இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து, இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாகங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு, 14 பேர் கொண்ட வடபகுதி மீனவர்கள் கடல் வழியாக படகு மூலம் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் ரவி, தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாகங்களின் சம்மேளனத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர் புனிதபிரகாஸ், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் நடவடிக்கையினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், தமது தரப்பு இந்தியாவுக்கு செல்லும் என குறிப்பிட்டார்.