கிளிநொச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தமிழ்த் தேசிய கூட்டு மே தின பேரணி இன்று பி.ப. 2.00 மணிக்குக் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமாகியது.

இதன்போது தமிழர் தாயகத்தை அங்கீகரிக்கக் கோரியும், வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், தமிழர் தாயகப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும், நீண்டகாலம் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், குறிப்பாக நாட்டு மக்களை வாட்டும் அதிகரித்த விலைவாசிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் இப்பேரணி இடம்பெற்றது.

இதன்போது அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு பேரணி நகர்ந்து சென்றதுடன், தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்களையும் அடக்கு முறைகளையும் சித்தரிக்கும் வகையிலான ஊர்திகளும் பவனியாகச் சென்றிருந்தன.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை, விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட கருத்துக்களை உள்ளடக்கிய வாகனங்களும் குறித்த பேரணியில் பங்கு கொண்டிருந்தன.

மேற்படி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.