ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளரை அறிவிப்பதற்கான அதிகாரத்தை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 779 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34 (1) ஆவது சரத்தின் பிரகாரம், குறித்த 779 சிறைக்கைதிகளுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, புனித ரமழான் நோன்புப் பண்டிகை மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில், சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு சிறப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஓமான் வளைகுடாவில் மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்த இலங்கையர்களில் ஐவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலிலிருந்து மீட்கப்பட்ட மற்றையவர்கள் நலமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஓமான் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் ஈரான் அவசர படையினரால் நேற்று மீட்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி நிலையிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 9 பேர் கொண்ட குழுவொன்று இந்த பயணத்தில் இணைந்துள்ளது. அதன்படி அவர்கள் இன்று அதிகாலை 12.55 மணி அளவில் தாய்லாந்தின் பெங்கொக் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.