மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பாகவும், மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இன்று (31.05023) காலை 9.30மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது தமிழீழ விடுதலை இயக்கம் பிரசன்னா இந்திரகுமார்,(கட்சி உபதலைவர்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் கேசவன் (கட்சி உபதலைவர்), ஜனநாயக போராளிகள் கட்சி நகுலேஸ், (கட்சி உபதலைவர்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இரா.துரைரெத்தினம், யோ.ரஜனி (வெல்லாவெளி மு.தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சினைகளை முன் வைத்திருந்தனர்.
1. பாலர்பாடசாலை கல்விப் பணியகத்தின் கீழ் கடமையாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்.
2. எல்லைப் புறங்களிலுள்ள குறிப்பாக, மயிலத்தமடு, மாதவணை பகுதியில் கால்நடைகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. பாலர்பாடசாலை கல்விப் பணியகம், சுற்றுலாத்தறை அமைச்சு, வீடமைப்பு அதிககாரசபை, தனியர் போக்குவரத்து சபை போன்றவற்றை முன்னேற்றகரமாக செயற்பட வைத்தல்
4. ஆசிரியர்களை சமப்படுத்துதல்
5. பயிற்சியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை (மேலதிக) ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குதல்
6. மாவட்டத்தில் போக்குவரத்து செய்யும் மண்டூர், திகிலிவட்டை, அம்பிளாந்துறை பாதைகள் ஊடாக போக்குவரத்து செய்கின்றவர்களிடமிருந்து நிதி அறவீடு செய்வதை தடுத்து நிறுத்துதல்
7. கிழக்கு மாகாணசபையின் கீழ் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் கடமை புரிகின்றவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்
8. சிரேஸ்ட பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுகின்றவர்கள் நீதியான முறையில் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இது போன்ற பல்வேறு விடயங்கள் முன் வைக்கப்பட்டபோது இவற்றில் பலவற்றுக்கு விரைவில் தீர்வுபெற்றுத் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.