இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதி கோரி தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் அனுமதி கோரி, அரசினர் தீர்மானத்தை முதல்வர் பேரவையில் முன் வைத்து பேசினார். இந்த தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது, இலங்கைக்கு உதவ, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி கேட்டும் இதுவரை பதில் வரவில்லை.

தமிழகத்திலிருந்து ரூ.25 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உதவி பொருள்களை அனுப்பி வைக்க அனுமதி தேவை. இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்பதே விருப்பம்.

 இலங்கை மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இலங்கை முழுவதும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து முதல்வர் முன்வைத்த தீர்மானத்தின் மீது பேரவையில் உறுப்பினர்கள் பேசினர். பிறகு தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது