இலங்கைக்கு வருகைதந்த ஈரானிய உள்துறை அமைச்சரை கைது செய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா கோரியிருந்த நிலையில், குறித்த அமைச்சர் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸியுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை என ஏஎஃப்பி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. 1994ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவின் தலைநகரில் யூத சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் தற்போதைய உள்துறை அமைச்சர் அஹமட் வஹ்டியே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சர் ஈரான் ஜனாதிபதியுடன், பாகிஸ்தான் சென்ற பின்னர் இலங்கை வருவதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும், அவரை கைது செய்ய வேண்டும் என இன்டர்போல் சர்வதேச அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.
ஆர்ஜென்டினாவின் வேண்டுகோளை தொடர்ந்தே இன்டர்போல் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது. இலங்கையும், பாகிஸ்தானும் ஈரானின் உள்துறை அமைச்சரை கைது செய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா கோரியிருந்தது.
எனினும், அவர் செவ்வாய்கிழமை ஈரானுக்கு திரும்பியிருந்ததாக ஈரானின் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை வந்த ஈரானிய குழுவில் அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அஹமட் வஹ்டி இடம்பெற்றிருக்கவில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஏஎஃப்பிக்கு தெரிவித்துள்ளார்.