Header image alt text

யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பனர்களிடையேயான விசேட சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், ராகவன், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக சங்கையா ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான இரண்டு போனஸ் ஆசனங்களை யார் யாருக்கு கொடுப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது பல விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்த காரணத்தினால் இது தொடர்பாக உடனடியாக முடிவெதுவும் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையாளர் கூட்டமைப்பின் இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு இருவரைத் தெரிவுசெய்து பரிந்துரைக்குமாறு அறிவிக்கும்போது இதுபற்றி தீர்மானிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதுபோல் முதலமைச்சர் தவிர்ந்த ஏனைய நான்கு அமைச்சர்கள் சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பிலும் இறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சிறுபான்மையினர் சமமாக மதிக்கப்படல் வேண்டும்- பா.சிதம்பரம்-

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய நிரந்தரத் தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமைக்கு பாராட்டுத் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். மாகாணங்களுக்கான அதிகபட்ச சுயாட்சி, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு, தமிழர்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மையினர் சமமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கான சமஉரிமை இதன்மூலம் கிடைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தாயகத்தில் தமிழர்களின் பாராம்பரிய உரிமைகள் ஏற்றுகொள்ளப்படுவதுடன் நாட்டின் ஆட்சியில் போதுமான பங்குபற்றுதலை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை இந்த வெற்றியின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளதாகவும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

படகு அகதிகள் தொடர்பில் தகவல் வழங்கப்பட மாட்டாது-அவுஸ்திரேலியா-

அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் வரும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்களை இனிமேல் வழங்கப்போவதில்லை என அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் சட்டவிரோத அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட நடவடிக்கைகளை அவுஸ்திரேலியாவின், விசேட படையினர் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட விடயங்களை மனித உரிமை காப்பு அமைப்புக்கள் விமர்சனம் செய்து வருவதால், படகு அகதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குவதை தவிர்க்கவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார். சட்டவிரோத படகுகளை தடுப்பது அவுஸ்திரேலிய மக்களின் நலன்களை கருத்திற்கொண்டது ஆகவே தேவையேற்படும்போது மாத்திரம் சட்டவிரோத படகு அகதிகள் தொடர்பான தகவல்களை வழங்கவிருக்கிறோமென மொரிசன் கூறியுள்ளார் இதேவேளை கடந்த 12 மாதங்களுக்குள் அவுஸ்திரேலியாவுக்கு 400 படகுகளில் 45ஆயிரம் பேர் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு நிர்வாகத்துக்கு அரசு ஆதரவு தரவேண்டும் -அமெரிக்கா வலியுறுத்தல்-

வடக்கில் மாகாண சபைமூலம் தெரிவாகியுள்ள புதிய குடியியல் நிர்வாகத்திற்கு இலங்கை அரசு முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வடக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை தாமே தெரிவுசெய்துள்ளனர். எனவே, இலங்கையரசு வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்திற்கு தமது ஆதரவை வழங்க வேண்டும் என அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜென் சாக்கி கோரிக்கை விடுத்துள்ளார். புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் மூன்று மாகாணசபைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்திமுடித்தமைக்கு இலங்கை மக்களுக்கு அமெரிக்கா நன்றி கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரட்டைக் குடியுரிமை கால தாமதம்-

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் தொடர்ந்தும் கால தாமதம் நிலவி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை சில ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளது கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக இரட்டைக் குடியுரிமை வழங்குதல் குறித்த உத்தேச சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி சில ஆண்டுகள் கடந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக காத்திருக்கின்றமையே கால தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மீண்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என சூலானந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐ.நாவில் உரை- ஐக்கிய நாடுகள் சபையின் 62வது பொதுச் சபை மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றவுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் ஆறாவது தடவையாக இம்முறை ஐ.நா. பொதுச்சபை மாநாட்டில் உரையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று 2006ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் முதலாவதாக உரையாற்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து இம்முறை ஆறாவது தடவையாக அவர் இன்றைதினம் உரையாற்றவுள்ளார். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி உரையாற்றுவாரென கூறப்படுகின்றது.