லயன் எயாரில் பயணித்தோரை அடையாளம் காண ஏற்பாடு-
14 வருடங்களுக்கு முன் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் லயன் எயார் அன்டனோவ் 24 ரக உள்நாட்டு பயணிகள் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடைகளை காட்சிப்படுத்தி உயிரிழந்தவர்கள் தொடர்பில் கண்டறிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி மற்றும் 12ஆம் திகதிகளில் யாழ் நகரசபை மண்டபத்தில் இந்த ஆடைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்போது 72 ஆடைகள், அடையாளம் காண்பதற்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதனால், லயன் எயார் விமானத்தில் பயணித்து உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் குறித்த இரு தினங்களில் யாழ். விளையாட்டரங்குக்கு வருகைதந்து உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழில் வாக்குமூலம் பதிவு செய்யாத பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை-
தமிழ் மொழியில் வாக்குமூலங்களைப் பதிவுசெய்யத் தவறும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக பொதுமக்கள் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யலாம் எனவும் அந்த உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடமாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி க.தியாகராஜா இன்று தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வட மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளையும், வாக்குமூலங்களையும் தமிழ்மொழியில் பதிவு செய்வதற்கான உரிமை உண்டு. அந்த உரிமையின் பிரகாரம், பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வாக்குமூலத்தினை தமிழில் பதிவு செய்வதற்கு மறுப்புத் தெரிவித்தால், மறுப்புத் தெரிவித்த அந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் பெயர், திகதி, முறைப்பாடு பதிவு செய்யச்சென்ற நேரம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு வடமாகாண பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்கத் தூதுவர் இலங்கைக்கு விஜயம்-
போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் விசேட தூதுவர் இலங்கை வந்துள்ளார் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்த தூதுவர் ஸ்டீவன் ஜே ரெப் இலங்கையில் பல தரப்பினரையும் சந்திக்கவுள்ளார் இதன்போது குடியியல் அமைப்புக்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்று முன்வைக்கப்படுவதற்கு முன்னர் ரெப் இலங்கை வந்து சென்றிருந்தார்.
பாரத லக்ஸ்மன் கொலை தொடர்பாக பிரதிவாதியை கைது செய்ய உத்தரவு-
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் முதலாவது பிரதிவாதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் முதலாவது பிரதிவாதி ஆஜராகியிருக்கவில்லை. வழக்கின் மூன்றாவது பிரதிவாதி சுகயீனமுற்றுள்ளதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர். பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் 11ஆவது பிரதிவாதியான துமிந்த சில்வா எம்.பி பாராளுமன்றில் இன்று ஆஜராகியிருந்தார். வழக்கு பெப்ரவரி 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போகம்பறை சிறைக் கைதிகளின் போராட்டம் நிறைவு-
கண்டி போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கைதிகள் தமது பேராட்டத்தை கைவிட்டுள்ளனர். மரணதண்டனை மற்றும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உள்ளிட்ட 27பேர் கூரைமீதேறி கடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை இலகுப்படுத்துமாறு இவர்கள் கோரியிருந்தனர்.
யாழில் பாலியல் கொலைகள் அதிகரிப்பு-
யாழ் மாவட்டத்தில் பாலியல் தொடர்பான படுகொலைகள் அதிகரித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் நிலையில் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சாட்சிகளை இல்லாது செய்யும் பொருட்டே இவ்வாறான கொலைகள் இடம்பெறுகின்றன என சட்ட வைத்திய அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை-
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இம்மாத இறுதியளவில் அரசாங்கத்திற்கு கையளிக்கப்படும் என ஆணைக்குழுவின் செயலாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தமது ஆணைக்குழுவிற்கு பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மீனவர்களின் தொழில் பாதிப்பு-
மன்னார் கடல் வழியாக உருவாகும் தாழமுக்கம் முல்லைத்தீவு கடல் வழியாக காங்கேசந்துரையை கடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்கள் இன்றுகாலை கடற்தொழிலுக்குச் செல்லவில்லை. மன்னாரில் தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருப்பதோடு கடற்காற்;றும் வீசி வருகின்றது. இந்நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்களை மறு அறிவித்தல்வரை கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட அனர்;ந்த முகாமைத்துவ பிரிவினர் அறிவித்தல் வழங்கியுள்ளனர். இதேவேளை தொழிலுக்குச் சென்ற மீனவர்களை கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடல் தாமரை போராட்டம்-
இராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்குவதைக் கண்டித்து தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கடல் தாமரை என்ற பெயரில் ஜனவரி 31ஆம் திகதி நடத்தப்படவுள்ள போராட்டத்திற்கு பாஜக லோக்சபா தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குவார்; என பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனக்கு பக்க பலமாக இருந்த ஒரே காரணத்திற்காக தமிழர்களை மொத்தமாக இலங்கை அரசு கொன்று குவித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
நோர்வே பிரஜை கடலில் மூழ்கிப்பலி-
காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனவட்டுன கடலில் குளித்துக்கொண்டிருந்த நோர்வே பிரஜை கடலில் மூழ்கிப்பலியாகியுள்ளார் என ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 46 வயதான நோர்வே நாட்டு பிரஜையின் சடலம் கராப்பிட்டி வைத்தியசாலையில் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மரண பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஹபரண ஹோட்டலில் இருந்து ரஸ்ய பிரஜையின் சடலம் மீட்பு-
மாத்தளை மாவட்டத்தின் ஹபரண பொலிஸ் பிரிவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து ரஸ்ய நாட்டுப் பிரஜை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 65 வயதுடைய ரஸ்ய பிரஜையே இன்றுகாலை தனது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சடலம் ஹோட்டல் அறையிலேயே வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. ஹபரண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வாகனங்களில் இருந்து விஐபி, விவிஐபி என்ற பெயர் நீக்கம்-
வாகனங்களில் விஐபி மற்றும் விவிஐபி என பெயர் பொறிக்கப்பட்டுவதை பொலிஸார் தடை செய்துள்ளனர். வீதிகளில் விஐபி மற்றும் விவிஐபி என பெயர் பொறிக்கப்பட்ட வாகனங்களிலிருந்து அந்த பெயர்களை அகற்றும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.