திப்பின்போது, கொழும்பில் நவம்பர் 15-17 வரை நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் உறுப்பு நாடு என்ற முறையில் பங்கேற்க வரும்படி முறைப்படி அழைப்பு விடுக்கவுள்ளார். எனினும் இக்கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகினறமையும், உலக நாடுகள் பங்கேற்கும் இக்கூட்டத்தை அரசியல் காரணங்களைக் கூறி தவிர்க்கக்கூடாது என மத்திய அரசு கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பளை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-

பளையில் நேற்றுமாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வரலக்ஷ்மி பூஜை வழிபாடுகள் இரட்டைக்கேணி அம்மன் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை அவசரமாக வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் இருவர் எடுத்துச் சென்றுள்ளனர். சிகிச்சையின் பின்னர் மீண்டும் பளை நோக்கி வந்துகொண்டிருக்கையில், தலைக்கவசம் அணிந்திராத பயத்தினால் பொலீசாரை கண்டவுடன் வேறு ஒரு பாதைக்கு சைக்கிளை திருப்ப முனைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் பின்னால் வந்துகொண்டிருந்த பஸ் மோதியதிலேயே விபத்து நிகழ்ந்துள்ளதாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விபத்தில் பலியானவர் 54 வயதுடைய வயிரன் தியாகராசா என்றும், இவர் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர் எனவும் தெரியவருகிறது.

நவநீதம்பிள்ளைக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் மகஜர் அனுப்பி வைப்பு-

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை செல்லும் முன்னர் 47 அரசசார்பற்ற நிறுவனங்கள் அவருக்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று விசாரணை நடத்துமாறும், வடக்கில் உள்ள மக்களை தனிப்பட்ட ரீதியாக சந்தித்து தகவல்களை கேட்டறியுமாறும் அவை கோரிக்கை விடுத்துள்ளன. இதனை மேலும் சில விடயங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும் இந்த அமைப்புகள் மனித உரிமை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நீதிமன்ற ஆவணங்கள், பொலீஸ் அறிக்கைகள், அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்துமாறு இந்த அமைப்புகள் கோரியுள்ளன. இதனை தவிர நவநீதம்பிள்ளை வடக்கு பகுதிக்கு விஜயம் செய்யும்போது, இராணுவம் அல்லது பொலீஸ பாதுகாப்பை பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் இந்த அமைப்புகள் கோரியுள்ளன. அதேவேளை பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட 800 பேர் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து செயற்படும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றே நவநீதம்பிள்ளைக்கு மேற்படி மகஜரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இதனிடையே அமெரிக்கா இலங்கை தொடர்பாக விசாரணை நடத்தவே ஐ.நா ஆணையாளரை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.